மதுரைக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் வருவதை முன்னிட்டு சாலைகளைச் சீரமைத்து, தெருக்களைப் பராமரித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் நான்கு நாள்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் 22-ம் தேதி மதுரை வருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தநிலையில், அவர் விமான நிலையத்திலிருந்து கிளம்பி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் செல்லும் பகுதிகளிலுள்ள சாலைகளைச் சீரமைத்து, தூய்மையாக வைத்து, தெரு விளக்குகளைப் பராமரிக்க வேண்டும் என்றும், அவர் வருகையின்போது சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாமல் கண்காணிக்க வேண்டும் என மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு உதவி ஆணையாளர் சண்முகம் எழுத்துபூர்வமாக உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு தற்போது சர்ச்சையாகியிருக்கிறது.
பொதுவாக பிரதமர், குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர் என அரசில் உயர் அந்தஸ்திலுள்ள வி.வி.ஐ.பி-கள் வரும்போது இது போன்ற உத்தரவுகள் இடப்படும் என்றும், எந்தவோர் அரசுப் பதவியிலும் இல்லாத தலைவருக்கு இது பொருந்துமா என்று சிலர் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.
இது சம்பந்தமாக ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருக்கும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ``அரசின் எந்த விதிகளின்படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்தச் சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும்" என்று கேட்டிருக்கிறார்.

இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயனிடம் பேசினோம். ``இஸட் ப்ளஸ் பாதுகாப்பில் உள்ளவருக்குச் செய்ய வேண்டிய அடிப்படை நடைமுறைகள்தான் இவை. வேறு எந்தக் கூடுதல் ஏற்பாடும் இல்லை. உயர் பாதுகாப்புப் பெற்றவர் செல்லும் சாலைகள் பாதுகாப்புக் காரணங்களுக்காகச் சரியாக இருக்க வேண்டும். உயர் பாதுகாப்பு வி.ஐ.பி-கள் வரும்போது இதை போன்ற ஏற்பாடுகள் செய்வது நடைமுறையில் இருப்பதுதான். இது வேறு மாதிரி புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. உயர் பாதுகாப்பு வி.ஐ.பி செல்லும் பகுதிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள மாநகராட்சி ஊழியர்களுக்கு வழக்கமாகச் சொல்வதுதான். அதற்காக உத்தரவு போடத் தேவையில்லை. புதிதாக வந்த உதவி ஆணையாளர் அப்படிப் பண்ணிவிட்டார். மற்றபடி கூடுதலாக எந்த ஏற்பாடும் இல்லை. உயர் பாதுகாப்பு வி.ஐ.பி-களுக்கு செய்யும் வழக்கமான நடைமுறைதான்" என்றார்.
இதை விளக்கி மாநகராட்சி ஆணையாளரால் அறிக்கையும் விடப்பட்டுள்ளது. இதற்கிடையே மதுரை மாநகராட்சியில் உதவி ஆணையராகப் பணிபுரிந்துவரும் சண்முகம், 21/7/2021 பிற்பகல் முதல் மதுரை மாநகராட்சிப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆணையிடப்படுகிறது என்று மதுரை மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.