செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே 4 குழந்தைகள் ஆமணக்கு விதை சாப்பிட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டை அடுத்த அஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ். இவரது குழந்தைகள் அபிதா (5), சுனிதா (4), அனிதா (2) ஆகியோர் காலாண்டுத் தேர்வு விடுமுறையில் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த ராஜீ என்பவரின் மகள் மோனிகாவும் விளையாடினார்.
##~~## |
மாலை நான்கு மணி அளவில் தீடீரென நால்வரும் வாந்தி எடுத்தனர். பேதியும் ஆனதால் மயக்கமுற்றனர். அதைக்கண்ட அவரது பெற்றோர்கள் செய்வதறியாது அலறித்துடித்தனர். வாயிலிருந்து வந்த நுறையில் ஆமணக்கு கொட்டை தென்பட்டது. உடனே அவர்களை அஞ்சூர் ஊராட்சி தலைவர் ஜெயக்குமார் 108 வாகனத்தை வரவழைத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு, நான்கு குழந்தைகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்தி மற்றும் படம்:
பா.ஜெயவேல்