
கண்கள் வருத்தங்களைக் குவித்து விளையாடும் கண்ணாடி
நவீன தமிழ்க் கவிதைச் சூழலில் நன்கு அறியப்பட்ட கவிஞர் தேன்மொழி தாஸ். இது, இவரின் ஆறாவது கவிதைத் தொகுப்பு. காதல் முதல் சமகால அரசியல்வரை அத்தனையையும் இந்தத் தொகுப்பில் பதிவுசெய்திருக்கிறார். தேன்மொழி தாஸின் மொழி வெகு நுட்பமானது. ஆனால், எல்லோரையும் வசிகரிக்கக்கூடியது. ஆழ்ந்து படித்தால் கவிதைக்குள் திளைத்துவிடலாம்!

வல்லபி
நூலிலிருந்து...
நியாயங்கள் பச்சை
அவை
குப்பைமேனிச் செடியை பூனை ஏன் வணங்குகிறது
என்பதில்கூட இருக்கிறது
மருந்துகளின் மூல ஊற்றுகள்
மண்ணுக்கடியில் சத்தமிடுகின்றன.
*** *** ***
கண்கள்
வருத்தங்களைக் குவித்து விளையாடும்
கண்ணாடி
*** *** ***
என்னைத் தூக்கிக்கொள்ளுங்கள்
பாதாளத்தில் இருக்கிறேன்
எனதடியில் தகிக்கும்
எரிமலையை உருவி ஆவியாக்கிவிடுங்கள்
கொதித்தது போதும் போலிருக்கிறது.
*** *** ***
முத்தொழில் செய்கிறவனும்
செல்லாத பணத்தோடு சிக்கிக்கிடக்கிறான்.
*** *** ***
பூ புரண்டு படுப்பதை
உதிர்தல் என்று நம்புகிறோம்
இருக்கட்டும்
மரங்களின் வேர்கள்தான்
மின்னலென தரிசனமாகிச் செல்கின்றன
என்று வணங்குவோம்.
நூல் : வல்லபி
ஆசிரியர் : தேன்மொழி தாஸ்
வெளியீடு : எழுத்து பிரசுரம், ஜீரோ டிகிரி பப்ளிஷிங், எண்: 55(7), ஆர்.பிளாக், 6-வது அவென்யூ, அண்ணாநகர், சென்னை - 600 040.
பக்கங்கள் : 108
விலை : ₹200
மொபைல் : 98400 65000

வானம்பாடியின் மோகம்!
இது, கவிஞர் ஜானு இந்துவின் முதல் கவிதைத் தொகுப்பு. பெங்களூருவில் வசிக்கும் இவர் முதுகலை உளவியல் பட்டம் பெற்றவர். தனிமை, நிராகரிப்பின் வலி, துரோகம் ஏற்படுத்திய வடு எனப் பல உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகள் தொகுப்பு முழுக்க இருக்கின்றன. அனைத்துமே எளிய வார்த்தைகளில் விவரிக்கப்படுவதால், கவிதைகளுக்குள் ஆழ்ந்துபோவதும் எளிதாக இருக்கிறது. ஒரே மூச்சில் வாசித்துவிடக்கூடிய நூல்.

நூலிலிருந்து...
இடறி விழுந்த பறவையின் காயத்தை
மயிலிறகென வருடித் தேற்ற
பறவையின் பாஷை அறிந்திருக்க அவசியமில்லை
வலி உணரும் மனம் போதும்.
*** *** ***
எதிரெதிர் சந்திக்க நேர்கையில்
பரிமாறிக்கொள்ள மிச்சமிருக்கட்டும்
சில புன்னகைகளேனும்...
*** *** ***
ஏறக்குறைய எல்லா மனங்களுக்குள்ளும்
விவாதிக்க இயலாத விவாதிக்கக் கூடாத
புனித ரகசியங்கள் பொதிந்தே கிடக்கின்றன
எவரிடமும் பகிர முடியாமல்
*** *** ***
மழை தேடி அலுத்துப் போன
வானம்பாடியின் மோகம்
இப்பனிக்கால இரவில்
வழிந்துகொண்டிருக்கிறது.
*** *** ***
உந்தன் கைகள் பற்றிக்கொண்டது
வீழ்ந்து விடுவேனோ என்னும் பயத்தில் அல்ல
வீழ்ந்துவிட மாட்டேன் என்கிற நம்பிக்கையில்...
*** *** ***
இன்னும் கைகூடி வரவில்லை
எனது காயங்களுக்கு நானே
ஒத்தடம் இட்டுக்கொள்ளும் லாகவம்
*** *** ***
நூல் : கனவுகள் ஓடும் நாளங்கள்
ஆசிரியர் : ஜானு இந்து
வெளியீடு : வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை - 606 601.
பக்கங்கள் : 160
விலை : ₹140
மொபைல் : 94458 70995