மதுரை: `வழக்கிலிருந்து பெயரை நீக்க ஒரு லட்ச ரூபாய்!’ - விஜிலென்ஸில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்

வழக்கிலிருந்து நீக்க வேண்டுமென்றால் ஒரு லட்ச ரூபாய் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார் காவல் ஆய்வாளர் அனிதா. அவரிடம் பேரம் பேசியிருக்கிறார் நல்லதம்பி.
குற்றப்பத்திரிக்கையிலிருந்து பெயர் சேர்க்க அல்லது நீக்க பணம் பெற்றுக்கொண்டு கடமை தவறிச் செயல்பட்ட பெண் காவல் ஆய்வாளர் கைதுசெய்யப்பட்டிருக்கும் சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை அருகே செக்கானூரணி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிவரும் அனிதா மீது பல்வேறு புகார்களை அந்தப் பகுதி மக்கள் எழுப்பிவந்தனர். இந்தநிலையில் லஞ்சம் பெற்ற வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரைக் கைதுசெய்திருக்கிறார்கள்.
`எந்தவொரு புகார் வந்தாலும் புகார்தாரரிடம் பணம் பெற்றுக்கொண்டு, அதில் சம்பந்தமில்லாதவர்களை வழக்கில் சேர்ப்பது, பின்பு அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிப்பது, கொலை வழக்குகளில் முக்கியக் குற்றவாளிகளிடம் பெரும் தொகை பெற்றுக்கொண்டு தலைமறைவு என்று சொல்லி அவர்களைச் சுதந்திரமாக நடமாட விடுவது...’ என்று இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்துவந்தன. இந்தநிலையில் தற்போது நல்லதம்பி என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

தங்களைத் தாக்கிக் காயப்படுத்தியதாக பொன்னமங்கலத்தை சேர்ந்த முத்து என்பவர் கொடுத்த புகாரில் நல்லதம்பி உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து கைதுசெய்தார் காவல் ஆய்வாளர் அனிதா. இந்தச் சம்பவத்தில் சம்பந்தமில்லாத தனது மகன்கள், பேரன் ஆகியோரைக் குற்றப்பத்திரிகையில் சேர்த்திருப்பதால், அவர்களை நீக்குமாறு ஆய்வாளரிடம் கோரியிருக்கிறார் நல்லதம்பி.
அவர்களை வழக்கிலிருந்து நீக்க வேண்டுமென்றால் ஒரு லட்ச ரூபாய் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார் காவல் ஆய்வாளர் அனிதா. அவரிடம் பேரம் பேசியிருக்கிறார் நல்லதம்பி. கடைசியில் ரூ 80,000 தருவதாக ஒப்புக்கொண்டவர், பொய் வழக்கு போட்டு லஞ்சம் கேட்பதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்.
அவர்கள், ரசாயனம் தடவிய ரூ 30,000-த்தைக் கொடுத்து, `இதை ஆய்வாளரிடம் முன்பணமாகக் கொடுக்கவும்’ என்று சொல்லி நல்லதம்பியை அனுப்பிவைத்தனர். அதேபோல் ஆய்வாளர் அனிதாவிடம் பணத்தை நல்லதம்பி கொடுக்க, அதை அவரும் வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையிலான குழுவினர், கையும் களவுமாக அனிதாவைப் பிடித்து கைதுசெய்தனர்.
மேலும், இந்த வழக்கில் மட்டுமல்லாமல், இதற்கு முன்னர் எத்தனை வழக்குகளில் லஞ்சம் பெற்று அதற்குத் தகுந்ததுபோல நடந்துகொண்டிருக்கிறார் என்பதையும், அவருடைய சொத்து விவரங்களையும் தொடர்ந்து விசாரித்துவருகிறர்கள். இந்தச் சம்பவம் மதுரை மாவட்ட காவல்துறையில் பெரும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.