நீலகிரி மாவட்டம், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகளில் உலவி வந்த பி.எம்-2 பந்தலூர் மக்னா யானை (தந்தம் இல்லாத ஆண் காட்டுயானை) குடியிருப்புகளை சேதப்படுத்தி அரிசியை உட்கொண்டு வந்தது. மனிதர்களையும் தாக்கி வந்தது. யானை- மனித எதிர்கொள்ளல்களைத் தவிர்க்கும் வகையில் இந்த மக்னா யானையைப் பிடிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் அடிப்படையில், அந்த யானையைப் பிடித்து முதுமலை அடர் வனத்துக்குள் விடுவிக்க வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். கடந்த மாதம் இந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கழுத்தில் ரேடியோ காலர் பொறுத்தி முதுமலை அடர் வனத்துக்குள் விடுவித்து கண்காணித்து வந்தனர்.
முதுமலையில் வலம் வந்த மக்னா யானை. கேரள மாநிலம் சுல்தான்பத்தேரி பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றது. அங்கும் குடியிருப்புகளை சேதப்படுத்தி மனிதர்களைத் தாக்க முயன்றுள்ளது. உடனடியாக மக்னா யானையைப் பிடித்து யானைகள் முகாமுக்குக் கொண்டு செல்ல கேரள வனத்துறை உத்தரவிட்டது. யானையைப் பிடிக்கும் பணியில் கேரள வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சுல்தான்பத்தேரி பகுதியில் உள்ள வனத்தில் மக்னா இருப்பதைக் கண்டறிந்து கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

கும்கிகளைக் கொண்டு யானையைக் கட்டுக்குள் கொண்டு வந்து வாகனத்தில் ஏற்றி முத்தாங்கா சரணாலயத்தில் உள்ள முகாமுக்குக் கொண்டு சென்றனர். இது குறித்து பேசிய கேரள வனத்துறை அதிகாரிகள், ``குடியிருப்புப் பகுதிகளில் உலவுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. மீண்டும் வனத்துக்குள் விடுவித்தாலும் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. வேறு வழியின்றி இந்த யானையை கும்கியாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. யானை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளனர்.