சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.தி.மு.க. இடம் பெற்றிருந்தது. அக்கட்சிக்கு 7 தொகுதிகள் வழங்கப்பட்டது. விருதுநகர் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ போட்டியிட்டார். என்றாலும், 7 தொகுதிகளிலும் ம.தி.மு.க. தோல்வியடைந்தது.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்த நிலையில், நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டார். பா.ஜ.க.வின் இந்த செயல் ம.தி.மு.க.வை அதிருப்தியடைய செய்தது.
முதலில் இருந்தே மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ம.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மீத்தேன் எரிவாயு திட்டம், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்டும் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகளில் மத்திய அரசை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக விமர்சனம் செய்தார்.
இலங்கை பிரச்னையில் வாஜ்பாய், அத்வானியை போல பிரதமர் நரேந்திரமோடியின் அணுகுமுறை இல்லை என்று கூறிய வைகோ, தமிழக மீனவர்கள் தூக்கு தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதில் ராஜபக்சேவுடன் இணைந்து நரேந்திரமோடி நாடகமாடியுள்ளார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
வைகோவின் இந்த செயல் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறிய பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியை கட்சி மேலிடம் கண்டிக்காதது ம.தி.மு.க.வினரை எரிச்சலடைய செய்தது.
இந்த நிலையில், நரேந்திரமோடி பற்றி கருத்து தெரிவித்த வைகோவுக்கு, பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடும் எச்சரிக்கை விடுத்தார். இது ம.தி.மு.க.வினரை மேலும் கோபமடைய செய்தது. பா.ஜ.க. - ம.தி.மு.க. இடையே மோதல் வலுத்து வந்த நிலையில், இனியும் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற வேண்டுமா? என்று முடிவு எடுக்கும் நிலைக்கு ம.தி.மு.க. தள்ளப்பட்டது.
இந்த நிலையில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், உயர்நிலைக்குழு கூட்டம் ஆகியவை சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியை வழிநடத்திச் சென்றபோது, கூட்டணி கட்சிகளிடம் இருந்த அணுகுமுறை, தற்போது நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ. கூட்டணியில் இல்லை. எனவே, தமிழகத்தில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகுகிறது என்று தெரிவித்தார்.
படம்: வீ. நாகமணி