சேலம், தலைவாசல் அருகே நாவலூர் கிராமத்தில் ராமச்சந்திரன் - சாரதா தம்பதியர் 40 வருடங்களாகத் தங்களின் குடும்பத்துடன் வசித்துவருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமச்சந்திரன் இறந்துபோனதால் வருமானத்துக்கு வேறு வழியில்லாமல் அவரின் மனைவி சாராதா, தனது வீட்டின் பக்கத்தில், ஒரு சின்னக் கொட்டாய் போட்டு டீக்கடை ஆரம்பித்திருக்கிறார். அந்த இடமும், இவர்கள் வசிக்கும் இடமும் அரசு புறம்போக்கு இடத்தில் இருந்துவருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் சாரதா, கடையின் கொட்டாயைப் பிரித்துவிட்டு ஷீட் கொட்டாய் போட முடிவுசெய்திருக்கிறார்.
அப்போது நாவலூர் கிராம தி.மு.க கிளை நிர்வாகிகளான குணசேகரன், இந்திரஜித், அருணாசலம், சுப்பிரமணி, ஜெயராமன், ஆறுமுகம், பிச்சப்பிள்ளை, கருப்பையா போன்றவர்கள், `கடையை இங்கு கட்டக் கூடாது. இது எங்களுக்குச் சொந்தமான இடம். நாங்கள் கட்சி அலுவலகம் கட்டப்போகிறோம்’ என்று தாங்கள் எடுத்துவந்த தி.மு.க கொடிக்கம்பத்தை கடை இருந்த இடத்துக்குள் நட்டிருக்கின்றனர். மேலும், இதைத் தடுக்கப்போன சாரதாவைக் கீழே தள்ளிவிட்டுத் தாக்கியதுடன், அசிங்கமான வார்த்தகளால் திட்டியதாகச் சொல்லப்படுகிறது.

இந்த விவகாரத்தில் காயமடைந்த சாரதா, புகார் கொடுத்தும் சம்பந்தப்பட்ட நபர்கள்மீது காவல்துறை தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரி ராதா, கிராம நிர்வாக அதிகாரி வினோதா ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று கொடிக்கம்பத்தை அகற்றியதுடன், ``இந்த இடம் அரசுக்குச் சொந்தமான இடம். யாரும் இதில் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது” என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சாரதாவிடம் பேசியபோது, “இந்த இடம் நானும் என் கணவரும் கஷ்டப்பட்டு வாங்குனது. இது அரசாங்க இடமா இருந்தாலும், இந்த ஊருக்கு நாங்க இங்க குடியிருக்க, பணம் கொடுத்துத்தான் இருந்து வந்தோம். இப்போ என் கணவர் இறந்த பிறகு ஒண்டிக்கட்டையா இருந்துக்கிட்டு இருக்கேன். எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை. அதனால வயித்துப் பொழப்புக்கு என்ன பண்றதுன்னு தெரியாமதான் வீட்டை ஒட்டி டீக்கடை ஆரம்பிச்சேன். ஆனா, அதைக்கூட பொறுக்காம இந்த தி.மு.க-வைச் சேர்ந்த குணசேகரன் என்னை அடிச்சு, என்னைக் கடையைப் போட விடாம என் வயித்துல அடிச்சுட்டாரு. கேட்டா இந்த இடத்துல கட்சி அலுவலகம் கட்டப்போறதாச் சொல்றாரு.
ஒருத்தவங்க வாழ்வாதாரத்தை அழிச்சுதான் கட்சி அலுவலகம் கட்டுவாங்களா... இது எந்தவிதத்துல நியாயம்... நான் புகார் கொடுத்தாலும் யாரும் எடுத்துக்க மாட்டேங்கிறாங்க. அதிகாரிங்க அவங்க சொல்றதைத்தான் கேட்குறாங்க” என்றார்.

இது குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமாரிடம் பேசியபோது, ``பாதிக்கப்பட்ட பெண் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. சம்பந்தப்பட்ட நபர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.