
100 மேடை நாயகி!
மூன்று வயதில் ஆரம்பித்து எட்டு வயதுக்குள் 100 மேடைகளில் நடனம் ஆடி வியக்கவைத்துள்ளார் நீரஜா.

சென்னை, கே.கே நகரில் நடனப் பள்ளி நடத்திவரும் வாணிகாயத்ரி மகள்தான் நீரஜா. இசை, ஓவியம், நடனம் என ஒருநாளின் ஒவ்வொரு நிமிடங்களையும் அழகாக்கிவருகிறார்.
நாட்டிய மணி, தில்லையின் நாட்டிய மணிகள், நாட்டிய ரஞ்சகம், நாட்டிய மயூரி என வீடு முழுவதும் விருதுகளால் நிறைந்துள்ளது. மார்ச் மாதம் திருச்சியில் நடைபெறப்போகும் கலைச் சங்கமத்தில் பங்கேற்பதற்காகத் தயாராகிவருகிறார். இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டஸ், ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்டஸ், தமிழ் புக் ஆஃப் ரெக்கார்டஸ் எனச் சாதனை பதிவுகள் நீள்கின்றன.

“என்னைவிட சின்னக் குழந்தைகள் எல்லாம் இன்னும் நல்லா ஆடறதைப் பாத்திருக்கேன். அதனால், இதைப் பெரிய விஷயமாகவே நினைக்கலை’’ எனச் சிரிப்புடன் பேச ஆரம்பிக்கிறார் நீரஜா.

‘‘எனக்குப் பிடித்த பரதநாட்டிய கலைஞர் நந்தினி ரமணி. என் அம்மாவும் பரதநாட்டிய கலைஞர்தான். அவரோடு சேர்ந்து ஒரே மேடையில் ஆடணும்னு ஆசை. சிங்கப்பூர், மலேசியா எனப் பல நாடுகளுக்குப் போய் ஆடியிருக்கேன். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் ஆரம்பிச்சு பல புகழ்பெற்ற கோயில்களில் ஆடியிருக்கேன். எனக்கு டூரும் நடனமும் ஒண்ணுதான். நடனமாடப் போகிற ஊர்களையே சுற்றிப் பார்த்து டூரா ஆக்கிடுவேன். டூருக்குப் போகிற இடங்களில் நடன மேடையா ஆக்கிடுவேன்’’ எனப் புன்னகைக்கிறார் நீரஜா.
நீரஜாவின் அம்மா வாணி காயத்ரி, “நான் நாட்டியக் கலைஞராக இருக்கிறதால் மட்டும் இது நடந்துடலை. நீரஜாவுக்கு இயல்பாகவே பரதநாட்டியம் மேலே ஈடுபாடும் சீக்கிரமே கிரகிக்கும் தன்மையும் இருந்தது. அதுதான் அவளின் 100 மேடைகளின் வெற்றி ரகசியம்’’ என்கிறார் பெருமிதத்துடன்.
தொடர்ந்து சலங்கை இசைக்கட்டும்!
- அ.தளபதி
படங்கள்: ஆ.வள்ளி சௌத்ரி