நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளம் கிராமத்தில் ஒரு கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர் இப்போது வரை உள்ளே சென்றுகொண்டே இருக்கிறது.15 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து தண்ணீர் சென்றபோதிலும் அந்த அதிசய கிணறு நிறையவே இல்லை

அதே போல மற்றொரு ஆச்சர்யம் மிகுந்த அதிசய கிணறு தென்காசி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலங்குளம் அருகே உள்ள வீராணம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏந்தலூர் கிராமத்தில் அந்தக் கிணறு இருக்கிறது. கிணற்றுக்குள் தொடர்ச்சியாக தண்ணீர் சென்றபோதிலும் நிறையாமல் அனைத்தும் நிலத்துக்குள் உறிஞ்சப்படுகிறது.
அதிசய கிணற்றின் சொந்தக்காரரான விவசாயி முருகராஜ் கூறுகையில், ``ஏந்தலூர் கிராமம்தான் எனது சொந்த ஊர். இங்கு எனக்குச் சொந்தமான 10 எக்கார் நிலத்தில் விவசாயம் செய்யுறேன். எனது நிலத்தில் எலுமிச்சை, தென்னை, நெல், கத்தரி, மரவள்ளி, தக்காளி பயிரிட்டிருக்கிறேன்.

என்னோட நிலத்துக்குப் பக்கத்தில் கல்கட்டிகுளம் இருக்கு. பொதுப்பணித் துறை பராமரிப்பில் இருக்கும் அந்தக் குளத்தின் மூலமாக இந்தப் பகுதியில் இருக்கும் 172 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி கிடைக்குது. இந்த வருஷம் தொடர்ச்சியாக மழை பெய்ததால் நிறையும் நிலையில் இருந்த குளம், கடந்த வாரத்தில் பெருகி மறுகால் போயிருச்சு.
குளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் என்னோட விவசாய நிலத்துக்கு உள்ளேயும் வந்துருச்சு. அதை எப்படி வெளியேத்தறதுன்னே எனக்குப் புரியலை. அதனால் காய்ந்து கிடந்த என்னோட கிணத்துக்குள் உபரி நீரைத் திருப்பி விட்டேன். விவசாய நிலம் முழுவதும் தேங்கிக் கிடக்கும் தண்ணீர் கிணற்றுக்குள் தொடர்ந்து பாய்கிறது.

ஒரு வாரமா நிலத்தில் தேங்கிக் கிடந்த தண்ணீர் தொடர்ந்து கிணற்றுக்குள் பாய்ந்தும் கிணறு நிரம்பாமல் இருப்பதைப் பார்த்ததும் ஆச்சர்யமா இருந்துச்சு. அதனால் இது பற்றி பக்கத்து விவசாயிகளுக்குச் சொன்னேன். அவங்களும் வந்து பாத்துவிட்டு, அதிசய கிணறு மாதிரி இருக்குன்னு சொன்னாங்க. கிணற்றுக்குள் போகும் தண்ணீர் எங்கே போகுதுன்னே தெரியலை” என்கிறார்.
இந்த அதிசய கிணறு பற்றிய தகவலைக் கேள்விப்பட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டமாக வந்து பார்வையிட்டுச் செல்கிறார்கள்.