
அடுத்தமுறை விடுமுறைக்கு வரும்போது ரத்த தான முகாம் நடத்தலாமான்னு அப்பா, அம்மாகிட்ட சொல்லியிருக்கேன்.

‘‘பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தா மட்டும் போதாது. நாமளும் ஒத்துழைக்கணும். குழந்தைகளாகிய நாம இப்போயிருந்தே பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தாத வாழ்க்கைக்குப் பழகிக்கணும். வாட்டர் பாட்டில், லஞ்ச் பாக்ஸ், பிளாஸ்டிக் பேக் இதையெல்லாம் தவிர்க்கணும். அப்பா, அம்மாகிட்ட, ‘எனக்கு இது வேணாம்'னு சொல்லுங்க. இது ஆரம்பத்துல சிரமமாகத்தான் இருக்கும். ஆனா, பழகிட்டோம்னா இந்தப் பூமிக்கு மட்டுமல்ல; நமக்கும் பெரிய நன்மையாக இருக்கும். ஏன்னா, நாமதான் பெரியவங்களாகி நாளைக்கு இந்தப் பூமியில இருக்கப்போறோம்'' என்று அந்தப் பள்ளியின் நிகழ்ச்சியில் பேசுகிறார், ஒரு குட்டி சிறப்பு விருந்தினர்.

சிவகங்கை மாவட்டம், சோழபுரம் அருகில் உள்ள நாலுகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ்குமார். இவரின் பெற்றோர் சிவக்குமார் மற்றும் பொன்னிமலர், துபாயில் பொறியாளர்களாகப் பணிபுரிகிறார்கள். தனுஷ்குமார் துபாயில் ஏலியன் ஜுனியர்ஸ் என்னும் பள்ளியில் ஐந்தாம் வகுப்புப் படிக்கிறார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்புப் பிரசாரம் செய்த நிகழ்ச்சிதான் இது. நெகிழி ஒழிப்பு பற்றிப் பேசியதுடன், துணிப்பைகளையும் மரக்கன்றுகளையும் மாணவர்களுக்கு வழங்கினார்.

‘‘தமிழ்நாட்டை எனக்கு ரொம்பப் பிடிக்கும். லீவுக்காக இங்கே வரும்போதெல்லாம் எங்கே பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பையாக இருக்கிறதைப் பார்த்து மனசுக்குக் கஷ்டமா இருக்கும். இது மண் வளத்தையே அழிச்சிடும்னு படிச்சிருக்கேன். என் அப்பா, அம்மாகிட்ட பேசினேன். நான் இதுவரை போட்டிகளில் பெற்ற பரிசுப் பணம், சேமிப்புப் பணத்தில் துணிப்பைகளையும் மரக்கன்றுகளையும் வாங்கிக்கொடுக்கிறதா சொன்னேன். அப்படித்தான் இந்த ஸ்கூலில் ஒரு விதையாக இதை ஆரம்பிச்சு இருக்கேன்'' என்று புன்னகைக்கிறார் தனுஷ்குமார்.

‘‘அடுத்ததா, சந்தை, பஸ் ஸ்டாண்ட்னு பொது இடங்களுக்கும் போய்ட்டு பிரசாரம் செய்யப்போறேன். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க துணிப்பைகள் வழங்குறதோடு, மண்வளத்தைக் காத்து மழைபெற மரக்கன்றுகளையும் கொடுக்கிறேன். துபாயில் அரசாங்கமே இதுமாதிரி செய்யுது. என்னைப் பார்த்துட்டு நண்பர்களும் அவங்கவங்க ஊர்களில் இதுமாதிரி பிளாஸ்டிக்குக்கு எதிரான பிரசாரங்களை ஆரம்பிச்சிருக்காங்க. துபாயில் நானே நிறைய நிறுவனங்களுக்குச் சென்று, பயனற்ற காகிதங்களை வாங்கிட்டு வந்து, அதைச் சேகரிக்கும் அமைப்பிடம் கொடுப்பேன்'' என்கிற தனுஷ்குமாருக்கு இதயநல மருத்துவராக வேண்டும் என்பது கனவு.

‘‘அடுத்தமுறை விடுமுறைக்கு வரும்போது ரத்த தான முகாம் நடத்தலாமான்னு அப்பா, அம்மாகிட்ட சொல்லியிருக்கேன். அதையும் செய்வேன்'' என்கிறார் தனுஷ்குமார், மாறாத புன்னகையுடன்!