
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!


சுற்றுலாவுக்கு அடுத்த பகுதி, பொழுதுபோக்கு! உங்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டிலேயே மிகக்குறைவாக நகரமயமாகியிருக்கும் மாவட்டம் தருமபுரிதான். அதாவது, வெறும் 17% மட்டும்தான். இதன் அர்த்தம், தருமபுரியில் மாலோ, மல்டிபிளெக்ஸ் தியேட்டரோ, ஷாப்பிங் பஜாரோ என எதுவுமே இல்லை. ஆராய்ந்து பார்க்கையில், தருமபுரி பேருந்து நிலையத்தைச் சுற்றி சில துணிக்கடைகளும் மற்ற விற்பனைக் கடைகளும் இருக்கின்றன. மொத்தமாக எட்டு திரையரங்குகள் இருக்கின்றன. அவ்வளவுதான். இன்னொரு புறம், இது போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால்தான், தருமபுரி இன்றும் சாதிப்பூசல்களும், பெண்ணடிமைத்தனமும் அதிகமாக நிறைந்த பூமியாக இருக்கிறதோ என்றும் எனக்குத் தோன்றுகிறது. பெண்ணடிமைத்தனம் என்ற வார்த்தை சற்றே அதீதமானதாக இருக்கலாம். ஆனால், தருமபுரியின் உட்புற கிராமங்களுக்குச் சென்று வந்த யாரும் அப்படி நினைக்க மாட்டார்கள். ஆகவே, கண்டிப்பாக தருமபுரியில் மால்கள், மல்டிபிளெக்ஸ் திரையரங்கங்கள், ஷாப்பிங் பஜார்கள் ஆகியவை சார்ந்த தொழில்முனைவுக்குப் பெரிய Scope இருக்கிறது. ஏனென்றால், தருமபுரி மாவட்டத்தின் மக்கள் தொகை 14 லட்சம். இதிலிருந்து ஆண்டுக்கு 5 லட்சம் பேர் தருமபுரி நகர்ப்பகுதிக்கு வந்து குவிந்தாலே, மில்லியன் டாலர் வணிகம் நிச்சயம்!
முதலில் மாலுக்கான Scope-ஐ பார்ப்போம். இங்கு சேலம் Reliance Mall-ஐ உதாரணமாக எடுத்துக்காட்ட விரும்புகிறேன். ஏனென்றால், சென்னை, கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்களின் வளர்ச்சியோடு தருமபுரியை இப்போது ஒப்பிட முடியாது. அதற்கு இன்னும் நாளாகும். எனவே, சேலம் ஓரளவுக்கு தருமபுரிக்கு அருகே வரும். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சேலத்தில் Reliance Mall கட்டுமானங்கள் தொடங்கும்போது, அந்த மாவட்டத்தின் தொழிற்புள்ளிகள் யாருக்குமே பெரிய நம்பிக்கையில்லை. “இந்த ஊரில் யார் மாலுக்கு வருவார்கள்? It won’t workout” என்று செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால், செருப்பே போடாதவர்களின் ஊரில்தான் செருப்பு வியாபாரம் நன்றாக ஓடும் என்பதைப்போல, Reliance நிறுவனம் தைரியமாக சேலத்தில் Mall-ஐ திறந்தது. இப்போது ரிலையன்ஸ் மால் சேலத்தின் புதிய ‘ரத்னா காம்ப்ளக்ஸ்.’ ரிலையன்ஸ் மாலின் Escalator, Inox போன்றவை ஒவ்வொரு சேலத்துக் குடிமகனுக்கும் புதிய அனுபவமாக இருக்கிறது. சமீபத்தில் Mall-க்கு மிக அருகிலேயே Trends ஷாப்பையும் கொண்டுவந்துவிட்டது, ரிலையன்ஸ்! இதே போன்றதொரு Mall முன்னெடுப்பையே நான் தருமபுரியிலும் எதிர்பார்க்கிறேன். கார்ப்பரேட் நிறுவனமோ, அரசோ அல்லது தொழில்முனைவு ஆர்வலரோ, விரைவில் ஒரு Mall-ஐ தருமபுரி நகர்ப்புறத்தில் திறக்கக் கோருகிறேன். அப்படியே என் Mail Box-ஐயும் திறந்துவைக்கிறேன். ஏனென்றால், சில மாதங்களிலேயே மக்களின் வருகையைக் கண்டு நெகிழ்ந்து அவர்கள் எனக்கு நன்றிக் கடிதம் அனுப்பக்கூடும்!

பொழுதுபோக்கு அம்சத்தில் அடுத்ததாக நான் சொல்லப்போவது Multiplex தியேட்டர். இங்கும் சேலத்தையே உதாரணமாக்குகிறேன். ஆம், ARRS Multiplex தியேட்டரேதான்! இந்த Multiplex-ஐ கட்டும்போதுமே, சேலம் தொழிற்புள்ளிகளிடம் பெரிய நம்பிக்கையில்லை. “ஓமலூரில் தங்கம் இருக்கிறது, மேட்டூரில் கற்பகம் இருக்கிறது, இளம்பிள்ளையில் நடராஜா இருக்கிறது, ஆத்தூரில் விஸ்வநாத் இருக்கிறது. சேலத்துக்கு வந்தாலுமே கெளரி, ஓரியண்டல் சக்தி தியேட்டர்கள் இருக்கின்றன. எதற்கு Multiplex?” என்று அவநம்பிக்கையாகப் பேசினார்கள். ஆனால், இன்று தமிழ்நாட்டில் அதிகமான வசூலை எடுக்கும் Multiplex தியேட்டர்களில் ஒன்றாக ARRS Multiplex இருக்கிறது. இதே வகையான Multiplex தியேட்டரையே தருமபுரிக்கும் நான் பரிந்துரைக்கிறேன். குறைந்த பட்சம், சாதிச் சங்க கூட்டங்களைப் பிடித்துக்கொண்டு சுற்றும் தருமபுரி இளைஞர்களை மடைமாற்றவேணும் இந்த Multiplex தியேட்டர் அவசியமாகிறது. கூடவே, வருமானமும் வரும் எனும்போது எதற்கு யோசிக்க வேண்டும்? தருமபுரி தொழில்முனைவாளர்கள் புகழ்பெற்ற நாட்டார் தெய்வமான ‘காலபைரவரை’ வணங்கிவிட்டு தைரியமாகக் களமிறங்க அழைக்கிறேன்!
பொழுதுபோக்கில் இறுதியாக நான் சொல்லப்போவது Shopping Street! தருமபுரியின் பெரும்பாலான பெண்கள் உழைப்பவர்கள். ஒன்று, விவசாயத்தில் இருப்பார்கள் அல்லது கார்மென்ட்ஸ் மாதிரியான பணிகளில் இருப்பார்கள். இவர்கள் எல்லோருக்குமே பொழுதுபோக்கு என்று பார்த்தால், தொலைக்காட்சித் தொடர்கள்தான். தருமபுரியின் கிராமப்புற வீடுகளில் எது இருக்கிறதோ இல்லையோ DTH இருக்கும் என்பார்கள். அங்கே, `ஈரமான ரோஜா’வை அனல் தகிக்கப் பார்த்து அமர்ந்திருப்பார்கள் பெண்கள். மேலும், அந்தப் பெண்கள் வாரமொருமுறை வெளியில் செல்ல வேண்டும் என்று நினைத்தாலும், உள்ளூர் பகுதியிலேயே ஏதேனும் ஒரு துணிக்கடைக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிவிடுவார்கள். இதற்கு ஏற்றபடி, அரூர், மொரப்பூர், பென்னாகரம், பாலக்கோடு, ராயப்பேட்டா ஆகிய பகுதிகளில் சில துணிக்கடைகள் இருக்கும். வார இறுதி நாள்களில் அங்கே பெண்கள் கூட்டம் குவிவதை நேரடியாகவே எவரும் பார்க்கலாம். ஆகவே, தருமபுரி பெண்களுக்கு நகரத்தை அறிமுகப்படுத்துவதற்காகவும், நவீன வாழ்க்கைமுறையின் முக்கியமான அம்சங்களை அவர்களுக்குக் காட்டுவதற்காகவும், ஒரு Shopping Street தருமபுரி நகரத்தில் தேவைப்படுகிறது. இதற்கு சென்னை தி.நகர்தான் மாடல். அல்லது, கோயம்புத்தூரின் ஒப்பணக்கார வீதி. அல்லது, மதுரையின் மேலமாசி வீதி. இதன் மூலம் என்ன வருமானம் வரும் என்று நான் அட்டவணை போடவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். 6 கிலோமீட்டர் அளவுக்கு நீளும் தி.நகரின் ஆண்டு வருமானம் 20,000 கோடி ரூபாய். தருமபுரியில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு Shopping Street கொண்டுவந்தாலும், 2,000 - 4,000 கோடி ரூபாய் வருமானம் பார்க்கும் தருமபுரி மாவட்டம்!

அடுத்து நான் சொல்லப்போகிற வளம், புதியதொரு தொழில்நுட்பம் சார்ந்தது. தமிழ்நாட்டின் மிக முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக இருக்கும் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை தருமபுரிக்குள் வருகிறது. இது தமிழ்நாட்டுக்குள் (ஓசூர் வரை) 150 கிலோமீட்டர் வரை நீளும் நான்கு வழிச்சாலை. இந்த நான்கு வழிச்சாலையின் மத்தியில் 4 மீட்டர் அளவுக்கு Divider இருக்கிறது. நடுவில் சில சந்திப்புகள் மற்றும் கிராமப் பகுதிகளில் மட்டும் Divider விடுபடும். இந்த Divider-ல் Highway Wind Turbine அமைப்பதுதான் ஆலோசனை. Highway Wind Turbine என்பது இதுவரை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாத கான்செப்ட். இந்தத் துறையில் துருக்கியைச் சேர்ந்த Devicitech என்ற நிறுவனம் புதிய முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இவர்கள் Enlil என்ற பெயரில் Highway Wind Turbine-ஐ அறிமுகம் செய்திருக்கிறார்கள். இந்த Highway Wind Turbine நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் (முக்கியமாக, கார்) உருவாக்கும் காற்றை வைத்தும், இயற்கையாகக் கிடைக்கும் காற்றை வைத்தும் ஒரு மணி நேரத்துக்கு 1 KW அளவுக்கு மின்சாரம் தயாரிக்கக்கூடியது. இதன் தயாரிப்பு விலை 10,000 ரூபாய்.

இதுதான் திட்டம்… தொப்பூர் - ஓசூர் நெடுஞ்சாலையில் நாளொன்றுக்கு 25,000 வாகனங்கள் செல்கின்றன. இவற்றில் கார் மட்டுமே 52%. அதாவது, 13,000 கார்கள். தமிழ்நாட்டில் வேறு எந்த தேசிய நெடுஞ்சாலையிலும் இந்த அளவுக்கு கார் போக்குவரத்து இருப்பதாகத் தரவுகள் இல்லை. தொப்பூர் - ஓசூர் நெடுஞ்சாலைக்கு நிகராக தமிழ்நாட்டுக்குள் இருக்கும் நெடுஞ்சாலை என்று சொன்னால், சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலைதான். ஆனால், அங்கே காரைவிட சரக்கு லாரிகளின் போக்குவரத்தே அதிகம். ஆக, எல்லாவிதத்திலும் தொப்பூர் நெடுஞ்சாலை Highway Wind Turbine செயல்படுத்தலுக்கு உகந்ததாக உள்ளது. Devicitech நிறுவனத்தாரின் ஆய்வுக் கருத்துப்படி, 5 மீட்டர் இடைவெளியில் ஒரு Highway Wind Turbine அமைக்கலாம். அப்படிப் பார்த்தால், தொப்பூர் - ஓசூர் நெடுஞ்சாலையில் குறைந்தது 100 கிலோமீட்டர் தொலைவுக்கு 10,000 Highway Wind Turbine-கள் அமைக்க முடியும். 1 டர்பைன் ஒரு மணி நேரத்துக்கு 1 கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும். ஒரு நாளைக்குக் காற்றின் வேகத்தைப் பொறுத்து 20 கிலோவாட் மின்சாரம் தயாரிக்கலாம். ஆக மொத்தம், ஒரு நாளுக்கு 10,000 டர்பைன்களிலிருந்து 2 லட்சம் கிலோவாட் மின்சாரம். அதுவும், சூழலைக் கெடுக்காத புதுப்பிக்கத்தக்க மின்சாரம் (Renewable Energy). இதை நேரடியாக Wire-ன் மூலம் மின்சாரத் தொகுப்புக்கு விற்றால், ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும். அதே பேட்டரியில் சேமித்து Highway Lights, Smart Toilets, Tollgate Counter போன்றவற்றின் பயன்பாட்டுக்கு விற்றால், அதிலும் பல கோடி ரூபாய் வரை வருமானம் வரும்!
(இன்னும் காண்போம்)