
ஆதலையூர் த.சூர்யகுமார்


முதல் திரி ஃபேஸ் - மின்சார தினம்!
சர்வதேச அளவில் மின்சாரப் பயன்பாடு - மின்சாதனப் பொருள்கள் கண்காட்சி, ஜெர்மனியின் புராஸ்பாட் நகரில் 1891 -ம் ஆண்டு நடந்தது. இன்று உலக அளவில் பயன்படுத்தப்படும் ‘திரி ஃபேஸ் கரன்ட்’ (மும்முனை மின்சாரம்) இந்தக் கண்காட்சியில்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு பயன்பட்டது.

தெரியுமா?
இந்தியாவின் நீளமான ஆறு, கங்கை. சுமார் 2,525 கி.மீ.

விலையில்லா உணவு முதலில் அறிவித்த தினம்!
‘கான்ஸ்டாண்டி நோபிள்’ என்ற பெயரில், உலக அளவில் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடு உள்ளது. 1453-ம் ஆண்டு, இந்த நாட்டைத் துருக்கியர்கள் கைப்பற்றியதால், ஐரோப்பா-ஆசியா இடையே நில வழிப் பாதை அடைக்கப்பட்டது. பிறகுதான் புதிய கடல் வழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கி.பி.332-ம் ஆண்டு, இந்த நாட்டை ஆண்ட கான்ஸ்டான்டைன் என்கிற மன்னர், தன் நாட்டு மக்களுக்கு இலவசமாக உணவுப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.


பிபின் சந்திரபால் நினைவு தினம்!
இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், பிபின் சந்திரபால் மூவரையும் ‘சுதந்திரப் போராட்ட மும்மூர்த்திகள்’ எனக் குறிப்பிடுவர். இவர்களைச் செல்லமாக, ‘பால்-லால்-பால்’ என அழைப்பார்கள். இவர்களில் பிபின் சந்திரபால், ‘புரட்சிக் கருத்துகளின் தந்தை’ என்று அழைப்படுகிறார். சிறந்த மேடைப் பேச்சாளார், எழுத்தாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, தனது வழிகாட்டியாக பிபின் சந்திரபாலை ஏற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரக் காற்றைச் சுவாசிக்காமலேயே 1932-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி இந்த மண்ணுலக வாழ்வை நீத்தார், சந்திரபால்.

ராஜாராம் மோகன்ராய் பிறந்த தினம்!
மூடநம்பிக்கைகளில் மூழ்கிக்கிடந்த மக்கள் இடையே சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்டு செல்ல, ‘பிரம்ம சமாஜம்’ என்ற அமைப்பை நிறுவியவர். இந்தியாவில் தொடங்கப் பட்ட முதல் சீர்திருத்த இயக்கம் இது. முகலாய மன்னரான இரண்டாம் அக்பர், இவருக்கு ‘ராஜா’ என்ற பட்டத்தை வழங்கினார். ‘இந்திய மறுமலர்ச்சியின் தந்தை’ என்றும், ‘நவீன இந்தியாவின் விடிவெள்ளி’ என்றும் அழைக்கப்படுகிறார்.



இலங்கை பெயர் மாறிய தினம்!
நமது அண்டை நாடான இலங்கை, 1972 -ம் ஆண்டு மே 22-ம் தேதியிலிருந்து புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பின்பற்றத் தொடங்கியது. அதுவரை ‘சிலோன்’ என்று அழைத்து வந்த தன் நாட்டுப் பெயரை ‘ஸ்ரீலங்கா’ என்று மாற்றிக்கொண்டது.



எட்டிய எவரெஸ்ட்!
‘முயன்றால் எவ்வளவு உயரத்தையும் தொட்டு விடலாம்’ என்பார்கள். 1953-ம் ஆண்டு மே 29-ம் தேதி, எட்மண்ட் ஹிலாரியும் டென்சிங் நார்கேயும் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டார்கள். முதன்முதலில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர்கள் இவர்கள்தான்.