மும்பையில் கடலுக்குள் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைந்து வழிபாடு நடத்த அனுமதியளிக்க பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் சில இந்து கோவில்கள் மற்றும் மும்பையின் ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் சென்று வழிபாடு செய்ய தடையுள்ளது. மகாராஷ்ட்ராவில் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள ஷிங்னாபூர் சனி பகவான் கோவிலிலும், பெண்கள் நுழையத் தடை உள்ளது. அந்த தடையை நீக்கக் கோரி பெண்கள் அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக மும்பை ஹாஜி அலி தர்காவிலும், பெண்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வலு பெற்றுள்ளது. பெண்கள் அமைப்பினர் நேற்று ஹாஜி அலி தர்காவுக்குள் நுழைய முயற்சித்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இந்த போராட்டம் குறித்து பேராசிரியர் ஜீனத் சவுகத் அலி கூறுகையில், ''இஸ்லாத்தில் எந்த இடத்திலும் பெண்கள் இடுகாட்டிற்கு செல்ல கூடாது என்று சொல்லப்படவில்லை. பெண்களை ஒதுக்குவது இஸ்லாத்தின் வழிமுறைகளுக்கு எதிரானது. இந்து, முஸ்லிம் என எல்லா இடத்திலுமே ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான் பெண்களை புறக்கணிப்பது. இந்திய அரசியல் அமைப்பு, அனைவரும் சமம் என்கிறது. இஸ்லாமும் அதைத்தான் சொல்கிறது '' என்றார்.
கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இஸ்லாமிய மத குரு, அடக்கம் செய்யப்பட்ட சமாதி அருகே பெண்கள் வருவது பெரும் பாவம் செய்வதற்கு சமம் என கூறி, ஹாஜி அலி தர்கா நிர்வாகம் பெண்களுக்குத் தடை விதித்தது. இது தொடர்பாக பாரதிய முஸ்லிம் பெண்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதேபோன்று கேரளாவின் சபரி மலை கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்தவும் பெண்களுக்குத் தடை உள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வரும் பிப்ரவரி 8-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட உள்ளது.