
எனக்குச் சிறுவயதிலிருந்தே இயற்கை மீது ஆர்வம் உண்டு. பயணங்கள் மூலம் இந்த பூமியின் ஆச்சர்யங்களை, அபூர்வங்களை தரிசிக்க விரும்பினேன்.
``காடும், கரையும் எல்லோருக்கும் பிடிக்கும்தான். ஆனால், அந்த ஆசைக் குத் தீனிபோட்டு தங்கள் கால்களைக் கூட்டிட்டுக்கொண்டு போய் காட்டுவது சிலர்தான். நானோ, நான் ரசிக்கும் இந்த பூமியின் எழிலை மற்றவர்களும் ரசிக்க, பல பெண்களையும் இணைத்து பசுமைப் பயணங்கள் செல்கிறேன்’’ என்கிறார் சென்னை, பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரியின் முதல்வர் லிலியன் ஜாஸ்பர்.
தங்கள் கல்லூரி மாணவிகளை சூழலியல் சார்ந்த இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் இவர், பாடத் திட்டத்தில் `சூழல் இலக்கியம்' (Eco Literature) என்ற பேப்பரை அறிமுகப் படுத்தியுள்ளார். கல்லூரியில் ‘கம்யூனிட்டி கார்டன் (Community Garden)’ உருவாக்கி, ஆர்வமுள்ள மாணவிகளுக்கு இடம் ஒதுக்கி அவர்களுக்கு விருப்பமான செடிகளை வளர்க்க வைக்கிறார். கென்யா நாட்டின் மசை மாரா வனப் பகுதிக்கு தான் சென்ற அனுபவத்தை `கென்யன் ஒடிஸி' (Kenyan Odyssey) என்ற புத்தகமாகவும் எழுதியுள்ளார்.

“எனக்குச் சிறுவயதிலிருந்தே இயற்கை மீது ஆர்வம் உண்டு. பயணங்கள் மூலம் இந்த பூமியின் ஆச்சர்யங்களை, அபூர்வங்களை தரிசிக்க விரும்பினேன். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு நில சிறப்புண்டு. அந்த வகையில் உத்தரகண்ட் எனக்கு மிகவும் பிடிக்கும். அங்குள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில், முதன் முறையாக ஒரு புலியை நேருக்கு நேராகப் பார்த்த அனுபவம் அலாதியானது. மேகாலயாவில், உயிர் வேர்கள் கொண்டே காட்டுவாசிகள் ஏற்படுத்தியிருந்த பாலத்தைப் பார்த்தபோது சிலிர்த்துப்போனது. கர்நாடகாவில் உள்ள பந்திபூர் தேசிய பூங்கா, தந்தேலி வன விலங்குகள் சரணாலயம் எல்லாம், இயற்கையால் மட்டுமே நமக்குத் தர முடிகிற பரவசங்களை உணரவைத்தன. காடுகளின் தூய்மையான, தரமான காற்று நமக்குக் கொடுக்கும் புத்துணர்வுக்கு இணையேயில்லை’’ என்று லயித்துப் பேசுபவர், தன்னுடன் பணியாற்றும் பெண்களையும் தன் பய ணத்தில் இணைத்துக்கொள்வது பற்றி பகிர்ந்தார்.
“என்னுடன் பணியாற்றுபவர்களில் இயற்கை ஆர்வமுள்ளவர்களை ஒருங்கிணைத்து, விடுமுறை களில் டிராவல் பேக்குகளை தூக்கிவிடுவோம். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பயணம். ‘பெண்கள் மட்டும் சேர்ந்தா இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க?!’ என்று நாங்கள் செல்லும் இடங்களில் உள்ள மக்கள் ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள். எங்களுக்கு நாங்களே துணை என்பது எங்கள் தைரியத்தையும் தன்னம் பிக்கையையும் அதிகரிப்பதோடு, எங்களுக்கு இடையேயான உறவையும் மேம்படுத்தும்’’ என்பவர், ‘காடுகள் மலைகள் தேவன் கலைகள்’ என்று தன் கணவர், இரண்டு மகன்களுடன் மேற் கொள்ளும் பயணங்களும் அதிகம்.
தான் எழுதிய புத்தகம் பற்றி பகிர்ந்தவர், “கென்யா நாட்டின் மசை மாரா வனப்பகுதிக்குச் சென்றிருந்தபோது, புலம்பெயர்வு காலத்தில் அங்குள்ள விலங்குகள் கூட்டமாக வனத்தைக் கடப்பதைப் பார்க்க பிரமாண்டமாக இருந்தது. அது அடர்ந்த காடாக இல்லாமல் பெரும்பாலும் புல்வெளிகள்தான் என்பதால், நிறைய புகைப் படங்கள் எடுக்க முடிந்தது. ஊர் திரும்பிய பிறகும், நானும், அந்தப் பயணத்தில் என்னுடன் கலந்து கொண்ட, என்னுடன் பணியாற்றுபவரும் இணைந்து, எங்களிடமிருந்த புகைப்படங்கள் அனைத்தும் பயன்படுத்தி அந்த அனுபவத்தை `கென்யன் ஒடிஸி’ என்ற புத்தகமாக எழுதினோம்’’ என்பவர், தங்கள் கல்லூரி மாணவிகளை அழைத்துச் செல்லும் சூழலியல் சுற்றுலா பற்றி பகிர்ந்தார்.
‘`பாடத் திட்டத்தில் இருக்கும் ‘சூழலியல் இலக்கியம்’ என்கிற பாடத்தின் ஒரு பகுதியாக எங்கள் மாணவிகளை பரம்பிக்குளம், கொல்லிமலை போன்ற பகுதிகளுக்கு அழைத்துச் செல்வேன். சூழலை சிதைக்காமல் இயற்கையோடு ஒத்து வாழும் பொறுப்பு, மலைவாழ் மக்கள் மீதான மரியாதை போன்ற மாற்றங்களை எதிர்கால சந்ததியிடம் ஏற்படுத்த முடிகிறது. கல்லூரியில் ’கம்யூனிட்டி கார்டன்’ அமைத்து மாணவிகளை மிளகாய், வெண்டை, கீரை என விவசாயம் செய்ய வைத்திருப்பதிலும் மகிழ்ச்சி’’ என்றவர்,
``இயற்கை எழில் சூழ்ந்த இடங்களை ரசிக்க வெளிநாடு, வெளிமாநிலம்தான் செல்ல வேண்டுமென்பது இல்லை. டாப் சிலிப், வால்பாறை, திருநெல்வேலி அருகிலுள்ள மாஞ்சோலை என நம்மைச் சுற்றியே அவ்வளவு அழகாகப் பூத்துக் கிடக்கிறது பூமி. புறப்படுவோம்!’’ - ஆர்வம் விதைக்கிறார் லிலியன் ஜாஸ்பர்.