
சினிமா பிரபலங்கள் தங்கள் முதல்நாள் ஷூட்டிங் பற்றிப் பகிரும் பகுதி...
”நான் குச்சுப்புடி டான்ஸர். பாரதிராஜா சாரும் அவர் தம்பி ஜெயராஜ் சாரும் ஒரு படம் தயாரிக்கப் போறதாவும் அதுக்காக ஹீரோயின் தேடிக்கிட்டிருக்கதாவும் தெரியவந்தது. அப்போ என்னுடைய போட்டோக்களைப் பார்த்துட்டு என்னை ஹீரோயினா கமிட் பண்ணினாங்க. அப்போ, ‘உனக்கு வசீகரமான முகம் இருக்கு. நிச்சயமா பெரிய ஹீரோயினா வருவ’ன்னு வாழ்த்தினார், பாரதிராஜா சார். அந்தப் படம்தான், ‘மெல்லப்பேசுங்கள்.’ சந்தானபாரதி சாரும் பி.வாசு சாரும் சேர்ந்து இயக்குனாங்க. டைட்டில் கார்டுல `பாரதிவாசு’ன்னு வரும். முதல் நாள் ஷூட்டிங் அந்தத் தயாரிப்பு நிறுவனத்துடைய ஆபீஸ்லேயே நடந்தது. அந்தப் படத்துல எனக்கு டீச்சர் கேரக்டர்.


ஷூட்டிங்குக்குப் போறதுக்கு முன்னாடி நிறைய முறை ரிகர்சல் நடந்தது. இருந்தும் ரொம்பப் பதற்றமா இருந்தேன். நான் நடிச்ச முதல் ஷாட் என்னன்னா, வேகவேகமா படிக்கட்டு ஏறிப்போய் மாடியில இருக்கிற என் ப்ரெண்ட்கிட்ட பேசணும். முதல் வசனம் என்னன்னு கேட்டுடாதீங்க. ஞாபகமில்லை. ஆர்வம் இருந்ததே தவிர, நடிப்பு பத்தி எதுவும் தெரியாது. வாசு சாரும் சந்தானபாரதி சாரும் என்ன சொல்றாங்களோ அதை அப்படியே நடிச்சேன். நடிச்ச முதல் டேக்கே ஓகேன்னு சொல்லிட்டாங்க. எதிர்பார்த்த அளவு படம் ஹிட்டாகலை. ஆனா, அந்தப் படம் பார்த்து ‘சித்தாரா’ன்னு ஒரு தெலுங்குப் பட வாய்ப்பு கிடைச்சது. அந்தப் படம் அங்க நல்ல ஹிட். அப்படிதான் என் கரியர் ஆரம்பமானது. இன்னொரு விஷயம் என்னன்னா, என்னை முதன்முதல்ல பாக்யராஜ் சார், ‘தூறல் நின்னுபோச்சு’ படத்துல நடிக்கக் கூப்பிட்டார். ஆனா, அப்போ அது நடக்கலை. அப்புறம்தான், ‘மெல்லப் பேசுங்கள்’ வாய்ப்பு வந்தது. 37 வருஷமாகிடுச்சு, இப்போதான் நடந்த மாதிரி இருக்கு. இத்தனை வருஷம் கழிச்சு நீங்க நான் நடிச்ச முதல் படத்தைப் பத்திக் கேட்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.”