44-ஆவது சென்னை புத்தகக் காட்சி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிப்ரவரி 24 தொடங்கி நடைபெற்றுவருகிறது. புத்தகக் காட்சியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய, வாங்க வேண்டிய நூல்களின் சிறுதொகுப்பு இதோ வாசகர்களுக்காக
நேஷனல் புக் டிரஸ்ட் (அரங்கு 292)
பல இலக்கிய வாசகர்கள் புத்தகக் காட்சியில் நுழைந்ததும் நேஷனல் புக் டிரஸ்ட் அரங்கிற்குச் செல்வதை ஒரு சடங்காகக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் நேஷனல் புக் டிரஸ்ட் இடம்பெற்றிருக்காத நிலையில், இந்த ஆண்டு அது அரங்கு அமைத்திருப்பது வாசகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தியாவின் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுள்ள மிகச் சிறந்த நாவல்கள், சிறுகதைகள் ஆகியவற்றின் மொழிபெயர்ப்புகள், நேரடி தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள், குழந்தைகளுக்கான மிக விரிவான கலெக்ஷன்ஸ் என சென்னை புத்தகக் காட்சியில் தவறவிடக் கூடாத ஓர் அரங்கு 'நேஷனல் புக் டிரஸ்ட்.'

சாகித்திய அகாடமி (அரங்கு 463, 464)
நேஷனல் புக் டிரஸ்ட் - க்குச் செல்லும் வாசகர்கள் பலரும் அங்கு நூல்கள் வாங்கி பில் போடும்போதே, ‘சாகித்திய அகாடமி அரங்கு எங்கிருக்கிறது’ என்று விசாரித்து நேராக இங்கு வருவார்கள். சாகித்திய அகாடமி பரிசுபெற்ற நூல்களின் மொழிபெயர்ப்பு, சிறந்த இந்திய நாவல்களின் மொழிபெயர்ப்பு, இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை நூல்கள் எனத் தொடக்க நிலை வாசகர் தொடங்கி, தேர்ந்த வாசகர்வரை அனைவருக்குமான நூல்களை இங்கு வாங்கலாம். சில நூல்களுக்குச் சிறப்பான தள்ளுபடியும் உண்டு.
பப்ளிகேஷன்ஸ் டிவிஷன் (அரங்கு 515, 516)
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் பப்ளிகேஷன்ஸ் டிவிஷன் இயங்குகிறது. போட்டித் தேர்வு மாணவர்களுக்கான நூல்களோடு, பொதுவான வாசகர்களுக்குமான நூல்களை இங்கு வாங்க முடியும். இந்தியா இயர்புக், பொருளாதார ஆய்வறிக்கை; நவபாரதச் சிற்பிகள் வரிசையில் நேரு, அண்ணா, அம்பேத்கர், சர்தார் படேல், சுபாஸ் சந்திர போஸ் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள்; கதைகளில் ஜாதகக் கதைகள், வேதாளக் கதைகள், எளிய நடையில் பஞ்சதந்திரம் என கலவையாக நல்ல நூல்களைக் கொண்டிருக்கும் தவறவிடக்கூடாத ஓர் அரங்கு இது.

காவ்யா (அரங்கு 334, 335)
தமிழில் ஆய்வு நூல்களை அதிகம் வெளியிடும் பதிப்பமான காவ்யா, இந்த புத்தகக் காட்சியில் குறிப்பிட்ட சில நூல்களுக்கு அதிகத் தள்ளுபடி அறிவித்துள்ளது. ‘முன்றில்’, ‘நிகழ்’ இதழ்களின் தொகுப்பு, இலக்கியமும் கோட்பாடுகளும் ‘மேலும்’ கட்டுரைகள், அ. மாதவையா படைப்புகள், கா. சுப்பிரமணிய பிள்ளை எழுதிய இலக்கிய வரலாறு, நாட்டாரியம் உள்ளிட்ட நூல்கள் இந்தச் சிறப்புத் தள்ளுபடியில் கிடைக்கின்றன. மேலும் இப்பதிப்பகம் வெளியிடும் ‘காவ்யா’ இதழின் முந்தைய இதழ்களும் கிடைக்கின்றன.
அடையாளம் பதிப்பகம் (அரங்கு 86)
பல்வேறு துறைகளில் அத்துறைசார் வல்லுநர்களால், பொது வாசகர்களுக்கான எழுதப்படும் நூல் ‘மிகச் சுருக்கமான அறிமுகம்’. ஆங்கிலத்தில் 200 பக்கங்களுக்குள் அமைந்த நூல்களை ஆக்ஸ்போர்டு பதிப்பகம் வெளியிட்டுவருகிறது. இந்த நூல் வரிசையில் சில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து அடையாளம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. வரலாறு, பின்காலனியம், உலகமயமாக்கல், பாசிசம், பௌத்தம், புத்தர், இஸ்லாம் என இதுவரை 25 தலைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

தமிழ்ப் பல்கலைக்கழகம் (அரங்கு 458, 459), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (அரங்கு 266) ஆகிய அரங்குகள் முக்கியமானவை. அகநி பதிப்பகத்தில் (அரங்கு 411) ப.சிவனடி தொகுத்த ‘இந்தியச் சரித்திரக் களஞ்சியம்’, 'ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு' ஆகியன முக்கிய நூல்களாகும். பழனியப்பா பிரதர் (அரங்கு 430, 431) வெளியிட்டுள்ள நரசய்யா எழுதிய ‘மதராசபட்டினம்', ‘ஆலவாய்: மதுரை மாநகரத்தின் கதை' ஆகியனவும் முன்றில் வெளியீடான (அரங்கு எண் 383) தமிழ் சினிமா குறித்து விட்டல் ராவ் எழுதிய நூல்கள், ‘நிழல்’, ‘காலக்குறி’ இதழ்களின் முந்தைய இதழ்கள் ஆகியனவும் மிகவும் முக்கியமான நூல்களாக வாசகர்கள் கருதுகிறார்கள்.

புத்தகக் காட்சி மைதானத்துக்கு வெளியே, எண்களற்ற திறந்தவெளி அரங்குகளாகப் பழைய புத்தகக் கடைகள் நடைபாதையில் அமைந்திருக்கின்றன. நீங்கள் நீண்ட நாள்களாகத் தேடிக் கொண்டிருந்த ஒரு நூல், உடனடியாக வாசிக்கச் சொல்லி உங்கள் நண்பர் எப்போதும் பரிந்துரைக்கும் ஒரு நூல், உங்களுக்கு மிகப் பிடித்தமான, ஆனால் உங்களிடம் இல்லாத ஒரு நூல், தற்செயலாக உங்கள் கையில் அகப்படும் ஒரு நூல் எனப் பல்வேறு சாத்தியங்களை இப்பழைய புத்தகக் கடைகள் தங்களுக்குள் வைத்திருக்கின்றன. எனவே புத்தகக் கண்காட்சியைப் பார்வையிடுவதோடு தவறாமல் பழைய புத்தகக் கடைகளுக்கும் ஒரு விசிட் அடித்துவாருங்கள்!