சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கவுரிவாக்கத்திலுள்ள விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரைச் சுரண்டுவதாகவும் அதைத் தடுக்கக் கோரியும் நாகேஸ்வர ராவ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விவசாய நிலங்களில் நிலத்தடி நீரை எடுத்து அதை லாரிகள் மூலமாகப் பல இடங்களில் விற்பனை செய்வதாகவும் இதனால் அந்தப் பகுதியின் நீர்வளம் மிகவும் குறைந்துவிட்டதாகவும் அவர் தொடர்ந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பகுதியை நேரில் ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். அந்தப் பகுதியில் நிலத்தடியிலிருந்து உறிஞ்சப்படும் நீர் சொந்தத் தேவைக்காகவா அல்லது வணிக நோக்கிலா என்பது குறித்தும் பொதுமக்களின் புகார் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் ஆய்வில் சட்டவிரோதமாக எடுக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த இடத்திலுள்ள மோட்டார்கள் மற்றும் தண்ணீரைக் கொண்டு செல்லப் பயன்படுத்தும் வாகனங்களைப் பறிமுதல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு அவர்கள் எடுக்கும் நடவடிக்கை குறித்தும் பறிமுதல் செய்யும் வாகனங்கள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், இந்த வழக்கை ஜூலை 1-ம் தேதிக்குத் தள்ளிவைத்தது.