ஜம்மு காஷ்மீரில் ரோந்துப் பணியின்போது, ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குப்வாரா மாவட்டத்தில், நேற்று மாலை 6:30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பத்தில், ஒரு ஜூனியர் கமிஷண்டு அதிகாரி (JCO), இரண்டு ராணுவ வீரர்கள் மச்சல் பகுதியில், வாகனத்தில் வழக்கமான ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்தனர். அந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாகவே பனிப்பொழிவு சற்று அதிமாக இருப்பதால் பாதைகளில் பனி படர்ந்திருந்தது.

அப்போது ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் எதிர்பாராதவிதமாகப் பனியில் சறுக்கி, பள்ளத்தாக்கு ஒன்றில் விபத்துக்குள்ளானது. இதில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இது குறித்து இந்திய ராணுவம் ட்விட்டரில், ``ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் விபத்துக்குள்ளானதில் மூன்று வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன'' எனத் தெரிவித்திருக்கிறது.