`ரூ.15 லட்சம் முதல் 40 லட்சம்; 22 பேர் முறைகேடாக நியமனம்!' - தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஊழல்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி முன்னாள் துணை வேந்தர், பதிவாளர் உட்பட நான்கு பேர் மீது 11 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகத் தஞ்சாவூரில் தொடங்கப்பட்டது தமிழ்ப் பல்கலைக்கழகம். இங்கு 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை துணை வேந்தராக பாஸ்கரன் பதவி வகித்தார். அந்த மூன்று ஆண்டுகளில் தகுதியற்ற பல நபர்களை எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் பேராசிரியர் உள்ளிட்ட பணிகளில் நியமனம் செய்யப்பட்டதாகக் குற்றசாட்டுகள் எழுந்தன.
இதனால், தமிழ்ப் பல்கலைக்கழகம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தினர். இதற்குப் பல்கலைக்கழகம் சார்பில், சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து ஓய்வு பெற்ற பேராசிரியர் முருகேசன் மற்றும் வக்கீல் நெடுஞ்செழியன் இருவரும் தனித் தனியாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொது நல வழக்கு போட்டார்கள். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தஞ்சை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.
அதன் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சில ஆவணங்களைக் கைப்பற்றி கோர்ட்டில் ஒப்படைத்தனர். தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், கடந்த 14-ம் தேதி, பேராசிரியர் நியமனத்தில் முறைகேட்டில் ஈடுப்பட்டதாக, முன்னாள் துணை வேந்தர் பாஸ்கரன், முன்னாள் பதிவாளர் முத்துக்குமார், பதிவாளரின் நேர்முக உதவியாளர் சக்தி சரவணன் மற்றும் தொலைதுார கல்வி இயக்கத்தின் இயக்குநர் என்.பாஸ்கரன் ஆகிய நான்கு பேர் மீது 11 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக, பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரித்தோம். ``2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை துணை வேந்தராக இருந்த பாஸ்கரன், கடந்த 2017 ஏப்ரல் 26-ல் 27 பேராசிரியர்கள்,18 இணை பேராசிரியர்கள் என மொத்தம் 45 பணிக்கான தேர்வு தொடர்பான விளம்பரம் அறிவிக்கப்பட்டதுடன் பல்கலைகழகக் குழு சார்பில் தேர்வும் நடைபெற்றது. அதில் 23 பேர் மட்டுமே முறையாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 22 நபர்களும் பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பாகவும் விதிமுறைகளை மீறியும் தகுதியற்ற நபர்களை துணைவேந்தர் அறிவுறுத்தியதன் பெயரில் தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு துறைகளில் பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
துணை வேந்தர் பாஸ்கரன் நேரடியாக 5 பேரை நியமனம் செய்வதற்காகப் பதிவாளரின் நேர்முக உதவியாளர் சக்தி சண்முகத்தின் மூலம் ரூ.15 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை லஞ்ச பணத்தைக் கேட்டு பெற முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. மேலும், பேராசிரியர்கள் அல்லாத பணிகளுக்கு 70 பேரை முறைகேடாகப் பதிவாளர் முத்துக்குமார், தொலைதுாரக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் என்.பாஸ்கரன் இருவரும், துணை வேந்தர் பாஸ்கரனின் ஒப்புதலைப் பெற்று, அதற்கான லஞ்சப் பணத்தைத் தருவதாகப் பேசி நியமனம் செய்துள்ளதாகவும், முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது'' என்றனர்.