காவல் ஆய்வாளர் தாக்கியதில் உயிரிழந்த திருச்சி உஷா வழக்கு என்னவானது?#DoubtOfCommonMan

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ராஜேஷ் கண்ணன் என்ற வாசகர், ”திருச்சியில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜால் தாக்கப்பட்டு உயிரிழந்த உஷா வழக்கு இப்போது எந்த நிலையில் உள்ளது” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து விசாரித்தோம்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள சூலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த உஷா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் கடந்த ஆண்டு மார்ச் 7-ம்தேதி மாலை நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக டூவீலரில் திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

வழியில், துவாக்குடி டோல்பிளாசா அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது போலீஸார், ராஜா வந்த வாகனத்தை மறித்தனர். அப்போது போலீஸாருக்கும் ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறிதுநேரத்தில் அங்கிருந்து கிளம்பிய ராஜாவை, இன்ஸ்பெக்டர் காமராஜ் ஸ்கூட்டரில் விரட்டிச் சென்று பைக்கை எட்டி உதைத்ததாகவும், அதனால் ராஜாவும் பைக்கின் பின்புறம் உட்கார்ந்திருந்த உஷாவும் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகவும் சொல்லப்பட்டது. அதில், உஷா சம்பவ இடத்திலேயே பலியானார்.
அதைத் தொடர்ந்து, துவாக்குடி, திருவெறும்பூர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், சம்பவம் நடந்த திருவெறும்பூர் பெல் கணேசா ரவுண்டானா பகுதியில் திரண்டு, உஷாவின் மரணத்துக்கு நீதிகேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது உஷா கர்ப்பிணி என்று செய்திகள் பரவவே, மக்களின் கோபம் அதிகமானது. சாலைமறியல், கல்வீச்சு, போலீஸ் வேன் மீது தாக்குதல் எனப் பதற்றம் அதிகமானது.

அதையடுத்து, போலீஸார் குவிக்கப்பட்டார்கள். தடியடி நடத்தப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டு கலவரமானது.
கலவரத்துக்குக் காரணமான 27 பேர் கைது செய்யப்பட்டனர். உஷாவின் உடலை வாங்காமல் அவரின் உறவினர்கள் போராட, அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் களத்தில் குதித்தனர்.

எதிர்ப்பு வலுக்கவே, போலீஸார் குற்றச்சாட்டுக்குள்ளான இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது, `உள்நோக்கம் இல்லாமல் ஒருவருக்கு மரணம் ஏற்படுத்துதல்’ உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதைத்தொடர்ந்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்து அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
விகடனின்#DoubtOfCommonMan பக்கத்தில், ராஜேஷ் கண்ணன் என்ற வாசகர், ”திருச்சியில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜால் தாக்கப்பட்டு உயிரிழந்த உஷா வழக்கு இப்போது எந்த நிலையில் உள்ளது” என்று கேள் எழுப்பியிருந்தார். இதுகுறித்து விசாரித்தோம்.

ஆய்வாளர் காமராஜ், திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருமுறை பிணை கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அவருக்குப் பிணை வழங்க, உஷாவின் கணவர் ராஜாவும் திருச்சி வழக்கறிஞர்கள் சங்கமும் ஆட்சேபனைத் தெரிவித்ததால் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கலவரத்தில் கைது செய்யப்பட்ட பொதுமக்களை திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் பிணை மனுத்தாக்கல் செய்து வெளியில் எடுத்தனர்.

சுமார் 35 நாள்கள் திருச்சி மத்திய சிறையிலிருந்த காமராஜ், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், "வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்” என உறுதியளித்ததன் அடிப்படையில், பிணை பெற்று வெளியே வந்தார்.
இதையடுத்து ராஜா, ’ஆய்வாளர் காமராஜ் மீது சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை திருச்சி போலீஸார் காப்பாற்றும் நோக்கத்தில் செயல்படுவதுடன், என் மனைவி பற்றியும் என்னைப் பற்றியும் அவதூறு தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். அதனால் இவர்களின் விசாரணை மீது நம்பிக்கையில்லை. வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரி உயர் நீதிமன்றத்தை நாடினார்.

ஆனால், அதற்குள் குற்றப்பிரிவு போலீஸார் சிசிடிவி காட்சிப் பதிவுகள், 20-க்கும் மேற்பட்ட சாட்சிகள் அடிப்படையில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். தற்போது உஷா மரணம் தொடர்பான வழக்கு, திருச்சி இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. கடந்த 29-ம்தேதி வழக்கு விசாரணைக்கு வந்து, ஆகஸ்ட் மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பு அவ்வளவாக அக்கறைகாட்டவில்லை என்றும், அதனால் தங்கள் வழக்கறிஞரை தமது தரப்பு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என்றும் கோரி மனு செய்ய உள்ளதாக ராஜா தரப்பினர் கூறுகிறார்கள்.
காய்நகர்த்திய போலீஸார்
இதற்கிடையில் மனித உரிமை ஆணையம், நடந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலர், காவல்துறைத் தலைவர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்தச் சம்பவம் குறித்து அழுத்தம் அதிகரிக்கவே போலீஸார் பலவகைகளில் வழக்கை சிதைக்க காய்நகர்த்தினர்.

மேலும் வழக்கில் சிக்கிய காவல் ஆய்வாளர் காமராஜ், ஒருமாதத்துக்கு முன்பு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீண்டும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
“சம்பவத்தன்று உஷாவின் கணவர் ராஜா போதையில் இருந்தார் என்றும், உஷா கர்ப்பிணியே இல்லை என்றும் போலீஸாரே ஆடியோக்களைப் பரப்பினர். உஷாவும் ராஜாவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குடும்பத்தை எதிர்த்து காதல் திருமணம் செய்ததால், குடும்பத்தினருக்குள் இருந்த வெறுப்பை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, உஷாவின் உடலை அவரின் கணவரின் ஊருக்குக் கொண்டு செல்லாதவகையில், சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி திருச்சி கே.கே.நகரிலேயே அடக்கம் செய்ய வைத்தனர்.

தற்போது ராஜாவுக்கும் உஷாவின் தாய்வீட்டாருக்கும் பேச்சுவார்த்தை இல்லை. உஷாவின் கணவர் ராஜா, வெளிவேலைக்குச் செல்லாமல், சொந்த ஊரில் விவசாயம் பார்த்து வருகிறார்.
மேலும் வழக்கில் சிக்கிய காவல் ஆய்வாளர் காமராஜ், ஒருமாதத்துக்கு முன்பு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீண்டும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!