இங்கிலாந்தில் கர்ப்பிணிகள் புகை பிடிப்பதை நிறுத்தினால் அவர்களுக்கு 400 பவுண்டுகள் வழங்கும் திட்டத்துக்கு இங்கிலாந்தின் ஷெசயர் கிழக்கு சுகாதார கவுன்சில் அனுமதி அளித்துள்ளது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.

ஷெசயர் கிழக்கு பகுதியில் கர்ப்பிணிகளில் 10% பேர் புகைபிடிப்பவர்களாக உள்ளனர். இது இங்கிலாந்தின் சராசரியை விட அதிக அளவில் இருப்பதாகவும் ஷெசயர் கிழக்குப் பகுதி சுகாதாரக் குழுவுக்கு மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. புள்ளி விவரங்களின் அடிப்படையில், 2020-21ம் ஆண்டில், பிரசவத்தின் போது, 9.6% கர்ப்பிணிகள் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாகத் தங்களைத் தெரிவித்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்ப்பிணிகள் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடும் பட்சத்தில் அவர்களுக்கு ஆறு தவணைகளில் 116,000 பவுண்டுகள் வழங்க உள்ளதாகவும், மேலும் கர்ப்பிணிகள் உள்ள வீடுகளில் உள்ள மற்ற புகைபிடிப்பாளர்கள் புகைப்பழக்கத்தை கைவிடும் நிலையில், அவர்களுக்கு 200 பவுண்டுகளை வழங்க உள்ளதாகவும் ஷெசயர் கிழக்கு பகுதி சுகாதாரக் குழு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால், சுமார் 450,000 பவுண்டுகள் சுகாதார சேமிப்புக்கு வழிவகுக்கும் என்று அப்பகுதியின் பொது சுகாதார இயக்குநர் டாக்டர் மாட் டைரர் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிகள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட அரசு ஊக்கத்தொகை வழங்கும் முன்னோடி திட்டத்துக்கு, பிரிட்டிஷ் கவுன்சில் உறுப்பினர்கள் அனைவரும் ஒப்புதல் தர, காங்கிள்டன் ஈஸ்ட் லிபரல் டெமாக்ராட் கவுன்சிலர் டெனிஸ் மர்பி மட்டும் இத்திட்டத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் தானாக முன்வந்து செய்ய விரும்பும் ஒன்றை நிறுத்துவதற்காக பணம் கொடுப்பதை எதிர்ப்பதாக மர்பி தெரிவித்துள்ளார்.

புகை பிடிப்பதை நிறுத்தினால் பணம் கிடைக்கும் என்பதற்காக கர்ப்பிணிகள் பலர் பொய்யான வாக்குறுதிகளை அளித்தால், வீண் பண விரயம் ஏற்படும் அபாயம் இருப்பதாக சில உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கர்ப்பிணிகள் புகை பிடிப்பதை நிறுத்தினால் அரசு பணம் வழங்கும் என்ற அறிவிப்பு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.