நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணைவேந்தர் பாஸ்கர், கோயில் விழாவில் பங்கேற்று பரவசத்துடன் நடனமாடும் காட்சிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு பொறுபேற்றவர், முனைவர்.கி.பாஸ்கர். அவர் பொறுபேற்ற பின்னர் பல்வேறு அதிரடித் திட்டங்களை செயல்படுத்தி சர்ச்சைகளை உருவாக்கி வருகிறார். தேர்வுக் கட்டணத்தை அதிரடியாக அதிகரித்ததால் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தார்கள். தற்போது ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதக்கூடாது என உத்தரவிட்டதால் மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர். மாணவர்களிடம் மட்டும் அல்லாமல், பேராசிரியர்களிடமும் அவர் அதிரடி காட்டி வருகிறார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களை செயல்படவிடாமல் முடக்கும் அளவுக்கு செயல்பட்டு வருவதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. ஆசிரியர் சங்கமான ‘மூட்டா’ அமைப்பில் இருப்பதாக வெளிக்காட்டவே பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலரும் அச்சம் கொள்ளும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக அந்த அமைப்பினர் பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்.
பல்கலைக்கழக பேராசிரியர்கள் அனைவரும் தாங்கள் வகுப்பெடுக்கும் மாணவர்களின் வருகைப் பதிவை எடுப்பதுடன் அதை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட்டிருக்கிறார். அத்துடன், ஒவ்வொரு வகுப்பிலும் பேராசிரியர்கள் எடுத்த பாடம் பற்றிய தகவலையும் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதனால் பேராசிரியர்கள் அனைவரும், தங்களை நோட்ஸ் ஆஃப் லெசன்’ எனப்படும் பாடக்குறிப்பு எழுதுமாறு துணை வேந்தர் நிர்ப்பந்திப்பதாக புலம்புகின்றனர். இத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியிலும் அவரது காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதை பலரும் ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள். பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சுவர் அமைத்தல், கட்டடங்கள் கட்டுதல் ஆகியவற்றுடன் 120 அடி உயரத்தில் நாள்முழுவதும் பறக்கும் அனுமதியுடன் கூடிய தேசியக் கொடி அமைத்து அனைவரின் புருவத்தையும் உயரச் செயதார். அத்துடன், பல்கலைக்கழகத்தை ’ஏ’ தரவரிசை பெறும் அளவுக்கு தரம் உயர்த்தி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். மேலும், பல்கலைக்கழகத் தேவைக்காக நாள்தோறும் ஒரு மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட சூரிய மின்சக்தி அமைத்துள்ளார். நாட்டிலேயே முதல்முறையாக இத்தகைய திட்டம் இங்கு செயல்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் துணைவேந்தர் கி.பாஸ்கர், கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்று பரவசத்துடன் நடனம் ஆடும் வீடியோ காட்சி வைரலாகப் பரவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த கிருஷ்ண ஜயந்தி விழாவின்போது நெல்லை அருகன்குளம் பகுதியில் அமைந்துள்ள எட்டெழுத்து பெருமாள் கோயிலுக்கு துணைவேந்தர் பாஸ்கர் சென்றுள்ளார். அப்போது அவரை வரவேற்ற அந்தக் கோயிலின் நிர்வாகியான ராஜூ சுவாமியுடன் துணை வேந்தர் பாஸ்கரும் பரவச நிலையில் நடனமாடினார். பொதுவாக, பெருமாள் கோயில்களில் சாமியாட்டம் நடைபெறுவதில்லை. ஆனால், எட்டெழுத்து பெருமாள் கோயிலில், அதன் நிர்வாகி ராஜூ சாமி பரவசத்துடன் ஆடிய நிலையில் அவருடன் சேர்ந்து பாஸ்கரும் ஆட்டமிட்டுள்ளார். ஆட்டத்தின்போது அவரது கையில் சிறிய குச்சி கொடுக்கப்பட்டது. இரு கைகளாலும் அதனைப் பிடித்துக் கொண்ட துணைவேந்தர், மேலாடை இல்லாமல் மாலை அணிந்தபடியே நடனமாடி வழிபாட்டில் பங்கேற்றார்.
பரவசத்துடன் அவர் சுமார் 10 நிமிடங்கள் நடனமாடி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ வாட்ஸ்அப் மூலமாக நெல்லையில் பரவி வருகிறது. அந்த வீடியோவைப் பார்க்கும் மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் அடுத்தடுத்து ஃபார்வேர்ட் செய்வதால் அந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.