எங்களை பா.ஜ.க-வினராக பார்ப்பது முதல்வர்களின் தவறு! - விளக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன்

மக்கள் பிரதிநிதிகள், பாதிக்கப்படுபவர்களை முறையாகச் சந்தித்தால் அவர்கள் ஏன் என்னை நோக்கி வரப்போகிறார்கள்...
‘‘அரசியல்வாதியாக இருந்த போது, சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். தற்போது கவர்னர் பதவி வகிக்கும்போதும் விமர்சிக்கப்படுகிறேன்’’ இப்படிச் சமீபத்தில் சிலபல ஸ்டேட்மென்ட்டு களை வெளியிட்டு பரபரப்பைப் பற்றவைத்திருக் கிறார், தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன். தெலங்கானா ஆளுநராக நான்காவது ஆண்டில் அடியெடுத்துவைக்கும் நிலையில், அந்த மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் மீது எக்கச்சக்கமான புகார்களை அடுக்கியிருக்கிறார் தமிழிசை. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...
“ஏன் உங்களிடம் இவ்வளவு அதிருப்தி மனநிலை... தெலங்கானா முதல்வர்மீது ஏன் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறீர்கள்?’’
``ஆளுநர் என்பதைத் தாண்டி, கடந்த மூன்று ஆண்டுகளில் தெலங் கானா மக்களுக்காகப் பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறேன். ஆறு பழங்குடி கிராமங்களைத் தத்தெடுத் திருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகள்கூட சென்று பார்க்காத நல்லமலா காடுகளிலெல் லாம் கடுமையான சிரமத்துக்கிடையில் மருத்துவ முகாம்களை நடத்தியிருக் கிறோம். ராஜ்பவனில் மகிளா தர்பார் நடத்தி பெண்களுக்கான பிரச்னை களைக் கேட்டறிந்திருக்கிறேன். இப் படி, தெலங்கானா மக்களுக்காக நான் செய்த ஆக்கபூர்வமான பணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
அதேபோல, அரசு சார்ந்த நடவடிக்கைகளில் நான் எந்த முட்டுக்கட்டையும் போட்டதில்லை. ஆனால், தெலங்கானா முதல்வர் பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும் என முடிவுக்கு வந்துவிட்டார். அதனால், கவர்னரை மதிக்கக் கூடாது என்கிற முடிவுக்கு வந்து, கவர்னர் உரையில்லா மல் சபை நடத்துவது, குடியரசு தின விழாவுக்குக் கொடியேற்றவிடாமல் செய்தது, நான் செல்லும் இடங்களில் புரோட்டோகால் பின்பற்றாதது, மலைக்கிராமங்களுக்குச் செல்ல ஹெலிகாப்டர் கொடுக்காதது என கவர்னரான என்னை மிக மோசமாக நடத்திவருகிறார். மக்களுக்காக அர்ப்பணிப்போடு பணியாற்றும் என்னை அவமதிப்பதை, மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டியிருக்கிறது.’’
``மக்கள் சந்திப்பு, புகார்ப் பெட்டி வைப்பது என ஆளுநரின் எல்லையைத் தாண்டி அரசாங்க விஷயங்களில் நீங்கள் தலையிடுகிறீர்கள் என்று விமர்சனம் வைக்கப்படுகிறதே?’’
``மக்கள் பிரதிநிதிகள், பாதிக்கப்படுபவர்களை முறையாகச் சந்தித்தால் அவர்கள் ஏன் என்னை நோக்கி வரப்போகிறார்கள்... ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்கச் செல்பவர்களை மறித்து, வலுக்கட்டாயமாக ‘என்னை வந்து சந்தியுங்கள்’ என்று நான் சொல்லவில்லையே... கவர்னர் அலுவலகத்தால் முடிந்ததைச் செய் கிறேன். முடியாததை, முறையாக அரசாங்கத் துக்குத்தானே அனுப்புகிறேன்... ‘நாங்களும் செய்ய மாட்டோம், கவர்னரும் செய்யக் கூடாது’ என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்... தவிர, மக்களைச் சந்திக்கக் கூடாது, புகார்ப் பெட்டி வைக்கக் கூடாது என்றெல்லாம் அரசமைப் புச் சட்டத்தில் எந்த இடத்திலும் சொல்லவில்லையே?’’

``நீங்கள் பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர்போலச் செயல்படுகிறீர்கள் என்கிறார்களே?’’
``மிகவும் தவறான கருத்து. என்னை ஓர் அரசியல் தலைவர்போல பா.ஜ.க-வுடன் தொடர்புபடுத்திப் பேசுகிறார்கள். நான் எந்த இடத்திலும் அப்படி நடந்துகொள்ளவில்லை. அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும்தான் நான் ஆளுநர் மாளிகையில் சந்தித்துவருகிறேன். அது போலவே பா.ஜ.க-வினரும் வந்திருக்கிறார்கள். கடந்தகாலத்தில் நான் பா.ஜ.க-வில் இருந்ததை வைத்துக்கொண்டு அப்படிப் பேசுகிறார்கள். `அமித் ஷா சொல்லிக்கொடுத்தபடி பேசுகிறார்’, `பிரதமர் சொல்லிக்கொடுத்துப் பேசுகிறார்’ என்று சொல்கிறார்கள். நாங்கள் சுய அறிவு உடையவர்கள், தன்னிச்சையாகச் செயல்படும் ஆற்றல் எங்களுக்கு உண்டு.’’
``பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் மட்டும் ஆளுநர்கள் இவ்வளவு ஆர்வமாக வேலை செய்வது சந்தேகத்தைக் கிளப்புகிறதே?’’
``கோவா கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை ஒவ்வோர் ஊராகச் சென்று மக்களைச் சந்திக்கிறார். உ.பி கவர்னர் ஆனந்தி பென் படேல் டி.பி., கேன்சர் போன்ற விஷயங்களைக் கையிலெடுத்து மக்களுக் காகப் பணியாற்றிவருகிறார். இந்த இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.க ஆளுங்கட்சிதானே... சரி விடுங்கள். நான் தெலங்கானா முதல்வருக்கு எதிராகச் செயல்படுகிறேன் என்றே வைத்துக் கொள்ளட்டும். அதற்காக, அரசியலமைப்பின்படி, கொடியேற்றுவது, சட்டசபையில் உரையாற்றுவது என கவர்னருக்குக் கிடைக்கவேண்டிய அடிப் படை உரிமையை, மரியாதையைக்கூட கொடுக்க மறுப்பது சரியா... முதல்வர்கள் இப்படி நடந்து கொள்வதை ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை?’’
``பா.ஜ.க ஆளாத மாநிலங்களில், பா.ஜ.க-வை வளர்ப்பதற்காகவே ஆளுங்கட்சியை ஆளுநர்கள் டேமேஜ் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டப்படுகிறதே?’’
``எங்களை பா.ஜ.க-வினராகப் பார்ப்பது முதல் வர்களின் தவறு. உண்மையைச் சொல்லப்போனால், பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் கவர்னர்கள்தான் மாநில முதல்வர்களால் அவமதிக்கப்படுகிறார்கள்.’’
``பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் அரசின் கொள்கைகளுக்கு எதிராகப் பேசுவதில்லை. அரசின் செயல் பாடுகளை விமர்சிப்பதில்லை. ஆனால், மற்ற மாநிலங்களில் அது நடக்கிறதே?’’
``மாநில அரசின் கொள்கைகளை அப்படியே பேச வேண்டும் என்று இல்லை. கவர்னர்களுக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறதுதானே... என்னைப் பொறுத்தவரை புதிய கல்விக் கொள்கை சரியென்று சொல்வேன். நாங்கள் சொல்லும் கருத்துகளைப் பின்பற்றட்டும்... இல்லையா, ‘பின்பற்ற முடியாது’ என்று சொல்லட்டும். ஆனால், நாங்கள் கருத்து சொல்லவே கூடாது என்று சொல்வது எப்படிச் சரியாகும்?’’
``தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தில், புதுச்சேரியின் சார்பாக நீங்கள் கலந்துகொண்டது விமர்சிக்கப்படுகிறதே?’’
``துணைநிலை ஆளுநருக்கான அதிகாரம் என்பது மாநில கவர்னர்களின் அதிகாரத்தோடு முற்றிலும் வேறுபட்டது என்பது உலகத்துக்கே தெரியும். அந்தவகையில், தென்மாநில கவுன்சில் கூட்டத்துக்கு புதுச்சேரி முதல்வர், கவர்னர் இருவருக்குமே அழைப்பு வந்தது. முதல்வர் வரவில்லை என்று சொல்லிவிட்டார்; நான் கலந்து கொண்டேன். அது தவறாகச் சித்திரிக்கப்பட்டு செய்திகள் வெளியாகின. கடந்த காலத்தில், நாராயணசாமியின் பல்வேறு செயல்பாடுகளுக்கு கிரண் பேடி முட்டுக்கட்டை போட்டதால், அங்கு அரசாங்கமே நடக்கவில்லை. ஆனால், நான் பகுத்தாராய்ந்து மக்களுக்குப் பயன் தரக்கூடிய விஷயங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைக் கொடுத்துத்தான்வருகிறேன். ஆனால் அரசியல் காரணங்களுக்காக என்னைச் சிலர் விமர்சித்துவருகின்றனர்!’’