விகடன் வரவேற்பறை
இப்போது அவை இங்கு வருவது இல்லை
கிருஷ்ணன் ரஞ்சனா
வெளியீடு: உயிர்மை பதிப்பகம், முகவரி: 11/29, சுப்பிரமணிய தெரு, அபிராமபுரம், சென்னை-18.
பக்கங்கள்: 256 விலை:

150

சுற்றுச்சூழல் தொடர்பாக 'உயிரோசை’ இணைய இதழில் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக்கி இருக்கிறார் கிருஷ்ணன் ரஞ்சனா. யானை போன்ற பேருயிர்கள் பற்றி யும், தேனீ போன்ற சிற்றுயிர்கள் பற்றியும் இதுவரை நமக்குத் தெரியாத புதுமையான தகவல்களு டன் அவை மனிதனின் செயல்பாடு களால் எவ்வாறு எல்லாம் அழிந்து போகின்றன என்பதை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். வளர்ச்சி என்ற பெயரால் சூழலியல் எப்படி எல்லாம் சிதறடிக்கப்படுகிறது என்பதைக் கூர்மையான தகவல்களுடன் சொல் கிறார். வன உயிர், வேளாண்மை, சூழலியல், நீர் மேலாண்மை, மரபணு மாற்றுப் பயிர்கள், பன்னாட்டு நிறு வனங்களின் அரசியல், உலக வெப்பமயமாதல் என சுற்றுச்சூழல் குறித்தான சகல பரிமாணங்களையும் தொட்டு இருக்கும் விதத்தில் இந்தப் புத்தகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது!
ஈசன்பூமி இயக்கம்: திருவீசர்
வெளியீடு: மதுரை ஸ்ரீசுவாமி டிஜி மீடியா

மின் மயானத்தால் பாதிக்கப்படும் மயானத் தொழிலாளியின் குடும்பத்தின் கதை. மயானத் தொழிலாளிக்குப் படி அளக்கிறார் ஊர்ப் பண்ணையார். திடீரெனப் பண்ணையார் இறந்துவிட, அவரை மின் மயானத்தில் எரிக்கத் தயார் செய்கிறார்கள். 'இனிமேல் பிழைப்புக்கு என்ன பண்ணுவது?’ என்கிற கவலையில் பண்ணையார் வீட்டில் தகராறு செய்கிறார் மயானத் தொழிலாளியின் மகன். அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள்தான் க்ளைமாக்ஸ். ஆர்ட்டிஸ்ட்களின் அமெச்சூர் நடிப்பு மைனஸ் என்றாலும், புதிய களம் என்கிற முறையில் பாராட்டலாம்!
அ முதல் ஃ வரை!
http://www.learningscience.org/

அறிவியலில் அ முதல் ஃ வரை தெளிவாகத் தெரிந்துகொள்ள உதவும் பயனுள்ள தளம். இந்தத் தளத்தில் வாழ்க்கை சார்ந்த அறிவியல் முதல் டெக்னாலஜி, விண்வெளி என அனைத்துத் தரப்பு அறிவியல் சார்ந்த பக்கங்களும் கண் முன்னே விரிகின்றன. ஒவ்வொரு அறிவியல் விதியையும் படங்கள் மற்றும் செய் முறை விளக்கங்களோடு கற்றுத்தருகிறார்கள். மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தளம் இது!
அறியப்படாத கோணங்கள்!
http://puthiyamaadhavi.blogspot.com

எழுத்தாளர் புதியமாதவியின் வலைப்பூ இது. சமூகம், இலக்கியம், கலை என அனைத்துத் துறைகளின் மீதும் விமர்சனப் பார்வைகளை வைத்து, அதன் வழியே இதுவரை அறியப்படாத கோணங்களை நமக்கு எடுத்துக் காட்டுகிறார். சமீபத்தில் சென்னை மெரினாவில் ஈழத் தமிழர்களுக்காக மெழுகுவத்தி ஏந்தி தங்கள் உணர்வுகளைக் காட்டிய தமிழர்களிடம் 'மெழுகுவத்திகள் மட்டும் போதுமா?’ என்ற கவிதையின் வழியே எழுப்பும் கேள்விகள் சிந்திக்க வைக்கின்றன. பசுவுக்குப் பூஜை/ பெண் சிசுவுக்கு கள்ளிப்பால்/ தொல்காப்பியன் அறியாத/பால் வேற்றுமை’ என்ற கவிதை வரிகளுடன் தொடங்கும் 'பெண்பால் ஒவ்வாமை’ எனும் கட்டுரை, பெண் சமூகத்தின் மீது அக்கறைகொண்ட ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது!
எங்கேயும் எப்போதும் இசை: சத்யா வெளியீடு: திங்க் மியூஸிக் விலை:

99

முதல் பாடலான 'கோவிந்தா’ கேட்டவுடன் கைகளைத் தாளம் போடவைக்கிறது. 'சொட்டச் சொட்ட’, 'மாசமா’ இரண்டு பாடல்களும் அதிரடி இசையில் சரவெடியாக அதிர்கின்றன. 'சர்க்கரை நிலவே’ பாடலைப்போலவே இருக்கும் 'உன் பேரே தெரியாது’ பாடலில் மதுஸ்ரீயின் குரல் இழைந்து, குழைந்து உயிர் உருக்குகிறது. 'உயிர் அருந்தாதே’ பாடல் மென் சோக சுகம்! சத்யாவின் இசையில் பாடல்களை 'எங்கேயும் எப்போதும்’ கேட்டு ரசிக்கலாம்!