ஜார்க்கண்ட் மாநிலம், பலமு மாவட்டத்தில் உள்ள பாதன் என்ற இடத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தன் கணவன் வீட்டில் சண்டை போட்டுவிட்டு அண்டை மாவட்டமான லதாஹர் மாவட்டத்தில் உள்ள தன் தந்தையின் வீட்டுக்குப் புறப்பட்டார். அவரிடம் கையில் பணம் இல்லாததால் நடைப்பயணமாகவே நெடுஞ்சாலையில் நடந்து செல்ல ஆரம்பித்தார். அவரைத் தேடி அவர் கணவரும், உறவினர் ஒருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அந்தப் பெண் நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்து வீட்டிற்கு வரும்படி அவர் கணவர் கேட்டுக்கொண்டார். அந்நேரம் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் உறவினரை அடித்து உதைத்துவிட்டு அவரைத் தூக்கிச்சென்றனர்.

மனைவியைத் தேடி அவர் கணவரும் பின்னாடியே சென்றனர். அப்போது ஓர் இடத்தில்வைத்து அந்தப் பெண்ணை அவர் கணவர் முன்னிலையில் 6 பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் அந்தப் பெண்ணை அங்கிருந்து வேறு ஒரு இடத்திற்கு அவர்கள் கடத்திச்செல்ல முயன்றனர். ஆனால் அவர்களது வாகனம் வேறு ஒரு வாகனத்துடன் மோதிக்கொண்டது. இதனால் உதவி கேட்டு அந்தப் பெண் கூச்சலிட்டார். உடனே கிராமத்து மக்கள் ஓடிவந்து அவர்களை மீட்டனர். குற்றவாளிகளில் இரண்டு பேரை மட்டும் கிராம மக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். எஞ்சியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து மேலும் 4 பேரை இன்றைக்கு கைதுசெய்தனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் உடல் நிலை இப்போது சீராக இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.