
வாகனத்தை அதிக கூட்ட நெரிசலுள்ள இடத்தில் நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
கோவிட்-19 அச்சுறுத்தும் இந்த நேரத்தில், அதிஅவசரமாக கார் அல்லது பைக்கை வெளியே எடுக்க வேண்டிய சூழல் வந்தால், என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை? விளக்குகிறார் பொது மருத்துவர் கண்ணன்.
முகக்கவசம்
காரிலோ பைக்கிலோ பயணம் செய்பவர்கள், குறைந்த தூரப் பயணமாக இருந்தாலும்கூட முகக்கவசம் அணிவது நல்லது. கை கழுவுவதற்கான சோப், தண்ணீர் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஹேண்ட் சானிடைஸரும் பயன்படுத்தலாம். பயணத்தின்போது ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கைகளைக் கழுவிக்கொள்வது நல்லது. வாகனத்தை அதிக கூட்ட நெரிசலுள்ள இடத்தில் நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
வாகன சுத்தம்
பைக் ஹேண்டில் பார், கார் ஸ்டீயரிங், கியர், ஹேண்ட் பிரேக் ஆகிய பகுதிகளை அடிக்கடி தொட வேண்டி வரும் என்பதால், அவற்றில்தான் கிருமிகள் அதிகம் குடியிருக்கும். அதனால் அந்தப் பகுதிகளை நாம் பயன்படுத்தும் ஹேண்ட் சானிடைஸர் அல்லது மருந்துக் கடைகளில் கிடைக்கும் சர்ஜிக்கல் ஸ்பிரிட்டை, (Surgical Spirit) பஞ்சு அல்லது சுத்தமான துணியில் தோய்த்து அந்த இடங்களைத் துடைக்கலாம். இரண்டுமே கிடைக்கவில்லை என்றால் தண்ணீரில் கூட சுத்தமான துணியை நனைத்துத் துடைக்கலாம். டாக்ஸியில் பயணம் செய்தால், அதில் யாரெல்லாம் பயணித்திருப்பார்கள் என்பது தெரியாது. அதனால் ஏ.சி வேண்டாம்.
ஷேரிங் நல்லதில்லை
லிஃப்ட் கொடுப்பதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட வேண்டும். கார் பூலிங் முறையில் பயணம் செல்வதும் இப்போது கூடாது.

கழிவறைப் பயன்பாடு
நோய்ப் பரவல் அதிகமுள்ள நேரத்தில் பொதுக் கழிவறைகளைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் கழிவறைகளைப் பயன்படுத்திவிட்டு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். கைகளைக் கழுவிய பிறகு கழிவறையிலுள்ள கதவுக் கைப்பிடிகள், கைப்பிடிச்சுவர் ஆகியவற்றைத் தொடாமல் அங்கிருந்து வெளியேற வேண்டும். பயணத்தின்போது வெளியில் தங்க வேண்டி வந்தால் சுகாதாரமான, காற்றோட்டமுள்ள அறைகளில் தங்க வேண்டும். அங்கும் சுய சுகாதாரத்தைப் பேணுவது அவசியம்.
பணம் வேண்டாம்!
பயணத்தின்போது எந்தப் பொருளைக் கைகளால் தொட்டாலும் அதன் மூலம் நோய்த்தொற்று பரவுமோ என்ற சந்தேகம் வரும். இது பணத்துக்கும் பொருந்தும். அதனால் பணத்தைக் கொடுப்பதற்கு முன்பும் வாங்கிய பிறகும் கைகளைக் கழுவிக்கொள்வது நல்லது. கூடுமானவரை கடைகளில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செய்வது நல்லது.

நோயாளிகள்
சர்க்கரை நோயாளிகள், புற்றுநோயாளிகள், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அவர்கள் பயணத்தைத் தவிர்த்து விடுவது நல்லது.
‘2020-க்குள் இந்தியா முழுவதும் 3,000 டீலர்கள்!’ - - மேக்ஸிஸ் டயர்ஸ் இந்தியா திட்டம்
மாருதி சுஸூகி, டாடா, மஹிந்திரா, ஜீப், ஹோண்டா, ஹீரோ, யமஹா போன்ற நிறுவனங்களுக்கு OEM Tyre Supplier ஆக இருக்கும் மேக்ஸிஸ் டயர்ஸ் குழுமம், திருச்சியில் தனது 21-வது டீலர் சந்திப்பை சமீபத்தில் நடத்தியது. ``இப்போது 750 முகவர்கள்தான் உள்ளார்கள். ஆனால், 2020-க்குள்ளாக, எங்களுக்கு நாடு முழுக்க 3,000 டீலர்கள் இருப்பார்கள்'' என்கிறது அது.

2026-ம் ஆண்டுக்குள் உலகின் முதல் 5 டயர் உற்பத்தியாளர்களின் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதுதான் இலக்காம்.