
புதுடெல்லி:மாநிலங்களவையில் நடிகை ரேகா பதவியேற்றபோது,அதனை ஜெயா பச்சன் அலட்சியப்படுத்தியது போன்று படம்பிடித்து ஒளிபரப்பியதற்காக தூர்தர்ஷனுக்கு எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர்.
பாலிவுட் நடிகை ரேகா, அமிதாப்பச்சனின் முன்னாள் காதலி என்பதால் ஜெயாபச்சனுக்கு ரேகாவை அறவே பிடிக்காது என்றும், எதிரும்,புதிருமாக இருப்பதாகவும் கூறப்படுவதுண்டு.
இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்ட நடிகை ரேகா, நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.அப்போது நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை படம் பிடித்து ஒளிபரப்பும் அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன்,மற்றொரு நியமன எம்.பி.யான ஜெயா பச்சனின் முகபாவனை எப்படி இருக்கிறது என்பதை காட்ட ஜெயாபச்சன் பக்கம் கேமராவை அடிக்கடி அவர் பக்கம் திருப்பியது.
அதில் ரேகா பதவியேற்பை ஜெயா பச்சன் பெரிதாக கண்டுகொள்ளாததுபோன்று அவர் வேறு பக்கம் பார்ப்பதை,தொலைக்காட்சி கேமரா மிகவும் நெருக்கமாக காட்டியது.
இந்த விவகாரம் பெரும்பாலான பத்திரிகைகளில் புகைப்படத்துடன் செய்தியாக வெளியிடப்பட்டது.
இதில் அதிர்ச்சியடைந்த ஜெயாபச்சன்,மாநிலங்களவை தலைவர் அன்சாரியிடம் இது குறித்து புகார் அளித்தார்.”ஒருவர் பதவியேற்றால் அதனையே கண்ணை இமைக்காமல் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்க முடியாது.அங்கும் இங்கும் வேறு பக்கம் பார்வை திரும்பத்தான் செய்யும்.
ஆனால் நான் அவ்வாறு வேறு பக்கம் திரும்புவதை தேவையில்லாமல் கேமிராவில் காட்டினர்.இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று புகாரில் கூறியிருந்தார்.
இந்நிலையில் மாநிலங்களவையில் இப்பிரச்னையை எழுப்பிய எம்.பி.க்கள்,நடிகை ரேகா பதவியேற்றபோது,அதனை ஜெயா பச்சன் அலட்சியப்படுத்தியது போன்று படம்பிடித்து ஒளிபரப்பி,அவர்கள் இருவரையும் எதிரிகள் போல் சித்தரித்து காட்டிய தூர்தர்ஷனுக்கு எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி பாரபட்சம் காட்டுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதனிடையே இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்தவேண்டாம் என்று ஜெயாப்பச்சனை,மாநிலங்களவை செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.