தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிகளில் தமிழகத்தின் கடன் எவ்வளவு? #DoubtOfCommonMan

தமிழக அரசு அதிக அளவில் கடன் வாங்குவதற்கு இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், "தமிழக அரசின் தற்போதைய கடன் எவ்வளவு? கடன் அதிகரிக்கக் காரணங்கள் என்ன?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் வாசகர் ஜெயபிரகாஷ். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
மாதம் முதல் தேதி தொடங்கியவுடனே மக்கள் பலருக்கும் தோன்றும் முதல் எண்ணம் அந்த மாதத்துக்கான இ.எம்.ஐ தொகை. பைக் லோன், ஹவுசிங் லோன், திருமணக் கடன், கல்விக் கடன் எனப் பல கடன் தொகைகளுக்கு மத்தியில்தான் பலரது அன்றாடம் உழல்கிறது. கடனை அடைப்பதற்கான முயற்சி, அதற்கான வட்டி என உழைப்பின் சரிபாதி கடனும் கடன் சார்ந்த செலவுமாகவே நகரும். தனிமனிதன் தன் வளர்ச்சிக்காக, மேம்பாட்டுக்காகக் கடன் பெறுவதைப் போலவே அரசும் தன் மக்களின் வளர்ச்சிக்காகவும் வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் கடன் வாங்குகிறது. தமிழக அரசு 2006-ம் ஆண்டிலிருந்து பெற்ற கடன் தொகை குறித்துப் பார்ப்போம்.

2006 தி.மு.க ஆட்சியின் முடிவில் ரூ.57,457 கோடியாக இருந்தது தமிழக அரசின் கடன். 2011-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின் முடிவில் ரூ.1,14,000 கோடியாக அதிகரித்தது. அ.தி.மு.க ஆட்சியில், 2016-17ல் ரூ.3,17,000 கோடி ரூபாயாகவும், 2019 மார்ச் மாதம் கடன் அளவு ரூ.3,55,844 கோடியாகவும் உயர்ந்துள்ளது. தமிழகம் வாங்கியுள்ள கடனுக்கு ஆண்டிற்கு ரூ.20,000 கோடி வட்டி செலுத்தப்படுகிறது.
ஏன் தமிழகத்தின் கடன் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கிறது என அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோவிடம் கேட்டோம்.
"தமிழக அரசு அதிக அளவில் கடன் வாங்குவதற்கு இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவையாக நான் பார்க்கிறேன். ஒன்று, முன்பு நமது அரசுக்கு மக்களிடமிருந்து அதிக அளவில் வரிப்பணம் கிடைத்து வந்தது. ஆனால், ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு மத்திய அரசுக்குதான் அதிக வரிப்பணம் கிடைக்கிறது. மாநில அரசுக்கு வழங்கப்படும் 30 சதவிகிதப் பணம் முறையாக வழங்கப்படுவதில்லை. பெரும்பாலான நிதி மத்திய அரசின் வசமே இருக்கிறது. இது மத்திய மாநில அரசுகளின் உறவுகளிலேயே பாதிப்பை உருவாக்கும். இது ஆழமாக விசாரிக்கப்பட வேண்டிய பிரச்னை. பிற மாநிலங்களைவிட தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்குக் கிடைக்கக்கூடிய வரி அதிகம். பீகாரைவிட தமிழகத்திலிருந்துதான் அதிக வரிப்பணம் கிடைக்கிறது. ஆனால், மத்திய அரசு பீகாரைவிட குறைந்த அளவு நிதியைத் தமிழகத்துக்கு ஒதுக்குகிறது. இவை தவிர ஒவ்வோர் ஆண்டும் துறை ரீதியாக பட்ஜெட் ஒதுக்கும். அந்த நிதி ஒதுக்கீடும் தமிழக அரசுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. இதன் காரணமாகவே முதல்வரும், துணை முதல்வரும் அடிக்கடி டெல்லி சென்று மனு கொடுத்து வருகிறார்கள். கூடுதல் நிதி கேட்கிறார்கள். அவர்களுக்கு அது கிடைப்பதில்லை.
நம்முடைய தமிழக அரசும் கிடைக்கும் நிதியைச் சரியான முறையில் நிர்வாகம் செய்வதில்லை. என்னைப் பொறுத்தவரையில், தமிழக அரசு நிதி நிர்வாகத்தில் சரிவர இயங்குவதில்லை. உதாரணமாக சமீபத்தில் எனக்கு வந்த ஒரு தகவலைச் சொல்கிறேன். ஒரு குளத்தைக் குடி மராமத்து செய்வதற்காக அரசின் சார்பில் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் பகுதி மக்கள் ரூ.3 லட்சம் கூட மராமத்துப் பணிக்காகச் செலவு செய்யவில்லை என்கிறார்கள். லஞ்சம், ஊழல் போன்றவை நிகழாமல் தடுக்க வேண்டும்.
நிதி நிர்வாகத்தை மேம்படுத்தி, லஞ்சம், ஊழல் போன்ற முறைகேடுகளைத் தவிர்க்க வேண்டும். அதுதான் தமிழக அரசு கடன் பெறுவதிலிருந்து விடுபட வழி." என்றார்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!