சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து இரண்டு பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு மூன்று பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் பட்டாசு ஆலைகளில் அதிரடி ஆய்வு நடத்திட மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார். அதன்படி, விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிறு, குறு பட்டாசு உற்பத்தித் தொழிற்சாலைகள், கிளைத் தொழில் செய்யும் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

அதேபோல், ராஜபாளையத்தை அடுத்த கொத்தங்குளம் கிராமத்தில் விக்னேஷ் முத்துக்குமார் என்பவருக்குச் சொந்தமான 'ஜெயலட்சுமி' பட்டாசு ஆலை மற்றும் முடங்கியாறு சாலையில் சம்பந்தபுரத்தில் சந்திரசேகர் என்பவருக்குச் சொந்தமான 'சிவசக்தி' பட்டாசு ஆலையிலும் வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், இரண்டு தொழில் நிறுவனங்களிலும் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் சல்பர் மூலப்பொருளை பயன்படுத்துவதற்கான உரிமம் முடிவடைந்தது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு பட்டாசு ஆலைகளையும் வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.