
சல்யூட் இந்தியா
‘‘இதுவரைக்கும் போட்டோவிலும் சினிமாவிலும்தான் கப்பலைப் பார்த்திருக்கிறேன். நேரில் பார்ப்பேன்னு நினைக்கவே இல்லே!’’

சொல்லும்போதே அந்தச் சிறுவன் குரலிலும் கண்களிலும் அவ்வளவு பரவசம். தனக்குப் பின்னால் பிரமாண்டமாக நிற்கும் கப்பலைத் திரும்பிப் பார்த்தார்.
இந்தியக் கடலோரக் காவல்படை சார்பாக 43-ஆம் ஆண்டு கடலோரக் காவல் படை வாரம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னைத் துறைமுகத்தில் இந்தியக் கடலோரக் காவல்படையின் கப்பல்களைப் பார்வையிடவும், கப்பல் படை குறித்து விளக்கவும், பிப்ரவரி 6-ஆம் தேதி மாணவர்களுக்குச் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

காலை 8 மணியிலிருந்தே பள்ளிக் குழந்தைகளின் கூட்டம் துறைமுகத்தில் அலைமோதியது. கப்பலில் நுழைவதற்கான அனுமதி பாஸ்களுடன், துறைமுகத்தின் ஏழாவது வாயில் வழியாகச் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே, இந்திய தேசியக்கொடி ஏந்திய பிரமாண்ட கப்பல் அவர்களை வரவேற்றது. சீருடை அணிந்த வீரர்கள் சல்யூட் அடித்து வரவேற்க, சுட்டிகளின் முகங்களில் பெருமிதம்.
கப்பலுக்குள் நுழைந்த மாணவர்களுக்கு அங்கிருந்த வீரர்கள், கப்பல் செயல்படும் விதம், ஆபத்துக் காலத்தில் தப்பிக்க உதவும் முதலுதவிக் கருவிகள் போன்றவை குறித்து விளக்கினார்கள்.

பின்னர், கப்பலின் முதல் தளத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு கடலோரக் காவல் படையின் ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பற்றி வீரர்கள் விளக்கினார்கள். கடலோரக் காவல்படை வீரர்களின் சாகச வீடியோக்களையும், புகைப்படங்களையும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, ‘தாகம்’ என்ற சமூக செயற்பாட்டு அமைப்பினர், மைம் ஷோ நடத்தினார்கள். பாலியல் வன்முறை, இயற்கை பாதுகாப்பு குறித்த அந்த நாடகம், மாணவர்களை மிகவும் கவர்ந்தது.
“கப்பல் படையில் பயன்படுத்தும் ஆயுதங்களை நேரில் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். நம் நாட்டின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு வீரரும் எவ்வளவு அர்ப்பணிப்போடு வேலை செய்யறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்!” என்றார் நிரஞ்சனா என்ற மாணவி.

‘‘கப்பல் செயல்படும் விதம், பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றைப் பற்றி தெரிஞ்சுக்கிட்டதும், நாமும் கப்பல் படையில் சேரணும்னு ஆசை வந்திருக்கு’’ என்றார், பிரவீன் என்ற மாணவர்.
‘‘எனக்குக் கப்பலும் பிடிச்சிருந்துச்சு. இந்த மைம் ஷோவும் பிடிச்சிருந்துச்சு. இந்த வாய்ப்பை கொடுத்த இந்தியக் கடலோரக் காவல் படைக்கு ஒரு பெரிய சல்யூட்!” - ஸ்ரீ ஜெய் என்ற மாணவன் சொல்லிவிட்டு, கம்பீரமாக சல்யூட் வைத்தான்.

அந்த சல்யூட்டை பெற்றுக்கொண்டு புன்னகைப்பது போலிருந்தது, அந்தப் பிரமாண்டமான கப்பல்!
-சு.சூர்யா கோமதி
படங்கள்: ஆ.வள்ளி சௌத்திரி