கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு, பரிசோதனைகள் என்று பல வகையில் மனிதர்கள் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) வெளியிட்டுள்ள ஆராய்ச்சியின் முடிவின்படி இரண்டு வகையான வௌவால்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை வௌவால்கள், இடைநிலையாக வேறு உயிரினத்திற்குப் பரப்பி (Intermediate host) அதன் மூலம் மனிதர்களுக்கு தொற்றை ஏற்படுத்த வல்லன. Rousettus, Pteropus என்ற இரண்டு வகையான வௌவால்களின் தொண்டையில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. சில மாநிலங்களில் உள்ள வௌவால்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், தமிழகம், கேரளம் புதுச்சேரி, ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள இந்த இரண்டுவகையான வௌவால்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா, குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா மாநில வௌவால்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று கூறப்பட்டுள்ளது. வௌவால்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட மாநிலங்களில் உள்ள மனிதர்களுக்கும், செல்லப் பிராணிகளுக்கும் கொரோனா வைரஸிற்கான எதிர்புரதப் பரிசோதனை (Antibody testing) பரவலாக மேற்கொள்ளப்பட வேண்டும் மற்றும் பல்வேறு உயிரினங்களில் தொற்று உள்ளதா என்று ஆய்வு செய்ய, வனவிலங்குத் துறை, கால்நடை மருத்துவத் துறை, கோழிப்பண்ணைத் துறை, நலவாழ்வுத் துறை ஆகியன புதிய உத்திகளைக் கண்டறிய வேண்டும் என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. கேரளாவில் பல்வேறு வகையான வௌவால்கள் வாழ்வதால் அங்கு கூடுதல் கவனம் தேவை என்று கூறப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தொற்று ஏற்பட்ட பொழுது வௌவால்களுக்கு RT- PCR (Reverse Transcription Polymerase Chain Reaction) மேற்கொள்ளப்பட்டு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.