விகடன் வரவேற்பறை
நண்பனின் தந்தை - அசோகமித்திரன்
வெளியீடு: நற்றிணை பதிப்பகம், 243 ஏ, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5
பக்கம்: 144 விலை:

100

அசோகமித்திரனின் சமீப இரண்டு குறுநாவல்களும் மூன்று சிறுகதைகளும் கொண்ட தொகுப்பு. நகர்ப்புறத்துக் கீழ் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த மனிதர்களைக் கூரிய பார்வையோடு அடங்கிய தொனியில் வெளிப்படுத்தியிருக்கிற 'பம்பாய் 1944’, 'லீவு லெட்டர்’ ஆகிய குறுநாவல்கள் வாசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் அருமையான படைப்புகள். சிறுகதைகளில் எள்ளல், ஏளனம் இல்லாத நகைச்சுவை அசோகமித்திரனின் பாங்கு. அது இப்போதும் அவருக்குக் கைவரப் பெற்றிருக்கிறது. சிறிய தொகுப்பாக இருந்தாலும் மனிதர்களின் இயல்புகளைப் பெருமளவு திறந்து காட்டுகிறது!
www.i-am-bored.com பொழுதுபோக்கு டாட்காம்!

பொழுது போகவில்லையா... அல்லது அழுத்தமான பணிச் சூழலுக்கு இடையில் சின்ன ரிலாக்ஸ் பிரேக் தேவைப்படுகிறதா? இந்தத் தளத்தைத் தட்டலாம். குறும்பு வீடியோக்கள், ஜாலி படங்கள், கிச்சுகிச்சு கார்ட்டூன்கள் என்று கலந்து கட்டிய காமெடி கிளப். உலகின் பொறுமையான தந்தைகள், இந்தப் பெண்களே இப்படித்தான், சைக்கிள் பூட்டை உடைப்பது எப்படி, நீங்கள் தோற்கவே முடியாத 10 பந்தயங்கள் என்றெல்லாம் விரியும் பல சுவாரஸ்யங்கள்தான் சமூக வலைப்பதிவுகளில் இப்போது ஏகமாக ஷேர் செய்யப்படுகிறது!
http://saambaldhesam.blogspot.in/ பெத்லஹேம் முதல் வெண்மணி வரை...

குறைவாக எழுதினாலும் நிறைவான படைப்புகள் அலங்கரிக்கும் வலைதளம். 'மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ள இவர், பெத்லஹேமையும் கீழவெண்மணியையும் ஒப்பிட்டு கட்டுரை எழுதுகிறார், அம்பத்தூர் தொழிற்பேட்டையையும் பொலிவியா தொழிலாளர்களையும் ஒரே கட்டுரையில் இணைக்கிறார். உபயோகமான வாசிப்பு அனுபவம் அளிக்கும் தளம்!
சித்ரா இயக்கம்: விக்னேஷ்வரன் விஜயன் வெளியீடு: கே.ஆர். புரொடக்ஷன்ஸ்

'சித்ரா எந்திருச்சுட்டாளா?’, 'சித்ரா குளிச்சிட்டாளா?’ என்று அடிக்கடி விசாரித்துக்கொண்டே இருக்கிறார் ஒருவர். மனநல மருத்துவரிடம் சித்ரா படுக்கையிலேயே ஒன் பாத்ரூம் போகிறாள் என்பதோடு சித்ரா பற்றி மேலும் பல குற்றச்சாட்டுக்களை அடுக்குகிறார். சித்ராவுக்கு என்ன பிரச்னை என்று மருத்துவர் குழப்பம் அடைகிறார். இப்போது சித்ரா யார்... யாருக்கு மனநலப் பாதிப்பு என்பதை கிளைமாக்ஸில் சொல்கிறார்கள். ஐந்து நிமிடப் படத்தில் ஐந்தாறு ட்விஸ்ட்கள் வைத்து கடைசியில் அவிழ்ப்பது சுவாரஸ்ய முயற்சி!
கலியுகம் - இசை: தாஜ்நூர், சித்தார்த் விபின், எஸ்.என்.அருணகிரி
வெளியீடு: திங்க் மியூஸிக் விலை:

99

மூன்று இசையமைப்பாளர்கள்... ஐந்து பாடல்கள். தாமரையின் வரிகளில் ஹரிச்சரணின் ஜிலீர் குரலில் 'சிரபுஞ்சி சாலையிலே...’ என்ற துள்ளல் இசைப் பாடலுக்கும் மனுஷ்யபுத்திரனின் தனி மைத் துயர் வரிகளில் ராகுல் நம்பியார் பாடும் 'ஏனோ ஏனோ...’வுக்கும் உயிர்ப்பான இசையைக் கொடுத்திருக்கிறார் தாஜ்நூர். அருணகிரியின் இசையில் 'மரண கானா’ விஜியின் பிரபல கானாவான 'அஜல உஜல...’ செம பேட்டை ராப் கானா. 'ஈசன்’ படத்தின் 'ஜில்லாவிட்டு...’ பாடலை எழுதிய மோகன்ராஜின் 'ஏடாகூடா ஆசை...’ வாழ்க்கை தத்துவம் சொல்கிறது. சில்க் ஸ்மிதாவின் புகழ்பாடும் 'வெண்ணையிலே....’ பாடல் ஆல்பத்தின் ஹைலைட். 'பூமியே காதலிச்ச பொம்பளை மேல... நான் ஆசை வெச்சேனே ராமனைப் போலே....’ என்ற வரிகள் செம ஸ்கோர்!