இந்தியாவில் கொரோனா வைரஸ், தொடர்ந்து பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மே மாதம் 3 -ம்தேதி வரையில் நீட்டித்து நேற்று உத்தரவு பிறப்பித்தார் பிரதமர் மோடி. எனினும், ஏப்ரல் 20 -ம் தேதிக்குப் பிறகு சில தளர்வுகள் இருக்கும் எனவும் இது தொடர்பாக மத்திய அரசின் முழுமையான வழிமுறை விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மத்திய அரசு தற்போது ஊரடங்கு உத்தரவு தொடர்பாக சில வழிமுறைகளை அறிவித்துள்ளது. அதில் எந்த எந்த விஷயங்களுக்கு மே 3 -ம் தேதி வரையில் தடை தொடரும் என்றும், எந்த எந்த விஷயங்களுக்குத் தடை தளர்த்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
மே மாதம் 3-ம் தேதி வரை எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்?
* பாதுகாப்பு தேவைகள் தவிர்த்து, அனைத்து விதமான வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவை
* ரயில் சேவைகள், மெட்ரோ ரயில் சேவைகள், பொதுப் பேருந்து போக்குவரத்து
* மருத்துவக் காரணங்கள் அல்லாமல் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களுக்குப் பயணம் செய்யத் தடை.
* அனுமதிக்கப்பட்ட சில தொழிற்சாலைகளைத் தவிர்த்து அனைத்துத் தொழிற்சாலைகள் மற்றும் வணிகச் செயல்பாடுகள் செயல்படை தடை தொடரும்
* கல்வி நிலையங்கள்

*டாக்ஸி, கேப் சேவைகள்
* ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், திரையங்கம், விளையாட்டுத் திடல்கள், நீச்சல் குளம், ஜிம், ஆடிட்டோரியம், சிறிய ஹால் முதலியவற்றுக்குத் தடை தொடரும்.
* அனைத்து விதமான, சமூக, அரசியல், விளையாட்டு, மதம், கலாசாரக் கூட்டங்களுக்குத் தடை.
* அனைத்து மதக் கோயில்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.
* இறுதிச் சடங்கில் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ளக் கூடாது.

ஹாட்ஸ்பாட் மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதிகள்!
* கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள கட்டுப்பாடுகளை மாநில, மாவட்ட நிர்வாகம் கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
* அத்தியாவசியத் தேவைகளின்றி இந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் வெளியில் நடமாடக்கூடாது.
ஏப்ரல் மாத 20 -ம் தேதிக்குப் பின்னர்...!
மக்களின் கஷ்டங்களை மனதில் கொண்டு ஏப்ரல் 20 -ம் தேதிக்குப் பின்னர் கொரோனாவால் பாதிக்கப்படாத பகுதிகளில் சில தளர்வுகள் இருக்கும் எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு அதற்கு முன்னதாக மாவட்ட, மாநில நிர்வாகம் முறையான தனிமனித விலகல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது. அனுமதிக்கப்படும் தொழிற்சாலைகள், அலுவலகங்கள் எல்லாவற்றிலும் தனிமனித விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.
* மத்திய அரசு தெரிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
* அனைத்து விதமான மருத்துவ சேவைகளும் ஏப்ரல் 20 -க்குப் பின் செயல்படலாம். இதில் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்ஸ், மருந்துக் கடைகள், மருத்துவப் பரிசோதனை நிலையங்கள், மருத்துவ ஆய்வுக் கூடங்கள், கால்நடை மருத்துவமனை, மருத்துவமனை சார்ந்த தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், மருத்துவக் கட்டமைப்புப் பணிகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

விவசாயம்!
* விவசாயம் சார்ந்த அனைத்துப் பணிகளுக்கும் அனுமதி வழங்கப்படும். பணியிடத்தில் தொழிலாளர்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.
*உரம், பூச்சிக்கொல்லி, விதைகள் போன்ற விவசாயம் சார்ந்த பொருள்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
*விவசாயம் சார்ந்த அறுவடைக் கருவிகள் போன்றவை வெளிமாவட்டங்கள் அல்லது வெளி மாநிலங்கள் முதலியவற்றுக்குச் செல்லலாம்.
* மீன் பிடிக்க அனுமதி வழங்கப்படும். அது தொடர்பன விற்பனை, பேக்கேஜிங் முதலியவற்றுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மீன் மற்றும் மீன் சார்ந்த பொருள்கள் தொடர்பான தயாரிப்பில் ஈடுபடும் தொழில்களுக்கு அனுமதி.
* தோட்டக்கலை சார்ந்த தொழிலுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. எனினும் 50% ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். தனிமனித விலகல் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
* தேயிலைத் தோட்டம் மற்றும் மற்ற தோட்டக்கலை சார்ந்த தொழிற்சாலைகளில் 50% ஊழியர்களுடன் இயங்கலாம்.
* பால் உற்பத்தி, விநியோகம், விற்பனை முதலியவற்றில் முழுமையாகச் செயல்படலாம்.
* கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவன உற்பத்திக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
*மேலும் கால்நடை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மையங்கள் செயல்படலாம்.
நிதித்துறை:
* நிதித்துறை சார்ந்த பணிகள் தொடர்ந்து செயல்படும்.
* வங்கிக் கிளைகள், ஏடிஎம் முதலிய சேவைகள் தொடர்ந்து செயல்படும். வங்கிகளில் தனிமனித விலகலை மக்கள் கடைப்பிடிப்பதை வங்கியும் மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.
* செபி, மற்றும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் செயல்படலாம்.
* குழந்தைகள் காப்பகம், மாற்றுத்திறனாளிகளுக்கான மையம், முதியோர் இல்லம் முதலியவை செயல்படலாம்.

* அங்கன்வாடிகள் செயல்படும். எனினும் பயனாளிகள் அங்கன்வாடிகளுக்கு வர அனுமதி கிடையாது. சத்தான உணவுகள் 15 நாள்களுக்கு ஒருமுறைப் பயனாளிகளின் வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்யப்பட வேண்டும்.
*அனைத்துக் கல்வி நிலையங்கள் மூடியே இருக்கும்.
* எனினும் இந்த நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் தங்களின் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தலாம்.
* கல்விக்காக தூர்தர்ஷன் மற்றும் மற்ற கல்வி சேனல்கள் பயன்படுத்தப்படும்.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் தகுந்த தனிமனித விலகலுடன் நடக்க அனுமதி வழங்கப்படுகிறது. இதில் விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை சார்ந்த பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.,
* விவசாயம் மற்றும் நீர் சேமிப்பு தொடர்பான அனைத்து மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* மக்கள் தேவைக்காக எண்ணெய் மற்றும் கேஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மின் இணைப்பு சார்ந்த பணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. போஸ்டல் சேவைகள், தண்ணீர், தூய்மைப் பணி, கழிவுகள் மேலாண்மை முதலிய பணிகளுக்கு அனுமதி.
* அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் ட்ரக், லாரிகள் மாவட்ட, மாநில எல்லை கடந்து செல்ல அனுமதி.
* ரயில்வே, ஏர்போர்ட் போன்ற பணியிடங்களுக்குச் செல்லும் பணியாளர்களுக்கு பாஸ் வழங்கப்படும். அதன் மூலம் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும்.
*அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் கடைகளுக்கு அனுமதி. எனினும் மாவட்ட நிர்வாகம் டோர் டெலிவரி செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.
*அச்சு ஊடகம், எலக்ட்ரானிக் ஊடகங்கள் செயல்படலாம். இதில் காட்சு ஊடகம், முதல் டிடிஹெச் வரை அடங்கும்.
* ஐடி மற்றும் அது சார்ந்த நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம்.

* கால் சென்டர்கள் அரசுகளின் நடவடிக்கைகளுக்கு மட்டும் இயங்கலாம்.
* குரியர் சர்வீஸ்கள், குளிசாதனக் கிடங்குகள், தனியார் செக்யூரிட்டு முதலியவை செயல்படலாம்.
*எலக்ட்ரீசியன், ப்ளம்பர், வாகன மெக்கானிக்ஸ், தச்சு தொழில் செய்பவர்கள் பணியாற்றலாம்.
*கிராமப் புறங்களில் இயங்கும் சிறு, குறு நிறுவனங்கள் இயங்க அனுமதி.
* உணவு தயாரிக்கும் நிறுவனங்கள், அத்தியாவசியப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனம், அது தொடர்பான மற்ற தொழிற் நிலையங்கள் இயங்கலாம்.
* நிலக்கரி உற்பத்தி, சுரங்கம், மினரல் உற்பத்தி முதலியவை இயங்கலாம். தொழிலாளர்களின் போக்குவரத்து, அவற்றுக்குத் தேவையான பொருள்கள் போக்குவரத்துக்கு அனுமதி உண்டு.
* கட்டுமான தொழிலைப் பொறுத்தவரை சாலை, விவசாயம் சார்ந்த கட்டுமான போன்ற பணிகள் கிராமப் புறங்களில் செயல்பட அனுமதி.

வாகனக் கட்டுப்பாடு:
* தனியார் வாகனங்கள் எமர்ஜன்சி தேவைகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும். காரில் சென்றால் ஓட்டுநருக்கு அனுமதி உண்டு. ஆனால் மற்றொருவர் பின் சீட்டில்தான் அமர வேண்டும். இருசக்கர வாகனம் என்றால் ஒருவருக்கு மட்டுமே அனுமதி.
* மத்திய மாநில அரசு அலுவலகங்கள் அது சார்ந்த தன்னிச்சையாகச் செயல்படும் அலுவலகங்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி இயங்கலாம்.
* வீட்டு க்வாரன்டைனில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டவர்கள் அதை மீறினால் சட்டரீதியான நடவடிக்கைகள் பாயும். இதை மாவட்ட நிர்வாகம் கடுமையாகப் பின்பற்ற வேண்டும்.
மாவட்ட மாஜிஸ்ட்ரேட் மத்திய அரசு விதித்துள்ள ஊரடங்கு உத்தரவைக் கடுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கலாம்.
முறையான வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் பின்பற்றிய பின்னர், பாதுகாப்பை உறுதிசெய்த பின்னர் ஏப்ரல் 20 -க்குப் பின்னர் அனுமதி வழங்கப்பட்ட துறைகள் மட்டும் செயல்படலாம். இந்தத் தளர்வுகள் எல்லாம் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் மட்டும்தான். கொரோனா பாதித்த பகுதிகள் ஊரடங்கு மே மாதம் 3 -ம் தேதி வரை தொடரும்.