கொரோனா அச்சத்தாலும் அதனால் கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கத்தாலும் பள்ளி, கல்லூரிகள் தேர்வுகள்கூட நடத்தப்படாமல் அவசர அவசரமாக மூடப்பட்டன.

பல மாத முடக்கத்துக்குப் பின் தற்போது மெல்லத் தளர்வுகள் அளிக்கப்பட்டு நிலையில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் தொடக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இந்தக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பல்வேறு சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளுடன் கடந்த 17-ம் தொடங்கியது. `சேர்க்கைக்கு மாணவர்களை அழைத்து வரத் தேவையில்லை. ஆவணங்களுடன் பெற்றோர் வந்தாலே போதும்’ என அரசு அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், கல்வி அலுவலர் ஒருவர், தன் மகளை அரசுப் பள்ளியில் சேர்த்து முன்மாதிரியாக உள்ளார்.
குன்னூர் வட்டாரக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வரும் கார்த்திக், தனது சொந்த ஊரான நஞ்சநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மனைவி தீபாவுடன் சென்று தன் மகள் அனன்யாவை முதல் வகுப்பில் சேர்த்துள்ளார். கல்வி அலுவரின் இந்தச் செயல், பெற்றோர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி அலுவலர் கார்த்திக்கைத் தொடர்புகொண்டு போசினோம். ``எக்காரணத்தைக் கொண்டும் நாம அரசுப் பள்ளிகளை இழக்கக் கூடாது. நான் படிச்சது இதே கவர்ன்மென்ட் ஸ்கூல்தான். தேர்வு எழுதி இப்போ கல்வி அலுவலரா இருக்கேன். என்னோட முதல் மகளை இந்தப் பள்ளியில் சேர்த்துள்ளேன். இரண்டாவது மகளையும் இங்குதான் சேர்த்து படிக்க வைப்பேன். அரசுப் பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்து மாணவ, மாணவிகள் நல்லா படிச்சு வெளியே வரணும். அதுதான் எங்களுடைய சந்தோசம்" என்றார்.
நஞ்சநாடு இளைஞர்கள் கூறுகையில், ``கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 14 மாணவ, மாணவிகள் மட்டுமே இருந்த இந்தப் பள்ளியில் தற்போது 142 பேர் படிக்கின்றனர். அனைத்து வகுப்புக்கும் ஆங்கில வழிப் பிரிவையும் கொண்டுவர ஏற்பாடு செய்தோம். இந்தக் கிராமத்தைச் சுற்றி விவசாயிகளே அதிகம் உள்ளனர். தங்கள் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான ரூபாய் கடன்பட்டு தவிக்கின்றனர். அதற்குப் பதிலாக கூடுதலாக சில ஆசிரியர்களைப் பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம் நியமித்து, தரமான கல்வியை அரசுப் பள்ளியிலேயே கிடைக்க வழிவகை செய்துள்ளோம்" என்றனர்.

பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்களே தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், கல்வி அலுவலர் ஒருவர் தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளது பலருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.