நீட்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு! தமிழக அமைச்சரவை ஒப்புதல் #NowAtVikatan

14.7.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
நீட்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு!

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழு பரிந்துரை செய்திருந்தது. இந்தநிலையில், 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
சாத்தான்குளம்: சிபிஐ கோரிக்கை!

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியுள்ளது. சிபிஐ மனு மீது மதுரை நீதிமன்றத்தில் தற்போது விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த வழக்கில் கைதான 5 போலீஸார் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணையின் போது சிபிஐ விசாரணைக்கு செல்ல போலீஸார் ஐவரும் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் சிபிஐ கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், 5 காவலர்களையும் 3 நாள் சிபிஐ விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.