புதுச்சேரியையொட்டி அமைந்திருக்கும் தமிழகப் பகுதியான ஆரோவில்லில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அதன்படி அங்கு வசிக்கும் பிரெஞ்ச் நாட்டு குடியுரிமை பெற்ற ஒருவரின் வீட்டில் கடத்தல் சாமி சிலைகள் இருப்பதாகவும், அந்த வீட்டின் ஒரு பகுதியில் ‘ஆரோ ரச்சனா' என்ற பெயரில் இயங்கிவரும் கடையில் பழங்கால கைவினைப் பொருள்களை விற்பனை செய்வதாகவும் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் சென்றது.

அதனடிப்படையில் அந்த வீட்டை சோதனை செய்வதற்கு நீதித்துறை நடுவரின் உத்தரவைப் பெற்ற சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையில் அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் விநாயகர், முருகன், ஐயப்பன், புத்தர் என கற்களால் செய்யப்பட்ட 13 சாமி சிலைகள், 4 உலோக சாமி சிலைகள், மரத்தால் செய்யப்பட்ட சிலை, டெரகோட்டா உள்ளிட்ட 20 சிலைகளையும், ஒரு பழங்கால ஓவியத்தையும் கைப்பற்றினர்.
இது குறித்துப் பேச சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐ.ஜி.தினகரனை தொடர்புகொண்டபோது, ``தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து கடத்தி வரப்பட்ட இந்த சாமி சிலைகளையும், கலைப்பொருள்களையும் பிரான்ஸ் நாட்டுக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் பழங்கால சிலைகளைப் போல் இருந்ததால் அவற்றை எடுத்துச்செல்ல ஏ.எஸ்.ஐ (Archaeological Survey of India) அனுமதிக்கவில்லை. அதையடுத்து எங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சோதனை செய்து சிலைகளை கைப்பற்றினோம்.

சிலைகளை வைத்திருந்தவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் இருக்கிறார். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு 34/22-ல் வழக்குப் பதிவுசெய்து, பறிமுதல் செய்த சிலைகளை கும்பகோணம் கூடுதல் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்கிறோம். மேலும் விசாரணையை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.