
சி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார்! - குமுறும் கனகராஜின் அண்ணன்
ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் கார் ஓட்டுனராக இருந்த கனகராஜின் மரணம் பூதாகரமாகியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் விவசாயம் செய்து வருகிறார் கனகராஜின் அண்ணன் தனபால். அவரிடம் பேசினோம். எடுத்த எடுப்பிலேயே, “என் தம்பி மரணத்தின் பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் (“முதல்வரைக் கைகாட்டும் கனகராஜ் அண்ணன்” என்று 7.5.17 தேதியிட்ட ஜூ.வி் இதழில் தனபாலின் பேட்டியை வெளியிடிருந்தோம்.) என்று அப்போதே ஜூனியர் விகடனுக்கு பேட்டி கொடுத்தேனே... இப்போது பார்த்தீர்களா?”என்று கொட்டித் தீர்த்துவிட்டார் தனபால். சரி, இப்போது என்ன சொல்கிறார் தனபால்?
‘‘எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட சமுத்திரம் கிராமம்தான் எங்களின் சொந்த ஊர். நாங்கள் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள். சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த சரவணன் மூலமாக, 2008-ம் ஆண்டு என் தம்பி கனகராஜ் போயஸ் கார்டனில் வேலைக்குச் சேர்ந்தான். விரைவில் அம்மாவிடமும், சின்னம்மாவிடமும் நன்மதிப்பைப் பெற்று அவர்களின் பர்சனல் டிரைவர் ஆனான். அம்மாவும், சின்னம்மாவும் வெளிமாவட்டங்களுக்குச் சென்றால், என் தம்பிதான் காரை ஓட்டிச்செல்வான். இந்தநிலையில், சேலம் புறநகர் பகுதியில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து அரசியல் செய்துவந்த சரவணனும், என் தம்பியைப்போலவே மர்மமாக கார் விபத்தில் மரணம் அடைந்தார்.

அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக ஆனார். தன்னை மீறித் தொகுதியில் யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்று நினைப்பவர் அவர். என் தம்பி கார்டனில் இருந்ததால், அவனது சிபாரிசில் சேலம் புறநகர் பகுதியில் நான் வளர்த்துவிடுவேன் என்ற பயம் பழனிசாமிக்கு இருந்தது. பழனிசாமியின் சூழ்ச்சியால் 2013-ல் கார்டனிலிருந்து என் தம்பி வெளியேறினார். ஆனாலும், அவ்வபோது கார்டனுக்குப் போவதும் வருவதுமாக இருந்தார்.
2017 ஏப்ரல் 28-ம் தேதி, சேலம் - ஆத்தூர் நெடுஞ்சாலையில் தென்னங்குடிபாளையம் மலர் மெட்ரிக் பள்ளி அருகே இரவு 8.30 மணி அளவில் சாலை விபத்தில் என் தம்பி மரணமடைந்ததாகத் தகவல் கொடுத்தனர். அப்போது கோவையில் இருந்த நான், ஐந்து மணி நேரத்துக்குள் விபத்து நடந்த இடத்துக்குச் சென்றுவிட்டேன். விபத்து நடந்ததற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை. தம்பியின் பைக்கும், விபத்து ஏற்படுத்திய காரும் அங்கு இல்லை. ஆத்தூர் காவல் நிலையத்துக்குக் கொண்டுபோய்விட்டார்கள். விபத்து நடந்த மூன்றாவது நாளில் ஆத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு இடமாற்றம் செய்யப்பட்டார். எடப்பாடியில் அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த சுரேஷ்குமார் தினமும் நான்கைந்து மணி நேரம் என் தம்பியிடம் போனில் பேசியிருக்கிறார். பழனிசாமிக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டுமே எடப்பாடியில் இன்ஸ்பெக்டராக இருக்க முடியும். அப்படியிருக்கும்போது, என் தம்பிக்கும் எடப்பாடி இன்ஸ்பெக்டருக்கும் என்ன தொடர்பு? அவர் அவ்வளவு நேரம் பேசுவதற்கு என்ன காரணம்? என் தம்பி மரணத்தில் இப்படி விடை தெரியாத மர்மங்கள் நிறைய உள்ளன. சி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி நிச்சயம் சிக்குவார். என் தம்பியின் ஆன்மா, பழனிசாமியைச் சும்மா விடாது’’ என்றார் ஆவேசமாக!

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய சேலம் சரக டி.ஐ.ஜி செந்தில்குமார், “கனகராஜ் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் ராங் சைடில் வந்ததால், கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இது முழுக்க முழுக்க சாலை விபத்தால் நேர்ந்த உயிரிழப்புதான்” என்று சொல்லியிருக்கிறார்.
- வீ.கே.ரமேஷ் படங்கள்: க.தனசேகரன்