
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

இந்த இதழில் நான் சொல்லப்போவது அனைத்துமே விவசாயம் சார்ந்தவை. தருமபுரியில் சிறுதானியங்கள், தக்காளி, மரவள்ளிக்கிழங்கு, பருத்தி போன்றவை விளைகின்றன. இவற்றில் சிறுதானியத்துக்கு, திருவண்ணாமலை அத்தியாயத்திலேயே ‘சிறுதானிய தோசை மாவு’ ஆலோசனையை விரிவாகச் சொல்லிவிட்டேன். தருமபுரி மக்கள் அதைப் படித்துப் பார்த்து தேவைப்படும் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பருத்தியைப் பொறுத்தவரை சிறிய அளவிலேயே தருமபுரியில் விளைகிறது. வருடத்துக்கு 20+ டன். ஆனால், தக்காளியும் மரவள்ளிக்கிழங்கும் தருமபுரியின் பெரும்பகுதி விவசாயத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. தக்காளி பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம் பகுதிகளில் கொள்ளையாக விளைகிறது. மரவள்ளிக்கிழங்கு அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் அதிகமாக விளைகிறது.

முதலில், தக்காளியைப் பார்ப்போம். மொத்தமாக 10,000 ஏக்கர் விளைச்சல்! ஒவ்வொரு நாளும் பாலக்கோடு மார்க்கெட்டுக்கு மட்டும் 100 டன் தக்காளியை விவசாயிகள் கொண்டுவருகிறார்கள். இங்கிருந்துதான் சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர் ஆகிய பகுதிகளுக்குத் தக்காளி ஏற்றுமதியாகிறது. இதை வைத்துப் பார்த்தால், தமிழர்கள் உண்ணும் 100 கிராம் தக்காளியில் 90 கிராம் தருமபுரி தக்காளிதான்! ஆனால், தக்காளி எப்போதுமே நிலையில்லாத விலைகொண்ட விளைபொருள். ஒரு மாதம் கிலோ 5 ரூபாய்க்கும் விற்கும். இன்னொரு மாதம் கிலோ 100 ருபாய்க்கும் விற்கும். இப்படியொரு சூழலில், தருமபுரி தக்காளி விவசாயிகளால் நல்ல வருமானத்தை எப்போதுமே பெற முடிந்ததில்லை. என்னிடம் பேசிய தருமபுரி விவசாயிகளில் சிலர், ஒரு தக்காளி பதப்படுத்தும் நிலையத்தை பாலக்கோடு வட்டாரத்தில் கேட்டார்கள். நானும் அவர்களின் மனம் வருத்தப்படக் கூடாது என்பதற்காக, “முயல்கிறேன்” என்று மட்டும் சொல்லிவைத்தேன். ஆனால், தக்காளி பதப்படுத்தும் நிலையத்தால் மட்டும் தருமபுரியில் பெரிய பயன் எதுவும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.
தக்காளிக்கு Canned Tomato, Sun-Dried Tomato ஆகிய இரண்டு மதிப்புக்கூட்டு வாய்ப்புகள் இருக்கின்றன. தக்காளி Sauce-ஐ நான் இங்கே எடுக்கவில்லை. ஏனென்றால், அது பழைய கான்செப்ட் என்பது மட்டுமல்லாமல், அதில் புதிய சந்தை வாய்ப்புகளும் இல்லை. ஆனால், Canned Tomato-வுக்கு 11 பில்லியன் டாலர் (90 ஆயிரம் கோடி) அளவுக்கு உலகக்சந்தை இருக்கிறது. Sun-Dried Tomato-வுக்கு 16 பில்லியன் டாலர் (1 லட்சத்து 20 ஆயிரம் கோடி) அளவுக்கு உலகச்சந்தை இருக்கிறது. இந்த இரண்டும் சார்ந்த தொழிற்சாலைகளையும், நிறுவனங்களையும் நாம் பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம் பகுதிகளில் ஏற்படுத்த முடியும். மொத்தமாகப் பல்லாயிரம் பேருக்குத் தொழிற்சாலை வேலைவாய்ப்பும், ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் வருமானமும் எளிதாகப் பெற முடியும். இது ஏதோ மனக்கணக்கு அல்ல. நன்றாகத் தரவுகளையும் களத்தையும் ஆராய்ந்து நான் சொல்லும் மதிக்கணக்கு! சந்தேகம் இருப்பவர்கள், கணக்கு போட்டு சரிபார்த்துக்கொள்ளலாம்.

மரவள்ளிக்கிழங்குக்கு நான் சொல்லப்போகும் மதிப்புக்கூட்டுப் பொருள், Boba Tea! Boba Tea என்பது மரவள்ளிக்கிழங்கிலிருந்து கிடைக்கும் ஸ்டார்ச்சை Boba உருண்டையாக மாற்றி உருவாக்கப்படும் பானம். தருமபுரியில் ஆண்டுக்கு 4,50,000 டன் மரவள்ளிக்கிழங்கு நமக்குக் கிடைக்கிறது. இதை அப்படியே Boba Tea தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்று அமைத்து, Boba Tea Package-களாகச் சந்தைக்குக் கொண்டுவரலாம். ஆனால் Boba Tea ‘ஒரு நாள் பானம்’ என்பதால், Boba உருண்டையையும் Tea-யையும் ஒரே Container-ல் தனித்தனியாக நாம் Pack செய்யவேண்டியது அவசியம். இதற்கு Yogurt Parfait Packing மாடல் நல்ல உதாரணமாக இருக்கும். Yogurt Parfait Container-ல் மேலே Granola, கீழே Yogurt எனத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, Pack செய்யப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் Package-ஐ வாங்கிய பிறகு இரண்டையும் ஒன்றாகக் கலந்து உண்பார்கள். இதேபோலத்தான், நாம் Boba Tea Package-ல் மேலே Boba, கீழே Tea-யை Pack செய்து விற்பனைக்குக் கொண்டுவர வேண்டும். உலக அளவில் Boba Tea-க்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் சந்தை இருக்கிறது. 1 சதவிகிதம் நாம் ஏற்றுமதி செய்தாலே ஆண்டுக்கு 1,800 கோடி ரூபாய் வருமானம் பெற முடியும்.


இத்துடன் ‘கனவு தருமபுரி’யை முடிக்கிறேன் நண்பர்களே! முதலில் தருமபுரி எனக்கு மிக வளமான மாவட்டமாகவே தெரிந்தது. ‘ஆய்வு வேலைகள் பெரிதாக இருக்காது’ என்றே நினைத்தேன். மாம்பழம், கிரானைட், ராகி என நிறைய வளங்கள் பிரமாண்டமாக என் கண்ணுக்குத் தெரிந்தன. ஆனால், உள்ளே புகுந்ததும்தான் அத்தனையும் கிருஷ்ணகிரியில் மையம்கொண்டிருப்பது எனக்குப் புரியவந்தது. கிருஷ்ணகிரியைக் கழித்த தருமபுரி நிச்சயம் மிக பலவீனமான மாவட்டம்!
என்னிடம் உரையாடிய தருமபுரி பிரமுகர்களுமே, ‘ஒகேனக்கல்’ என்ற வார்த்தையையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் ‘ஒகேனக்கலைத் தவிர்த்து இங்கே எதுவுமே இல்லையா?’ என்று எனக்கே தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஆனாலும், நம்பிக்கை இழக்காமல் இருந்தேன். என் அணியினரை அழைத்து, “சென்ற மாவட்டங்களுக்கு வளங்கள் இருந்தன, வாய்ப்புகளை மட்டும் கண்டுபிடித்தோம். ஆனால், தருமபுரிக்கு வளங்களையும் சேர்த்தே நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும்” என்று சொன்னேன். அவர்கள் சூழலைப் புரிந்துகொண்டு கூடுதல் முனைப்போடு களம் கண்டார்கள். தரவுகளையும் தகவல்களையும் இரவு பகல் பார்க்காமல் ஆராய்ந்தார்கள். அதன் பலனையே நீங்கள் ஐந்து அத்தியாயங்களில் படித்தீர்கள்.



இனி தருமபுரி என்றால் ‘களி - புளி - கம்பளி’ அல்ல, ‘தொழில் - வருமானம் - வளர்ச்சி’ என்ற நிலை விரைவில் ஏற்படும். அதற்கான விதையை நாங்கள் விதைத்தோம் என்பதில் பெருமகிழ்ச்சி!
(இன்னும் காண்போம்)
நம் அடுத்த கனவு ஓசூர்