அமெரிக்கா போன்ற நாடுகளில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்துவருகின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலிருக்கும் தொடக்கப்பள்ளி ஒன்றில், 18 வயதான சால்வடார் ராமோஸ் என்ற இளைஞர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். அதில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெக்சாஸ் மாகாணத்தின் உவால்டே நகரில் ராப் என்ற பெயரில் தொடக்கப்பள்ளி செயல்பட்டுவருகிறது. அந்தப் பள்ளியில் சுமார் 600 மாணவர்கள் படித்துவருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த உவால்டே நகரில் உள்ள ராப் ஆரம்பப் பள்ளிக்கு வருகை புரிந்தார். அப்போது பள்ளி வளாகத்துக்கு வெளியே பலரும் பதாகைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். ஜோ பைடன் சிறிது நேரம் அமைதியாக நின்று அஞ்சலி செலுத்தினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் இரங்கல் தெரிவித்த பின்பு, அவர்களுடன் இணைந்து அங்குள்ள தேவாலயத்தில் பிராத்தனை செய்தார்.
அதன் பிறகு தேவாலயத்திலிருந்து வெளியே வந்தபோது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள், குழந்தைகளை இழந்த உறவினர்கள் ``ஏதாவது செய்யுங்கள்" என ஜோ பைடனை நோக்கிக் கதறினார்கள். அதற்கு ஜோ பைடன் , "நாங்கள் செய்வோம். நாங்கள் செய்வோம்" என்று உறுதி அளித்தார்,
