இந்தியாவின் பிரபல பல்கலைக்கழகமான, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு) அவ்வப்போது மாணவர்களிடையே, மாணவ அமைப்புகளிடையே மோதல்கள், வெறுப்பு பிரசாரங்கள் போன்றவை நிகழ்ந்துவருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர்கூட, ராம நவமி தினத்தன்று பல்கலைக்கழக விடுதியில் அசைவ உணவு பரிமாறப்பட்டதாக ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பிற மாணவர்களை அடித்து காயப்படுத்தினர்.

இந்த நிலையில் தற்போது மீண்டுமொரு பிரச்னையாக, பல்கலைக்கழகத்தில் பிராமண எதிர்ப்பு கிளம்பியிருகிறது. இந்த விவகாரத்தில் சிலர், பல்கலைக்கழக வளாகத்தின் சுவர்கள், ஆசிரியர்கள் அறைகளின் சுவர்கள் போன்றவற்றில் சிவப்பு வண்ணத்தில், பிராமண மற்றும் பனியா சமூகத்தினருக்கு எதிராக வாசகங்கள் எழுதியிருக்கின்றனர். அது தொடர்பான படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகின்றன. அந்தப் படங்களில், பிராமணர்களுக்கு எதிராக, `ஷாகாவுக்கே திரும்பிச் செல்லுங்கள்', `பிராமணர்களே வளாகத்தைவிட்டு வெளியேறுங்கள்', `பனியா மற்றும் பிராமணர்களே நாங்கள் உங்களுக்காக வருகிறோம்', `இங்கு ரத்தம் இருக்கும்' என ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதப்பட்டிருந்தன.

இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக மாறவே, இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, நிர்வாகத்துக்கு துணைவேந்தர் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களைத் தண்டிக்கவேண்டும் என்று, பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ்-ஸைச் சேர்ந்த மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி இதற்கு, ``கம்யூனிஸ்ட் குண்டர்கள் கல்வி இடங்களைப் பெருமளவில் நாசப்படுத்துவதை ஏ.பி.வி.பி கண்டிக்கிறது" என ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருக்கிறது.