
புதுடெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் தொடர்பாக, கடந்த நிதியாண்டில் 24 ஆயிரத்து 85 ரகசிய தகவல்கள் இந்திய அரசுக்கு கிடைத்துள்ளன.
கறுப்புப் பணத்தை மீட்க அரசு எடுத்த நடவடிக்கைகளின் பலனாக இத்தகவல்கள் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்வீடன், டென்மார்க், ஸ்பெயின், நியூசிலாந்து உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இத்தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தகவல்களின் அடிப்படையில் வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் நிதியமைச்சகம் கூறியுள்ளது.
கறுப்புப் பணம் தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் முந்தைய ஆண்டுகளை விட கடந்தாண்டு அதிகரித்துள்ளதாகவும், அடுத்து வரும் ஆண்டுகளில் இவை மேலும் அதிகரிக்க கூடும் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கறுப்புப்பணத்தை மீட்பது குறித்து ஆராய உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அக்குழுவிடம் மத்திய நிதியமைச்சகம் இத்தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளது.