கரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில் சாலைப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் அரசு அலுவலர்கள் துணையோடு ஒப்பந்ததாரருக்குப் பணம் வழங்கி ஊழல் செய்திருப்பதாக, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரைச் சந்தித்து, கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்துள்ள மனுவில்,
``கரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில் சாலைப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், அரசு அலுவலர்கள் துணையோடு Sankaranand Infra, Contractor Karur, ஒப்பந்ததாரருக்குச் சாலைப் பணிகள் முடிந்ததாக ஆவணங்களை அதிகாரிகள் துணையோடு தயார் செய்திருக்கிறார்கள். பணம் வழங்கி ஊழல் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான ஆதாரங்களுடன்கூடிய புகார் மனுவைக் கடந்த 05.04.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினோம். அதன் பிறகு அந்த ஒப்பந்த நிறுவனம் 06.04.2022 அன்று கரூர் புகளூர் பைபாஸ் சாலை முதல் புகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக, புகளூர் சர்க்கரை ஆலை வரை அவசர அவசரமாக நடைபெற்ற ஊழல் சம்பவத்தை மறைக்கும்விதமாக புதிதாகச் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். அது குறித்த தகவல் தெரிந்தவுடன் உள்ளூர் பொதுமக்களுடன், அவசரநிலையில் மேற்கொள்ளப்பட்ட சாலைப் பணிகளைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டு, 06.04.2022 அன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களிடம், கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு.வி.க மூலம் ஆதாரங்களுடன் புகார்மனு அளிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆனால், மீண்டும் 07.04.2022 அன்று காலை மேற்சொன்ன கரூர் புகளூர் பைபாஸ் - புகளூர் சர்க்கரை ஆலை மற்றும் கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நன்னியூர் புதூர்ச் சாலைகளில் மீண்டும் அந்தத் தனியார் நிறுவனம் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உதவியுடன் புதியதாகச் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். உடனடியாக இது குறித்த ஆதாரங்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் 07.04.2022 அன்று மாலை சம்பந்தப்பட்ட நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஊழல் தடயங்களை மறைப்பதைத் தடுக்க கோரியும் மனு அளிக்கப்பட்டது. அதோடு, 08.04.2022 அன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் அவர்களிடம் மேற்கண்ட ஊழல் குறித்து ஆதாரங்களுடன் விரிவான புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உரிய ஆதாரங்களுடன் தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளிக்கப்பட்டது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅதன்பிறகு உடனடியாக, 08.04.2022 அன்று இரவில் அவசர கதியில் கரூர் - ஈசநத்தம் - கூம்பூர் - வீரியம்பட்டி சாலைப் பணிகளை அவசர கதியில் Sankaranand Infra, Contractor Karur , ஒப்பந்ததாரர் மேற்கொண்டுள்ளார். இது குறித்த தகவல் தெரிய வந்தவுடன், உள்ளூர் பொது மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் , அங்கு வீடியோ பதிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, எங்கள் கட்சி நிர்வாகிகளை மிரட்டி, இது போன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தக் கூடாது என்று மிரட்ட வேண்டும் என்ற எண்ணத்தில், பொய்யான புகார் ஒன்றினை, மேற்சொன்ன M.C.சங்கர் ஆனந்த்தின் கையாட்கள் மூலம் கொடுக்கச் செய்தும், அவர்களே ஒரு லாரியை தீ வைத்து பகுதியாக எரித்துக் கொண்டும், அவர்களே தங்களுக்குக் காயங்கள் ஏற்படுத்திக் கொண்டும், (Self Inflicted Injury) அந்தக் காயத்திற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சேர்ந்துள்ளார்கள். எனவே , ஊழல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது (அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் காண்ட்ராக்டர் நிறுவனம் / எதிர் பங்குதாரர்கள் / உரிமையாளர்கள் மீது) நடவடிக்கை எடுக்க வேண்டும் , ஆதாரங்களை அழிக்க முற்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும், இனி பேற் கொண்டு புதியதாக எவ்விதமான சாலைப் பணிகளையும், பிரச்னைக்குரிய நான்கு சாலைகளின் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என மேற்சொன்ன காண்ட்ராக்ட் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், தி.மு.க-வைச் சேர்ந்தவரின் லாரியை தீ வைத்து எரித்ததாக தி.மு.க-வினர் கொடுத்த புகாரின் பேரில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த திரு.வி.க தானேஷ் என்கிற முத்துக்குமார், கமலக்கண்ணன், மதுசூதனன் உள்ளிட்டவர்கள் மீது கரூர் தான்தோன்றிமலை காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேநேரம், தங்களது ஊழலை மறைக்க தி.மு.க-வினர் இப்படி அவர்களே லாரியை எரித்துக்கொண்டு, அ.தி.மு.க-வினர் மீது பழியைப் போடுகின்றனர் என்று அ.தி.மு.க-வினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்த விவகாரம் குறித்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மூலம், நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கையின்போது, கரூரில் சாலை அமைப்பதில் உள்ள முறைகேடு குறித்து, கேள்வி எழுப்பத் தகுந்த ஆதாரங்களை வழங்கியுள்ளாராம். இதனால், இந்த விவகாரம் சட்டமன்றத்தில் ஹாட் டாபிக்காக மாறும் என்று சொல்கிறார்கள்.