Published:Updated:

பட்டத்து யானை

பட்டத்து யானை

பட்டத்து யானை
விளாத்திகுளம் வைப்பாறு!
பட்டத்து யானை

முதி கோட்டை முனீஸ்வரன் கோயில்மணிகள் கணகணத்தன. நாவு நனைய, இளஞ்சூட்டு ரத்தம் குடித்த களிப்பில் இளவட்டங்கள் ஆர்ப்பரித்தார்கள். இளவட்டங்களையும் மிஞ்சி, கோயில் பூசாரி, ஆவேசங்கொண்டு குதியாட்டம் போட்டார். உற்றுப் பார்த்தார் சீமைச்சாமி.

பட்டத்து யானை

'குண்டு வீசினது நாங்க. 'ஹே... ஹே'னு கூப்பாடு போட்டது நாங்க. பூசாரி ஏன்... இந்தக் குதி குதிக்கிறான்?'

-மனதில் பட்டதை சீமைச்சாமி அமுக்கிக் கொண்டார்.

''ஏய்யா... பூசாரி! குதிச்சது போதும். போயி... பூஜை பண்ணு! எங்களுக்கு

அடுத்தடுத்து பல காரியங்கள் இருக்குது. போகணும்!''

பூசாரி ஆட்டத்தை நிறுத்தினார். இளைஞர்களின் ஆட்டம் நிற்கவில்லை. ''ஏம்ப்பா... எளவட்டங்களா... கொஞ்சம் பொறுங்க. முதல்லே சாமியைக் கும்பிடுங்க!'' -சீமைச்சாமி சத்தம் போட்டார்.

கூட்டத்திலேயே அவர் ஒருத்தர்தான் நாற்பது கடந்த வயசாளி. இளவட்டங்கள் வாய் ஒடுக்கினார்கள். பூசாரி, இடுப்புத் துண்டை எடுத்து, தன் வாயைத் தானே கட்டினார். எல்லோரும் கண் அகலப் பார்த்தார்கள். ஒரு நாட்டையே கொளுத்துகிற தீவிரத்தோடு சூடத்தைக் கொளுத்தினார். நெஞ்சு விம்ம, ஆராதனை காட்டினார்.

கூப்பிய கரங்களும் குவிந்த கண்களுமாக எல்லோரும் முனீஸ்வரனை வணங்கினார் கள். முஹம்மது மீரா பயபக்தியுடன் கும்பிட்டு நின்றான். மீராவுக்கு வலது புறம் சீமைச்சாமி. இடது புறம் பாலமுருகன். சீமைச்சாமி யின் ஒரு கண் முனீஸ்வரன் பக்கமும், மறு கண் முஹம் மது மீரா பக்கமும் இருந்தன.

''பட்டேல் ராவுத்தருக்கு... எங்க சாமியைக் கும்பிடத் தெரியுமா?''

கண் விழித்த மீரா, ''அப்பூ... பொந்தம்புளிக்காரரே! நாங்க எல்லாம் இங்கே இருந்து... அங்கே போனவங்கதான். கமுதிக்குப் பூர்வீகம் நாங்கதான்!''

''அடேய்... என் அண்ணன் மகனே! சும்மா கேலிக்கு சொன்னேன்டா. நம்ம எல்லாம் ஒரு ரத்தம்தானே... எனக்குத் தெரியாதுப்பூ?'' -மீராவின் தோளில் தட்டிச் சிரித்தார்.

கருவறைக்குள் இருந்து சூடத் தட்டோடு வெளியே வந்த பூசாரி, சீமைச்சாமிக்கு முன் நீட்டினார். உள்ளங்கை குவித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டவர், நிமிர்ந்து பூசாரியைப் பார்த்தார். தாரை தாரையாகக் கண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. சீமைச்சாமி பதறிப் போனார்.

''ஏய்... பூசாரி! நீ ஏன்ப்பா அழுகுறே?''

கேட்டதும் பூசாரி வெடித்து அழுதார். எதுவும் பேசவில்லை. மீராவைத் தவிர, எல்லோரும் திகைத்துப் போனார்கள்.

மீரா சொன்னான். ''அப்பூ... இந்த பூசாரி வேறு யாருமில்லே. சித்திரங்குடி

பட்டத்து யானை

மயிலப்பனோட ஆறாவது வாரிசு. அந்த மாவீரனுடைய ஆவி, கோட்டையையும் குண்டாறையும் சுத்துவதா இவருக்கு ஒரு நம்பிக்கை. இன்னிக்கு மயிலப்பனோட மனசு குளிர்ந்த சந்தோ சத்திலே... இவரு அழுகுறாரு!'' எல்லோர் மனசும் இறுகின. இறுக்கத்தைக் கலைத்தான் மீரா.

''முதலாளி வீட்டில் நம்ம சம்சாரிகள் நிறைய பேரை போலீஸ்காரன் கொன் னுட்டான். டி.எஸ்.பி. ஸ்காட், முதலாளி வீட்டுக்குள்தான் இருக்கிறான். கிளம்புங்க போவோம்...''

தபால் நிலையத்தை முற்றுகையிட்டார்கள். தந்தி, தொலைபேசிக் கம்பிகளை அறுத்தெறிந்தார்கள். தடுத்த போஸ்ட் மாஸ்டரின் வாயைக் கட்டி, புறங்கையையும் கட்டி, மூலையில் தூக்கிப் போட்டார்கள். 'கட்... கட்... கட்... கட்...' என ஒலி எழுப்பிய தந்திக் கட்டைகளைப் பெயர்த்து எறிந் தார்கள். தபால் நிலையத்தை விட்டால், சிட்டகாங் ரயில் நிலையத்தில்தான் தந்தி, தொலைபேசி வசதி உண்டு. எவ்வளவு பெரிய செல்வந்தர் வீட்டிலும் அதிகாரிகளின் அலுவலகங்களிலும் தொலைபேசி வசதி கிடையாது. தண்டவாளங்களைப் பெயர்க்க வந்த பிரிவினர், முதற்காரியமாக தந்தி, தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்தார்கள்.

செய்திப் போக்குவரத்தை துண்டிக்கும் பிரிவில் பதினைந்து பேர் மட்டுமே இருந்தனர். அவர்களுக்குள் இருந்தனர், ப்ரீத்திலதா வடேகரும் கல்பனா தத்தும். வீரர்களைக் காட்டிலும் துணிச்சலோடும் துல்லியத் தோடும் செயல்பட்டார்கள் வீராங்கனைகள். தொலைத் தொடர்பைத் துண்டிக்கும் காரியம் அதிவிரைவில் முடிந்து போக, பதினைந்து பேரும் தண்டவாளங்களைப் பெயர்க்கும் பிரிவினருடன் இணைந்துகொண்டார்கள்.

சிட்டகாங் நிலையத்துக்குள் ரயில் நுழைந்து வெளியேறும் இரு பக்கமும் தண்டவாளங்களைப் பெயர்த்தார்கள். ஒரு தண்டவாளத்துக்குப் பத்துப் பேர் வீதம், அத்தாசமாகத் தூக்கி விட்டெறிந்தார்கள். மீறிவரும் ரயில்கள், தரையில் ஓடிச் சரியவேண்டியதுதான்.

பெயர்ப்பவர்களுக்குப் பாதுகாப்பாக, நிலைய நுழைவு வாயிலில் ஐந்து பேரும் நடைமேடையில் ஐந்து பேரும் துப்பாக்கி ஏந்தி நின்றார்கள். லதா, நுழைவு வாயிலிலும் கல்பனா, நடைமேடைப் பாது காப்பிலும் ஆயுதம் தரித்திருந்தார்கள். பயணிகள் சஞ்சரிக்காத பொழுது என்பதால், ரயில் நிலையம் கழுவில் போட்டாற் போல் இருந்தது.

தகவல் அறிந்து வந்திறங்கிய வெள்ளைப் படையை, இறங்கவிடாமல் சுட்டுத் தள்ளினார்கள். ப்ரீத்தி லதாவே நான்கு பேரைக் கொன்றார். வாயிலில் துப்பாக்கிகள் வெடிக்க, நடைமேடை புரட்சியாளர்கள் விழிப்புடன் நின்றார்கள். ஆனாலும், அவர்களின் துப்பாக்கிகளுக்கு இரை கிடைக்கவில்லை. எல்லாம் வாசலிலேயே தீர்ந்து போனது. புரட்சிப் படையின் பெருவாரி வீரர்கள், ஆயுதக் கிடங்கு முற்றுகைக்குப் பிரிந்திருந்தனர். சிட்டகாங் நகர எல்லைக்குள் இருந்த ராணுவ

பட்டத்து யானை

ஆயுதக் கிடங்கை சுற்றி வளைத்தனர். மெஷின் கன்களும் கன்காட்டன் ஸ்லாப்புகளும் துப்பாக்கிகளும் ஏந்திய வீரர்கள், 'மாஸ்டர் தா' சூர்யசென் தலைமையில் மின்ன லாக இறங்கினர்.

ரணசிங்கத்தின் கையில் கன்காட்டன் ஸ்லாப் இருந்தது. மொத்த புத்தியும் தாக்குதலில் குவிந் திருந்தது. சாகசத்துக்குத் துணிந்த வயதும் வலுவும் கூர்மையும் நிறை கொண்டிருந்தன. 'வெற்றியைத் தவிர வேறொன்றில்லை' என்கிற அபரிமிதமான நம்பிக்கை ததும்பியது.

திடீர் தாக்குதலை எதிர்பாராத ஆயுதக் கிடங்கு சிப்பாய்கள், சல்லடையானார்கள். பத்தே நிமிடங்களில் கொள்ளை போனது ஆயுதக் கிடங்கு. ரைஃபிள்கள், ரிவால்வர்கள், வெடிகுண்டுகள், பிஸ்டல்கள், மெஷின் கன்களை அள்ளிக்கொண்டு புறப்பட்டது புரட்சிப் படை. பார்மர் ஜான்ஸன் தலைமையில் பிரிட்டிஷ் ராணுவத்தின் கூர்க்கா படைப்பிரிவு சுற்றி வளைத்தது. மாற்றுப் பாதையைத் தெரிவு செய்த புரட்சிப்படை, நகர எல்லையைக் கடந்து, ஜலாலாபாத் மலை அடுக்குகளுக்குள் பதுங்கியது. தொடர்ந்து வந்த கூலிப்படையில் நாற்பத்தாறு பேரை வீழ்த்திவிட்டு, தங்கள் பதுங்கு தளங்களுக்குள் நுழைந்தார்கள்.

ரணசிங்கத்தின் கன்காட்டன் ஸ்லாப், செத்தவர்களில் கால் பங்கினரைக் காவு கொண்டது. தாக்குதலின் உக்கிரத் தில்கூட, ரணசிங்கத்தின் பாய்ச்சலைக் கவனிக்கத் தவறவில்லை தளபதி சூர்யா சென். எதிரியின் கண்ணிலும் படாமல், கைகளிலும் சிக்காமல் விளையாட்டு போல் நரவேட்டை ஆடியிருந்தான்.

பாசறைக்கு வந்து கூடிய புரட்சிப் படையின் எண்ணிக் கையில் இருபத்தெட்டு குறைந்தது.

ரணசிங்கத்தின் தம்பி தங்கச்சாமி, தன் கையருகில் செத்து விழுந்து கிடப்பதைக் கண்ட வழிவிட்டானுக்கு, வெறி உச்சிக் கொம் பேறியது.

''டேய்... விடாதீங்கடா... வெள்ளைக்காரப் பயல் எவனையும் உயிரோட விடாதே... கொல்லு... எல்லாப் பேரையும் கொல்லு!'' -கத்திய வேகத்தில் எல்.எம்.ஜி. கன் குண்டுகளை இறைத்தது.

தப்பி, பரளச்சி பாதையில் ஓடிய போலீசு களை சோலை மறித்தான். ''எவனையும் விடாதே... போடு!'' போட்டுத் தள்ளினார்கள். ''தங்கச்சாமியை கொன்னுட்டான்ங்கடா... கொன்னவன்ங்களை விடாதீங்கடா...''

சுட்டு, சவமாக்கினார்கள். வானத்தில் வட்டமடித்த முனிகள், இரை எடுக்க தரை இறங்கின. தங்கச்சாமி செத்துக்கிடந்தான். பட்டாணி செத்துக் கிடந்தான். செங்குளத்து இளவட்டங்களோடு, நிறைய பேர் செத்துக் கிடந்தார்கள். முனிகள் கூடி, மௌனமாக நின்றன.

வழிவிட்டான் கதறினான். சோலை கதறினான். எல்லோரும் அழுதார்கள். பிணங்களைச் சுமந்த வண்டிகள், பெருநாழி நோக்கிக் கடகடத்தன.

கல்லடிபட்ட அணில்குஞ்சு போல், தலை குணங்கி செத்துக்கிடந்தான்

டி.எஸ்.பி-யான பானர் மேன். விளாத்திகுளம் வைப்பாற்று மணலுக்குள் லாரிகள் சிக்கிப் புகைந்து கொண்டிருக்க, போலீசுகள் சிதறிக் கிடந்தார்கள்.

அழகுபாண்டியன், ஒற்றை ஆளாக ரண சிங்கத்தை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு 'தங்ங்... தங்ங்...' என குதியாகக் குதித்தான்.

''ஏய்... ஏய்... போதுமப்பா முதலாளி. இறக்கி விடு.'' இளநீர் நிலவொளியில் முதன் முதலாக ரணசிங்கத்தின் முகத்தில் சிரிப்பைக் கண்ட துளசிபட்டி வீரர்கள், நாணல் புதர்களும் உடங்காடும் சிலிர்க்க ஆரவாரித்தார்கள்.

இருளாண்டியும் செல்லமுத்துவும்ஏறிவந்த குதிரைகள் ஆற்றுக் கரையிலேயே நின்று கொண்டன. இருவரும் நடந்தே நெருங் கினார்கள். அழகுபாண்டியனின்தோளில் இருந்தவாறே இருவரையும் கண்டு கொண்டான் ரணசிங்கம்.

''செல்லமுத்து... இருளாண்டி... வாங்கப்பா. கமுதியும் பரளச்சியும் என்னாச்சு?'' -இருவரும் கத்து கத்தென கத்தினார்கள்.

''நம்ம... தங்கச்சாமி அண்ணேன்...''

-இருவருக்கும் நாவு எழவில்லை...

- களிறு பிளிறும்...