
#Avaludan
உலகம் முதல் உள்ளூர் வரை, பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளை பகிரச் சொல்லி அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...
Cow Hug Day... இந்திய விலங்குகள் நல வாரியத்தின் வைரல் கடிதம்!
இந்திய விலங்குகள் நல வாரியம், காதலர் தினத்தை Cow Hug Day ஆகக் கொண்டாடும்படி வெளியிட்டிருக்கும் கடிதம் வைரலாகி வருகிறது. ‘பசு நம் இந்திய கலாசாரம், கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு, நம் வாழ்வாதாரம். பசுவின் நன்மைக்காக அதைக் கட்டிப்பிடிப்பது அதற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். எனவே பசு பிரியர்கள் பசுவின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றலுடனும் வாழ பிப்ரவரி 14-ம் தேதியை Cow Hug Day ஆகக் கொண்டாடலாம்’ என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது குறித்த உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்...

பார்த்தசாரதி
விலங்குகள் மேல் பாசம் மற்றவர் சொல்லி வருவதல்ல. மேலும், மாடுகளுக்கு என்று ஒரு தினம் கடைப்பிடிக்க வேண்டுமென்றால் வேறு ஏதாவது ஒரு நாளை அறிவித் திருக்கலாம். காதலர் தினத்தன்று ஏன் இந்தக் கூத்து?
Jeeva Thangappan
பழக்கமில்லாதவர்கள் மாடுகளைக் கட்டிப்பிடிக்கப் போய், அது முட்டி... விலங்குகள் நல வாரியத்துக்கு மனிதர்கள் மேல் அக்கறை இல்லை போலும்.
Saravanan V
விலங்குகள் நல வாரியம் செய்ய வேண்டிய வேலைகள் பல இருக்கும்போது, இப்படி ஒரு விஷயத்தை யோசித்து இந்த அறிக்கையை தயார் செய்தவர்களை நொந்து கொள்ளத்தான் வேண்டும்.
Sathia Moorthi
தமிழர்கள் மாடுகளை கொண்டாடுவதற்கான மாட்டுப் பொங்கல் விழாவில்கூட, மாடுகளை அலங்கரிக்க, மாடு களுக்கு உணவளிக்க என்றுதான் பின்பற்றப்படுகிறது. ஜல்லிக்கட்டில் அதற்குரிய திறன் பெற்றவர்கள்தான் கலந்துகொள்வார்கள். ஆனால், இப்படி பொதுமக்களை மாடுகளை கட்டிப்பிடிக்கச் சொல்லி, அது மாடுகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்று அறிக்கை விடுவதெல் லாம் கொடுமை. இந்த வாரியத்தில் உள்ளவர்கள் மூலம் தான் அங்கு வேலை நடக்கிறது என்று நினைக்கும்போது...
Meeran Meera
சிறிய நாடுகள் எல்லாம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும்போது, நாம் இப்படி பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்.
Elumalai Tmc
மாடு வளர்ப்பவர்களுக்கே இது சாத்தியமில்லை. மக்கள் காதலர் தினத்தன்று மருத்துவமனைதான் செல்ல வேண்டும்.

இந்தியாவின் முதல் திருநர் பெற்றோர்!
கேரள மாநிலத்தை சேர்ந்த திருநர் தம்பதி ஜியா - ஸஹாத். திருநம்பி ஸாஹத் தன் வயிற்றில் குழந்தையை சுமந்திருந்த படங்கள் சமீபத்தில் வைரலாகின. இப்போது இந்தத் தம்பதிக்கு கேரள அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. இந்தியாவின் முதல் திருநர் பெற்றோர் என்ற சிறப்பை பெற்றுள்ள இவர்கள், தங்கள் குழந்தையின் பாலினத்தை அறிவிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தொடங்கி பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருநர்களுக்கு தங்களது காதல், திருமணம், குழந்தை முடிவுகள் குறித்த வெளி கிடைத்துள்ளது பற்றியும், அதை நார்மலைஸ் செய்யும் ஏற்கும் விதத்தில் சமூகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றம் பற்றியும் உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
Shanthi Durairaj
ஒவ்வொருவருக்கும் அவர்கள் விருப்பப்படி வாழும் உரிமை உள்ளது. ஆனால், ஆண்கள், பெண்களைவிட திருநர்களுக்கு இது நடப்பதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவே. அப்படியான சூழலில், இப்படி ஒரு செய்தி வரவேற்புக்குரியது. மூவரும் நல்வாழ்வு வாழட்டும்!
Saranya
திருநர்கள் திருமணங்களை இப்போது அங்கொன்று, இங்கொன்றுமாக பார்த்துவருகிறோம். இது அடுத்தகட்ட நகர்வு. ’இந்தியாவிலேயே முதன்முறையாக’ என்ற சிறப்புக்குரிய இந்த முடிவையும், முயற்சியையும் எடுத்த அந்த இளம் தம்பதிக்கு வாழ்த்துகள். குடும்பங்களில் இருந்து திருநர்கள் விரட்டப்படுவதில் இருந்து இணை, குழந்தை என தங்களுக்கான குடும்பங்களை அவர்கள் அமைத்துக்கொள்வது வரையிலான இந்த மாற்றம்... சிறப்பு.
Kishor
சமூகத்தின் ஒவ்வொரு ‘முதன்முதலாக’ நிகழ்வுகளுக்குப் பின்னும் பல போராட்டங்கள் இருக்கும். அப்படி இந்தத் தம்பதி கடந்து வந்த போராட்டங்களும் பல இருக்கும். அனைத்தையும் தாண்டி, ’நாம் பெற்றோர் ஆகலாம்’ என்ற நம்பிக்கையை சக திருநர்களுக்கும் தந்திருக்கும் இவர்களை, மக்களும் வரவேற்று வாழ்த்துவது நன்று.
Maheshwari Muniyappa
இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் தொடர்ந்து நடக்க நடக்கத்தான் அது சமூகத்தில் வழக்கமாகும். அதற்கு, நம் ஆதரவு அவர்களுக்குத் தேவை. திருநர் சமூகத்தை புரிந்துகொள்வதில், ஏற்றுக்கொள்வதில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார்கள் என்பதில் மகிழ்ச்சி.
sabarisakthi70
பள்ளி முதல் சமூக வாழ்க்கை வரை, அந்தக் குழந்தைக்கு எதிர்காலத்தில் தன் பெற்றோர் குறித்த எந்தக் கவலையும் வந்துவிடாதபடி அந்தக் குடும்பத்துக்கு நம் அன்பையும் ஆதரவையும் தர வேண்டும்.