நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு பகுதியைச் சேர்ந்த பழனியாண்டி என்பவரின் மகன் சிவபெருமாள் (35). கட்டட தொழிலாளியான இவருக்கு காமாட்சி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சிவபெருமாள் தனது வீட்டின் அருகில் உள்ள சமுதாய கூடத்தின் மேற்கூரையில் நின்றபடி கட்டுமானப்பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கீழே விழுந்துள்ளார்.
இதில், சிவபெருமாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அவரை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

கோவை அரசு மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிவபெருமாள் மூளைச்சாவு அடைந்திருப்பதாக சொன்னார்கள். இதைத்தொடர்ந்து, சிவபெருமாளின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர்.
அதன்படி, சிவபெருமாளின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்களைத் தானமாக வழங்கலாம் என்று மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளனர். பின்னர், சிவபெருமாளின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டன. தொடர்ந்து அவரது கல்லீரல் தனியார் மருத்துவமனைக்கும் ஒரு சிறுநீரகம் சேலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கும் மற்றொரு சிறுநீரகம் கோவை அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

இதன் மூலம் சிவபெருமாள் 3 பேருக்கு மறுவாழ்வு அளிக்க உள்ளார். மேலும், அவரது கண்களையும் தானமாகப் பெற மருத்துவமனை நிர்வாகம் ஆலோசனை செய்துவருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் நடந்த முதல் உடல் உறுப்புதான அறுவை சிகிச்சை இது என்பது குறிப்பிடத்தக்கது.