
சென்னைப் பெருவெள்ளத்துக்குப் பிறகு வாசகர்களுடன் இணைந்து விகடன் முன்னெடுத்த நிலம்... நீர்... நீதி என்கிற அறத்திட்டம், சென்னையையடுத்த சாலமங்கலம் ஊராட்சியில் உள்ள சாலமங்கலம் ஏரி, நரியம்பாக்கம் ஏரி, சிறுமாத்தூர் ஏரி ஆகிய மூன்று ஏரிகளைத் தூர்வாரி, சீரமைத்துள்ளது.

கொளுத்தும் வெயில்... கோடையில் தண்ணீருக்கு அல்லாடிக் கொண்டிருக்கிறது சென்னை மாநகரம். சென்னைக்குத் தண்ணீர் வழங்கும் ஏரிகள் வற்றிவிட்டதால், இன்று குவாரிகளில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருக்கிறது சென்னை மாநகராட்சி. சென்னையைச் சுற்றியிருக்கும் ஏரிகளை முறையாகப் பராமரித்தாலே, சென்னை மக்களின் குடிநீருக்குப் பஞ்சம் ஏற்படாது. 2015-ம் ஆண்டின் பெருவெள்ளத்திற்குப் பிறகும் நாம் நீர்நிலைப் பராமரிப்பில் போதிய பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை.

ஆனால், சென்னைப் பெருவெள்ளத்துக்குப் பிறகு வாசகர்களுடன் இணைந்து விகடன் முன்னெடுத்த நிலம்... நீர்... நீதி என்கிற அறத்திட்டம், சென்னையையடுத்த சாலமங்கலம் ஊராட்சியில் உள்ள சாலமங்கலம் ஏரி, நரியம்பாக்கம் ஏரி, சிறுமாத்தூர் ஏரி ஆகிய மூன்று ஏரிகளைத் தூர்வாரி, சீரமைத்து அப்பகுதி மக்களிடம் ஒப்படைத்தது. இதுகுறித்து ஆனந்த விகடன் குழும இதழ்களில் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறோம்.
இதைத் தொடர்ந்து சீரமைக்கப்பட்ட ஏரிகளின் கரைகளைப் பலப்படுத்தும் பொருட்டு, கரைகளில் கல் பதிக்கும் பணிகள் (Revetment Work) வாசன் அறக்கட்டளை மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 71 ஏக்கர் பரப்பளவில் 1.3 கிலோமீட்டர் தூரம் கரைகளைக் கொண்ட நரியம்பாக்கம் ஏரியில் கல் பதிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டே இதற்கான பணிகளைத் தொடங்க அனுமதி பெறப்பட்டி ருந்தது. ஆனால், பணிகள் தொடங்கும் நேரத்தில் மழை பெய்ததால், கரையமைக்கும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதன்பிறகு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலரின் அனுமதியோடு தற்போது பணிகள் நடந்துவருகின்றன. இன்னும் சில நாள்களில் பணிகள் முடிக்கப்பட்டுவிடும். இதன்மூலம் நரியம்பாக்கம் பகுதியில் உள்ள இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பலனடையும். இந்தச் சீரமைப்பின் மூலம் 60 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, கால்நடைகள், பறவைகள், சிறுவிலங்குகள் ஆகியவற்றின் நீர்த்தேவையும் பூர்த்தியாகும்.

இதுகுறித்து நரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமானுஜம் பேசும்போது, “2015-ம் ஆண்டு மழை வெள்ளத்தின்போது நரியம்பாக்கம் ஏரியோட கரை உடைஞ்சதால, ஏரிக்குக் கீழே இருந்த நிலங்கள்ல பயிர் செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் எல்லாம் சேதமடைஞ்சுபோச்சு. கடந்த 50 வருஷமா ஏரியை யாரும் சரியா பராமரிக்கல. அதனாலதான் கரையெல்லாம் உடைஞ்சுபோச்சு. 2016-ம் வருஷம் விகடன் குழுமத்தோட வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலமா இந்த ஏரியைத் தேர்வு செஞ்சு, ஏரியில இருந்த முட்புதர்களையெல்லாம் நீக்கி, ஏரியைத் தூர்வாரி, ஆழப்படுத்தினாங்க. அதுமூலமா கடந்த கோடைக்காலத்துல தண்ணி கிடைச்சது. இந்த முறை மழை குறைவுங்கறதால, தண்ணி இல்ல. ஆனா, இந்தக் கரையை பலப்படுத்தினா இன்னும் கூடுதலா தண்ணியைச் சேமிக்க முடியும். இந்தத் தண்ணி விவசாயத்துக்கும் குடிநீருக்கும் பயன்படும். அதோட இந்தப் பகுதியில கால்நடைகள் அதிகம். அதுகளுக்கு வருஷம் பூரா தண்ணி கிடைக்கும். ஏரியோட கரையில கல் பதிக்கிறதால, இது ஒரு சாலையாகவும் பயன்படும். மழை பெய்ஞ்சா கரையில மணல் மூட்டைகளை வெச்சு அடைக்க வேண்டியிருக்கும். இனி, அந்தப் பிரச்னை எங்களுக்குக் கிடையாது” என்றார் உற்சாகமாக.
அதே ஊரைச் சேர்ந்த குணா, “இந்த ஏரியோட கரையில அடிக்கடி மண்ணரிப்பு ஏற்படும். இந்த மாதிரி மண்ணரிப்பினால் ஏரியில தேங்கும் தண்ணி அதிக அளவுல வெளியேறிடும். இப்போ ஏரியோட கரை சீரமைக்கப்படுறதால மண்ணரிப்பு இனி இருக்காது. இந்த ஏரியைத் தேர்வு செஞ்சு இந்தப் பணிகளைச் செய்து வரும் ஆனந்த விகடன் குழுமத்துக்கு இந்தப் பகுதி சார்பாக நன்றியைத் தெரிவிச்சுக்கிறோம். அதோடு இந்த ஏரியைச் சீரமைச்ச பிறகு, அதாவது 2015 மழைக்குப் பிறகு இந்த ஏரியோட கரை உடையல. ஏரியில தேங்கும் தண்ணியோட அளவும் அதிகரிச்சிருக்கு. ஏரி மூலமா தண்ணி கிடைக்காததால, பல குடும்பங்கள் பயிர் செய்வதையே நிறுத்தியிருந்தாங்க. தற்போது ஏரி முழுவதுமாகச் சீரமைக்கப்பட்டிருக்கிறதால, விவசாயிகள் முழு நம்பிக்கையோடு விவசாயத்துல ஈடுபடுவாங்க” என்றார் நம்பிக்கையோடு.

வாசன் அறக்கட்டளை சார்பாக நீர்நிலைப் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருபவர், நரியம்பாக்கம் ஏரியின் பணிகள் குறித்துச் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “இந்த ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. அதேசமயம் கரை பலமில்லாமல் இருப்பதால் தண்ணீரைச் சேமிக்க முடிவதில்லை. கரையை பலப்படுத்தினால்தான் நீரின் கொள்ளளவை அதிகரிக்க முடியும். தற்போது 8 அடி உயரமுள்ள கரையை 12 அடியாக உயர்த்தி, பலப்படுத்தி வருகிறோம். இப்படிக் கரையை பலப்படுத்துவதால் நீரின் கொள்ளளவை அதிகரிப்பதோடு, நீர்க்கசிவையும் தடுக்க முடியும். அதோடு ஏரிக்கரையின் மொத்த நீளமான 1,382 மீட்டர் தூரத்திற்கு 8 அங்குலத்திற்கு கான்கிரீட் பிளாக் அமைக்கிறோம். ஏழு இடங்களில் ஏரிக்கான நீர்வரத்து உள்ளது. அந்த இடங்களும் வலுவிழந்துள்ளன. முதல்கட்டமாக ஏரிக்கரையில் உள்ள பணிகளை முடித்துவிட்டு, அடுத்து நீர் உட்புகக்கூடிய பகுதிகளையும் கான்கிரீட் பிளாக் கொண்டு பலப்படுத்தவுள்ளோம். இதன்மூலம் ஏரிக்கான நீர்வரத்தும் சீராக இருக்கும்” என்றார்.
விகடன் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, தாராளமாக நிதியை அள்ளி வழங்கி இப்பணியை சாத்தியமாக்கிக்கொண்டிருக்கும் வாசகர்களுக்கு நன்றி!
விகடன் டீம்; படங்கள்: தே.அசோக்குமார், பெ.ராக்கேஷ்