நடிகர் சித்தார்த் தமிழில் அடுத்த ரிலீஸாக 'இந்தியன் 2' படத்துக்காகக் காத்திருக்கிறார். தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் நடித்து வரும் அவர், இன்று பதிவிட்ட ஒரு இன்ஸ்டா ஸ்டோரி விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மதுரை விமானநிலையத்தில் 'CRPF' அதிகாரிகள் எவ்வளவு சொல்லியும் தன்னிடம் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக அவர் அதில் கூறியுள்ளார்.
இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள அவர், "மதுரை விமானநிலையத்தில் 'CRPF' அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அவர்கள் வயதான என் பெற்றோர்களிடம் பையிலிருக்கும் நாணயங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் எங்களிடம் இந்தியில் தொடர்ந்து பேசியதால் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொன்னேன். இருப்பினும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் இந்தியில் மட்டுமே பேசினார்கள்.

அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது 'இந்தியாவில் இப்படித்தான் இருக்கும்' என்றார்கள். வேலையில்லாதவர்கள் எல்லாம் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.