ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

தண்ணி காட்டும் தண்ணி!

தண்ணி காட்டும் தண்ணி!


ஸ்பெஷல் 2
தண்ணி காட்டும் தண்ணி!
தண்ணி காட்டும் தண்ணி!
 
தண்ணி காட்டும் தண்ணி!
தண்ணி காட்டும் தண்ணி!
தண்ணி காட்டும் தண்ணி!
தண்ணி காட்டும் தண்ணி!

ருடா வருடம் தமிழகத்துக்குத் 'தண்ணி காட்டும்' புயலின் புது அவதாரம் நிஷா!

கடல், கரை என மாறிமாறி மையம்கொண்டு மக்களைக் கலங்கடித்த நிஷாவால் தவித்துத் தத்தளித்தது தமிழகம். டெல்டா பகுதிகளில் ஹெலிகாப்டரில் உணவுப் பொட்டலங்கள் போடுகிற அளவுக்குப் போனது நிலைமை. சென்னை உள்ளிட்ட நகரங்களிலோ, ரோடு, வீடு எனப் புகுந்து சூறையாடிய மழையால், சோகக் காட்சிகளால் நிறைந்தன கடந்த வாரச் செய்திகள்!

குடிசைவாசியும், மாடி வீட்டு மார்வாடியும் பள்ளிக்கூடத்தில் தங்கினார்கள். பல இடங்களில் பேருந்துகள் மழை விபத்தில் விழுந்து, மரங்கள் சாய்ந்து, சாலை வழிப் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது. படகுகள் வாகனமாக, தற்காலிக அகதிகளாகி அலைந்தனர் மக்கள். விவசாயம் தொடங்கி, ஆடு மாடுகள் வரை கிராமங்களிலோ மழையின் இழப்பு இன்னும் அதிகம். 14 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. மொத்தமாக, மும்பையின் தோட்டா மழைக்குச் சற்றுக் குறைவாக, தமிழகத்தில் பேய் மழைக்குப் பலியானவர்கள் 102 பேர். வழக்கம் போல இந்த விஷயத்திலும் தூங்கி வழிந்த அரசு இயந்திரம் தாமதமாகவே விழித்தது. 'அமைச்சர்கள், தங்கள் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்' என முதல்வர் உத்தரவிட்ட பிறகே மக்களைப் பார்க்கக் கிளம்பினார்கள் அமைச்சர்கள். அழுகிய பயிர்களை தூக்கிப்பிடித்தபடி,

தண்ணி காட்டும் தண்ணி!

மீடியாக்களின் ஃப்ளாஷ்களுக்கு போஸ் கொடுத்தார்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள். கூட்டிக் கழித்துப் பார்த்து, பாதிப்பு நிவாரணத்துக்கு 100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அமைச்சரவை கலைந்தது. நிஷா வலுவிழந்து கடலுக்குள் புகுந்ததும் மழை குறைந்தது.

அடுத்தது என்ன? இதோ, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார்கள். அடுத்ததாக உஷாவோ, ஆஷாவோ வரும் வரை அரசுக்குக் கவலை இல்லை. மக்களுக்கும் கவனம் இருக்காது. ''ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும். புயல் உருவாகும் என்பது நாம் அறிந்ததே. நிஷாவைப் போன்று அடுத்தடுத்த ஆண்டுகளில் புயல் தாக்கினால் என்ன செய்வீர்கள்? ஒவ்வொரு சீஸனுக்கும் இஷ்டம் போல் வருவதுதான் இயற்கை. சீஸனுக்கு மட்டும் பணிபுரியாமல் தனி அமைப்பை ஏற்படுத்தி, நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் பணியாற்றினால் மழை வெள்ளத்திலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்'' என்கிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.

''மழையும் புயலும் வரும்போது திண்டாடுவதுதான் மக்களுக்கு வேலையா... வேறு வழியில்லையா? அடுத்தடுத்த ஆண்டுகளில் புயல் மழை ஆபத்திலிருந்து தமிழகத்தைத் தற்காத்துக்கொள்ள என்ன வழி இருக்கிறது?'' என்கிற கேள்வியோடு அண்ணா பல்கலைக்கழக நீர்வள மைய இயக்குநர் கருணாகரனைச் சந்தித்தோம்.

''மழை நீர் வடியாமல் தேங்குவது என்பது தமிழகத்தில் மட்டும் உள்ள பிரச்னை இல்லை. அனைத்து மாநிலங்களிலும் இந்தப் பிரச்னை இருக்கிறது. தமிழகத்தில் சற்று அதிகமாக இருக்கிறது. சட்டத்தை மக்கள் அலட்சியப்படுத்துவதும், அந்தச் சட்டத்தை அதிகாரிகள் செயல்படுத்துவதில் உள்ள சுணக்கமுமே பிரச்னைக்கான மூல காரணம்.

முதல் விஷயம், மழையின்போது தெருவில் குவிக்கப்பட்டுள்ள குப்பைக்கூளங்கள் தண்ணீரோடு கலந்து சாக்கடைக்குள் செல்கிறது. இதனால் கழிவு நீர்க் குழாய்கள், வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறாமல் தேங்க ஆரம்பிக்கிறது. வீட்டில், 'கழிவுநீர்க் குழாய்களில் திடக் கழிவுகளைக் கொட்டாதீர்கள்' என்று கோடிகளைக் கொட்டி விளம்பரம் செய்கிறது அரசு. ஆனால், பெரும்பாலானவர்கள் அதை மதிப்பதில்லை. சில விஷயங்களை மக்களிடம் அன்பாக மட்டும் சொன்னால் புரியாது, அந்த மாதிரி சூழலில் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும். 'திடக் கழிவுகளை கழிவுநீர்க் குழாய்களில் கொட்டுபவர்களின் வீட்டுக்கு, குடிநீர் மற்றும் கழிவுநீர்க் குழாய் இணைப்புத் துண்டிக்கப்படும்' என்று சட்டம் கொண்டுவர வேண்டும்.

கிராமப்புறங்களில் ஆறு, குளம், ஏரிகளைத் தூர்வாரும்போது மணலை அள்ளிக் கரையில் போடுவதுதான் வழக்கம். கன மழை பெய்யும்போது கரையில் உள்ள மண், ஆறுகளுக்குள்ளேயே கொண்டு செல்லப்படுகிறது. இதனால் ஆறு, ஏரி போன்றவை மீண்டும் தூர்ந்துபோகிறது. நீர் தேங்க அல்லது வழிந்து ஓட இடம் இல்லாததால் அதிகப்படியான மழை நீர் ஊருக்குள் வர ஆரம்பிக்கிறது. ஆறு, குளம், ஏரிகளைத் தூர் வாரிய பின்னர் கரைகளில் கான்கிரீட் சுவர் எழுப்பிப் பலப்படுத்த வேண்டும். சென்னையைப் பொறுத்தவரை இயற்கையையும் அரசாங்கத்தையுமே குறை சொல்லிக்கொண்டு இருக்கிறோம். மக்களிடமும் குறை இருக்கிறது. 'ஏரி, குளம் போன்ற இடங்களை ஆக்கிரமிக்கிறோமே... மழை பெய்தால் வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்குமே' என்கிற கவலையோ, வருத்தமோ இல்லாமல் மக்கள் தொடர்ந்து நீர் நிலைகளை ப்ளாட் போட்டு ஆக்கிரமிக்கின்றனர். தேர்தல் போன்ற பல்வேறு காரணங்களை மனதில் வைத்து அரசும் அவர்களுக்குப் பட்டா கொடுத்துவிடுகிறது. இடத்தை ஆக்கிரமிப்பவர்கள், அபகரிப்பவர்கள் மீது சட்டங்களைக் கண்டிப்புடன் செயல்படுத்தினால் மட்டுமே இதைத் தடுக்க முடியும்.

தண்ணி காட்டும் தண்ணி!

யோசித்துப் பாருங்கள்... சென்னையில் இருந்த ஏரிகள் எத்தனை... கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட ஏரிகள். ஆனால், இன்றைய நிலைமை என்ன? பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் என ஒரு சில ஏரிகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றன. மற்ற ஏரிகளை ரியல் எஸ்டேட்காரர்களும் பொதுமக்களும் ஆக்கிரமித்துவிட்டனர். மழை நீர் தேங்கினால், 'அரசு நடவடிக்கை எடுக்கவில்லை' எனக் குதிப்பவர்கள், நிலத்தை ஆக்கிரமிக்கும்போது, அதைப்பற்றி யோசிப்ப தில்லையே. குறிப்பாக, சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், அண்ணாநகர், வேளச்சேரி போன்ற பகுதிகளில் இருந்த ஏரிகள், குளங்கள் இன்று கான்கிரீட் காடுகளாகிவிட்டன. ஆக்கிரமிப்பாளர்கள் செய்யும் தவறுக்காக, அவர்களோடு சேர்ந்து ஒட்டுமொத்த சென்னையும் கஷ்டத்தில் மூழ்கிக்கிடக்கிறதே. வரும் காலங்களிலாவது ஆக்கிரமிப்பாளர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மிக அவசரம்... மிக மிக அவசியம்'' என கருணாகரன் கட்டுகிறார் எச்சரிக்கை மணி!

சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் சுனில்பாலிவால், ''சென்னையில் கழிவுநீரை அகற்ற அமைக்கப்பட்டுள்ள குழாய்களின் வழியாகத்தான் மழை நீரை வடியவைக்கிறோம். சென்னையில் மழை நீரை அகற்ற இதைத் தவிர வேறு வழி இல்லை. சென்னையைப் பொறுத்தவரை 2,800 கி.மீ. நீளத்துக்குக் கழிவுநீர் அகற்று வாரியக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் 465 கி.மீ. நீளக் குழாய்களை இந்த அடைமழைக்கு முன்புதான் சுத்தப்படுத்தினோம். தற்போது கழிவுநீர் குழாய்களில் மழை நீர் திறந்துவிடப்படுவதால் சாலையில் உள்ள மண், திடக்கழிவுகள் போன்றவை குழாய்களில் அடைத்திருக்க வாய்ப்புள்ளது. மொத்த குழாய்களையும் மழை ஓய்ந்தபின் மீண்டும் சுத்தப்படுத்துவோம்'' என்கிறார்!

 
தண்ணி காட்டும் தண்ணி!
தண்ணி காட்டும் தண்ணி!