
சுட்டி ஸ்டார் நியூஸ்!


வேங்கை ரகசியம்!

வேங்கை என்றதும் சீற்றம்தான் நினைவுக்கு வரும். ஆனால், அவை கூச்சச் சுபாவம்கொண்டவை. ஆசியச் சிறுத்தையே (Asiatic cheetah) வேங்கைப்புலி எனப்படுகிறது. முன்பு இந்தியாவில் பரவலாகக் காணப்பட்ட இவை, வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அதிகம் வேட்டையாடப்பட்டன. இப்போது மிக அரிதாகவே உள்ளன. இரானில்தான் ஓரளவு இருக்கின்றன. வேங்கைப்புலியின் காலடித் தடத்தை ‘புக்மார்க்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதைவைத்து ஒரு வேங்கையின் வயது, எடை, உயரம் போன்ற விஷயங்களைக் கணக்கிடுவார்கள்.

செவ்வாய் கிரகத்தில் காற்றின் சத்தம்!

செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பிய ‘இன்ஸைட் லான்டர்’ என்ற செயற்கைக்கோள், அங்குள்ள காற்றின் சத்தத்தை ஒலிப்பதிவு செய்துள்ளது. வினாடிக்கு 5 முதல் 7 மீட்டர் வேகத்தில் வீசிய காற்று, இன்ஸைட் லான்டரின் சோலார் பேனல்களில் கடந்ததை சென்சார் பதிவுசெய்துள்ளது. ‘சிறிய கொடி ஒன்று காற்றில் அசைவது போன்றது’ எனப் பரவசமாகச் சொல்கிறார்கள் ஆய்வுக் குழுவினர்.

சேற்று எரிமலை

எரிமலை என்றதும் தீக்குழம்பும் சாம்பலும் மனதில் தோன்றும். ஆனால், உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சேற்றைக் கக்கும் எரிமலைகளும் உண்டு. அதில், சிலர் சேற்றுக் குளியல் நடத்துவதுண்டு. அந்தமானின் பாரான் தீவில் சேற்று எரிமலை உள்ளது. இது, 1983ஆம் ஆண்டு சேற்றைக் கக்குவதற்குப் பதிலாக சீற்றத்தை ஏற்படுத்திவிட்டது. 2005ஆம் ஆண்டில் வெடித்தும் உள்ளதாம்.

பறக்கும் மீன்

எக்ஸோகோடிடே (Exocoetidae) என்பது, மீன் குடும்பத்தைச் சார்ந்த ஒரு வகை. அட்லான்டிக் கடல் பகுதியில் அதிகமாகக் காணப்படும். நீர்மட்டத்துக்கு மேலே மிக வேகமாக நீந்தியும் காற்றில் தவழ்ந்தும் செல்லும். அதற்கேற்ப இவற்றின் துடுப்புகள் பெரியதாக இறக்கையைப் போன்று விரியும். ஒரு விமானம் ரன்வேயில் ஓடி மேலெழும்புவது போன்று இவை நீரில் செய்யும். ஆகவே, இவற்றை ‘பறக்கும் மீன்கள்’ என்பார்கள். சில சமயம் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும்.

கிராமப்புற விஞ்ஞானிகளுக்கு விருது

கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து, பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வர, ஆண்டுதோறும் 2 கண்டுபிடிப்பாளர்களுக்குக் ‘கிராமப்புற விஞ்ஞானி’ விருதும், தலா 1 லட்சம் ரூபாய் பரிசும் வழங்க வேண்டும் என ‘அறிவியல் நகரம் துணைத் தலைவர்’ சகாயம், அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தார். அதை ஏற்றுக்கொண்ட அரசு, நடப்பாண்டு முதலே செயற்படுத்த முன்வந்துள்ளது. இது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும். இதற்கு, வயது, வரம்பு, கல்வித் தகுதி கிடையாது. மக்களுக்குப் பயனுள்ள கண்டுபிடிப்புகளை உருவாக்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.