விகடன் வரவேற்பறை
காண்டாமிருகம் ஜீ.முருகன் வெளியீடு: ஆதி,
15, மாரியம்மன் கோயில் தெரு, பவித்திரம்,
திருவண்ணாமலை-606 806.
பக்கங்கள்: 190 விலை:

120

ஜீ.முருகனின் தேர்ந்தெடுக்கப் பட்ட 26 சிறுகதைகளின் தொகுப்பு. அர்த்தங்களும் அபத்தங்களும் நிறைந்துகிடப்பதாய்த்தான் இருக் கிறது வாழ்க்கை. வாழ்வின் அபத்த கணங்கள் பற்றிய பதிவுகளே ஜீ.முருகனின் சிறுகதைகளில் நுண் அலகுகளாகச் செயல்படு கின்றன. தன் மாமாவின் பாரிச வாயுப் பிரச்னையைத் தீர்ப்பதற் காக, ஒரு புறாவையும் பிராந்தி பாட்டிலையும் தேடிச் செல்பவனின் ஒரு நாள் பயணமான 'பாரிச வாயு’ சிறுகதை, ஒரு நல்ல உதாரணம். கொலை செய்யப்படுவோமோ என்கிற உறுதி செய்யப்படாத அச்சம், ஒரு கொலையை நிகழ்த்து வதை விவரிக்கிறது 'ஜோசப்பின் மரணம்’ என்னும் சிறுகதை. இப்படி இந்தத் தொகுப்பில் உள்ள எல்லாச் சிறுகதைகளும் அர்த்தங் களுக்கு அப்பால் உள்ள அனுபவங் களைப் பற்றியதாக உள்ளன. உரையாடல்கள் குறைவாகவும் விவரிப்புகள் அதிகமாகவும் உள்ள ஜீ.முருகனின் சிறுகதைகள் புதுவிதமான வாசிப்பு வெளியை உருவாக்குகின்றன!
பெயர்ச்சொல் www.hearnames.com

ஆங்கிலம் மற்றும் பிற மொழிப் பெயர்களுக்கு நம்மையும் அறியாமல், தவறான உச்சரிப்புகளைக் கடைப்பிடிக்கிறோம். பல மொழிகள் பேசும் தேசத்தில் வசிப்பவர் கள் பெயர்ப் பிரச்னைகளை நாள்தோறும் எதிர்கொள்ள நேர்கிறது. தவறுகளைத் திருத்திக்கொண்டு, பெயர்களைச் சரியான ஒலி நயத்தோடு உச்சரிக்க உதவுவதற் காகவே உருவாக்கப்பட்ட இணையதளம் இது. தினந்தோறும் விநோதமான பெயர் களின் உச்சரிப்புக் குறிப்புகள் இடம்பெறுவதோடு, உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் உள்ள பெயர்களின் அர்த்தம் மற்றும் பின்னணி குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன!
கல்யாணப் பரிசு, இயக்கம்: எம்.கணேசன், வெளியீடு: பார்சன்ஸ்

ஊர்த் திருமணத்துக்கு எல்லாம் வரன் பார்த்துக் கொடுக்கும் கல்யாணத் தரகர் காசிலிங்கத்தால், தன் சொந்த மகளுக்குத் திருமணம் செய்துவைக்க முடியவில்லை. அநாதைப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் லட்சியத்தோடு வாழும் ஓர் இளைஞனுக்குத் தன் மகளை மணம் முடிக்க அவர் மேற்கொள்ளும் முடிவு உருக்கமானது. கல்யாணத் தரகர்கள் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தைப் பதிவு செய்துள்ள படம். ஆனால், கலை நேர்த்தியோடு பதிவு செய்யப்படாததால் ஆழமான தாக்கத்தை எழுப்பவில்லை!
தொழில்நுட்பத் தளம் www.cybersimman.wordpress.com

பிரியமான பாடலைப் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா? இணையம் மூலம் ஃபேஸ்புக் நண்பர்களுக்குப் பரிசு அனுப்ப வேண்டுமா? இப்படி இணையத்தில் சாத்தியமான சேவைகளைச் சொல்லித் தரும் தளம். தொழில்நுட்ப வார்த்தைகளைப் போட்டு மிரட்டி உருட்டா மல், எளிய தமிழில் சொல்லி இருப்பது சிறப்பு. இந்த ஒரு வலைப்பூவைப் படிப்பதன் மூலம் ஏராளமான இணையங்களைத் தெரிந்துகொள்ளலாம்!
கருங்காலி
இசை: ஸ்ரீகாந்த் தேவா வெளியீடு: மாஸ் ஆடியோஸ் விலை:

50

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் மெலடி மெட்டுக்கள் பூ மொட்டுக்களாக ஈர்க்கின்றன. 'உள்ளே ஒரு மிருகம்...’ பாடலில் காதலின் வீரியம் அதிகம். 'மனசு உருகியதே’, 'பூமி தடுத்தாலும்’ பாடல்கள் சின்மயியின் குரலில் இறகைப்போல மிதக்கவைக்கின்றன. கார்த்திக்கின் குரலில் 'பிரியமே... பிரியமே’ பாடல் காதலின் மீது பிரியம்கொள்ளத் தூண்டுகிறது. 'வாடா சூரப்புலி’ பாடல் ஆடவைக்கும் ஆடு புலி ரகம். ஆனால், அந்தப் பாடலில் 'பொறுக்கி நாங்கதான்...’ என்கிற வரி மட்டும் திருஷ்டிப் பொட்டு!